Home இலங்கை கோயில் பிணக்கு – மனித உரிமை ஆணைக்குழுவிடம் நீதி கேட்ட நற்பிட்டிமுனை கிராம மக்கள்

கோயில் பிணக்கு – மனித உரிமை ஆணைக்குழுவிடம் நீதி கேட்ட நற்பிட்டிமுனை கிராம மக்கள்

by admin

கோயில் ஒன்றில் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து நீதி கேட்டு நற்பிட்டிமுனை கிராம மக்கள் மனித உரிமை ஆணைக்குழுவில் தஞ்சமடைந்துள்ளனர்.

அம்பாறை மாவட்டம் கல்முனை மாநகர சபை எல்லைக்குட்பட்ட கோயில் ஒன்றில் கடந்த மாதம் ஏற்பட்ட பிணக்கு ஒன்றினை அடுத்து இரு ஊர் மக்கள் மோதல் சம்பவத்தில் ஈடுபட்டிருந்ததுடன் பலரும் காயமடைந்த நிலையில் அப்பகுதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தனர்.

இம்மோதல் காரணமாக கல்முனை மாநகர சபை எல்லைக்குப்பட்ட நற்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு என்ற இரு ஊர்கள் பிளவு பட்டதுடன் சமூக ஊடகங்களில் பல்வேறு விமர்சனங்களும் வெளியாகி இருந்தன.

இதனை அடுத்து குறித்த கோயில் மோதலில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்பட்டு  பலரும் கைதாகி சிலர் விளக்கமறிலில்  வைக்கப்பட்டுள்ளதுடன் இன்னும் பலர் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் குறித்த மோதலில் ஈடுபட்டவர்கள் என தெரிவிக்கப்பட்டவர்கள் தற்போது தலைமறைவாகி உள்ள நிலையில் கல்முனை காவல்துறையினரும் அவர்களை கைது செய்வதற்காக  நடவடிக்கை எடுத்துள்ளனர்.இது  தவிர  மனித உரிமை ஆணைக்குழுவும் குறித்த மோதலில்  காயமடைந்து  வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டவர்களிடம் விசாரணைகளை   முன்னெடுத்திருந்தது.

இவ்வாறான நிலையில் இக்கோயிலில் ஏற்பட்ட மோதலில் எதிரொலியாக தமக்கு நீதியை பெறுவதில்  பாரபட்சம் காட்டப்படுவதாக கூறி நற்பிட்டிமுனை  மக்கள் இன்று(27) நற்பிட்டிமுனை பகுதியில் அமைந்துள்ள இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்தில் தஞ்சமடைந்து  கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸிடம் மகஜர்  ஒன்றினை கையளித்துள்ளனர்.

இம்மகஜரில் வருடாவருடம் நடைபெறும் காளி கோயில் சடங்கில் ஏற்பட்ட மோதலில் காயமடைந்து எங்கள் தரப்பினரும் உள்ளனர்.எனினும் இதுவரை அவர்களுக்கான நீதி பெற்றுக்கொடுக்கப்படவில்லை.முறைப்பாடு மேற்கொள்ளப்பட்டும் காவல்துறை தரப்பில் எமக்கு தீர்வுகள் கிடைக்கப்பெறவில்லை. இதற்கு மாறாக எமது இளைஞர்கள் யுவதிகள் என கைது செய்யப்பட்டு சிறைக்கு அனுப்பும் சூழல் ஏற்பட்டிருக்கின்றது.குறிப்பாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் என்பவர் எங்களுக்கு நீதி கிடைப்பதில்  தடையாக இருக்கின்றார்.எனவே இவ்விடயத்தில் உரிய நடவடிக்கை  எடுக்குமாறு கேட்டுக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் கல்முனை  பிராந்திய இணைப்பாளர் அப்துல் அஸீஸ் இவ்விடயம் குறித்து நடவடிக்கை ஏலவே மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் எனவே சமூகப்பிரச்சினைகளை இரு சம்பந்தப்பட்ட தரப்பினரும் பேச்சுவார்த்தை மூலம் தீர்வுகளை பெறுவதற்கு முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என கேட்டுக்கொண்டார்.

பின்னர்  இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு காரியாலயத்திற்கு ஊர்வலகமாக  சென்ற நற்பிட்டிமுனை பொதுமக்கள் ஊடகங்களுக்கும் கருத்துக்களை முன்வைத்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More