Home இலங்கை கல்வியில் கடைநிலை – குடியில் முன் நிலை – இனப்பரம்பலில் வீழ்ச்சி – களியாட்டங்களில் நாட்டம்!!!

கல்வியில் கடைநிலை – குடியில் முன் நிலை – இனப்பரம்பலில் வீழ்ச்சி – களியாட்டங்களில் நாட்டம்!!!

by admin
மட்டக்களப்பினதும்  கிழக்கினதும் சோகம்…. குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..

கல்வி நிலையில் கடைசி நிலைக்கு வந்துவிட்டோம் என்றும் இனப்பரம்பலிலும் வீழ்ச்சியே காணப்படுகிறது என்றும்   மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் மா.உதயகுமார் கவலை தெரிவித்துள்ளார்.  மட்டக்களப்பு செட்டிபாளையம் ஸ்ரீலஸ்ரீ கண்ணகை அம்மன் ஆலயத்தில் நடாத்தப்பட்ட வருடாந்த புலமைப் பரிசில்கள் வழங்குதலும், கௌரவிப்பு நிகழ்வில்  முதன்மை அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார்.

கல்வித்துறைக்கு பல மூலதனங்களைப் பயன்படுத்தியபோதும் மாவட்டமும் சரி கிழக்கு மாகாணமும் சரி  பின்னடைவிலேயே இருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். இலங்கையில் மட்டகளப்பு மாவட்டம் 24ஆவது இடத்திலும் இலங்கையில் உள்ள மாகாணங்களில் கிழக்கு மாகாணம் கல்வியில் கிழக்கு 8ஆவது இடத்திலும் இருப்பதாகவும்  அவர் தெரிவித்துள்ளார்.

சமூகத்திற்கு முதலீடாக வருகின்றவர்கள், பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவானவர்கள், சமூகத்திற்கு சுமையாக வருகின்றவர்கள், ஓரிரு புள்ளிகள் வித்தியாசத்தில் பல்கலைக்கழகங்களுக்குத் தெரிவு செய்யப்படாமல் விடுபடுபவர்கள். இத்தகைய மாணவர்கள் குறித்து கவனம் கொண்டு அவர்களுக்காக தொழிற்பயிற்சி மையங்கள் உருவாக்கப்படல் வேண்டும் என்றும் கல்வியில் பின்தங்கி இருப்பதற்கு வறுமை ஒரு காரணம் என்றும் அவர் கூறினார்.

இதேவேளை இலங்கையில் மதுபானத்திற்கு அதிகளவு செலவு செய்கின்ற மாவட்டமாக மட்டக்களப்பு காணப்படுவதாகவும் அவர் கூறியுள்ளார். அத்துடன். கார், மோட்டார் சைக்கிள் போன்றவற்றிற்கும் அதிகளவு இந்த மாவட்டத்தில் செலவு செய்யப்படுகின்றது. ஆடைகளுக்கு அதிகளவு செலவுகளையும், ஆலயங்களில் வீண் களியாட்டங்களுக்கு அதிக செலவுகளை மேற்கொள்ளும் நிலமைகளும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார்.

பாரம்பரிய கலாசாரங்களுக்கூடாக மிகப்பரிய பொருளாதாரத்தை இழந்து கொண்டிருப்பதாகவும் இந்த நிதி வேறொருவருக்குத்தான் போய் சென்றடைவதாகவும் சுட்டிக்காட்டிய அவர் தமிழ்ச் சமூகத்தின் இனப்பரம்பலும் வீழ்ச்சியடைந்து வருவதாகவும் கூறினார். உதாரணமாக கிழக்கு மாகாணத்தில், 400 குடும்பங்கள் உள்ள கட்டைபறிச்சான் எனும் கிராமத்தில் கடந்த வருடம் 10 பிள்ளைகள் மாத்திரமே முதலாம் தரத்திற்குச் சேர்த்திருப்பதாக கூறிய அவர் தமிழ் சமூகத்தில் இனப்பரம்பலை அதிகரிக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளதாகவும் மேலும் தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More