Home இலக்கியம் பாலஸ்தீனம் ஒரு நாடு மட்டுமல்ல!

பாலஸ்தீனம் ஒரு நாடு மட்டுமல்ல!

by admin

பாலஸ்தீனம் ஒரு நாடு மட்டுமல்ல
பாலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஓர் அடையாளம்
அது ஓர் ஆதர்சம்
அது ஒரு படிப்பினை

அதன் வாழ்க்கை
மீட்கப்பட வேண்டியது
சாதி மதம் பால் இனம்
எனப் பிரிவினைகள் கடந்து
ஏற்றத்தாழ்வுகள் நீங்கி
மீட்கப்பட வேண்டியது
மீளுருவாக்கப்பட வேண்டியது

இடிபாடுகள் இடையிலும் இடிபாடுகள் மீதும்
வாயிலும் வயிற்றிலும் அடித்துப் புலம்பும் பெண்கள்
கொல்லப்பட்டவர்களின் உடலங்களுடன்
குமுறிச் செல்லும் ஆண்கள்

இறந்தும் காயப்பட்டும்
குண்டு வீச்சின் புழுதி படிந்த உடலுடனும்
முகங்களுடனும்
அச்சத்தில் உறைந்து போயும்
அதிர்ச்சியில் உடல் பதறியபடியும் சிறுவர்

உலகச் செய்திகளில்
அச்சிலும் மின் ஊடகங்களிலும்
எனது சிறுபராயம் முதலான பதிவுகள்
முடிவுக்கு வரவேண்டிய துயரங்கள்
தொடரப்படவே கூடாத அவலங்கள்

எனது வாழ்வின் நாற்பது வருடங்கள்
அழிவிலும் அனர்த்தத்திலும்
இடப்பெயர்விலும் அகதி வாழ்விலும்
அச்சத்திலும் கூனிக் குறுகிப் போதலிலும்
இன்னும் மீள முடியாத மன அழுத்தங்களிலும்
உடலிலும் உள்ளத்திலும் மீள முடியா
சொல்லி விளங்காத
துன்பத்திலும் துயரத்திலும்

இனியும் வேண்டாம் எவருக்கும் வேண்டாம்
இங்கும் வேண்டாம் எங்கும் வேண்டாம்

பலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஒரு அடையாளம்
அது ஒரு ஆதர்சம்
அது ஒரு படிப்பினை

அதன் வாழ்க்கை மீட்கப்பட வேண்டியது
உலக வரைபடத்தின்
அறிந்தும் அறியாததுமான நாடுகளில் இருந்து
புவியியற் பரப்புகளில் இருந்து
ஒவ்வொரு பாலஸ்தீனமும் மீட்கப்பட வேண்டியது

பாதுகாப்பிற்காகக் கொல்லுபவர்கள்
சித்திரவதை செய்பவர்கள் அச்சுறுத்துபவர்கள்
அச்சமூட்டுபவர்களின்
அதிகாரம்
மனிதத்திற்கு ஆபத்தானது
மனிதர்களுக்கு அழிவையே தருவது

பாலஸ்தீனம் ஒரு நாடு
மட்டுமல்ல
அது ஒரு அடையாளம்
அது ஒரு ஆதர்சம்
அது ஒரு படிப்பினை

சி.ஜெயசங்கர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More