Home இலங்கை பிரபாகரனை அமிர்தலிங்கம் ஊக்கப்படுத்தினார்

பிரபாகரனை அமிர்தலிங்கம் ஊக்கப்படுத்தினார்

by admin


தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரனும் தமிழ் அரசியல் தலைவர் அமிர்தலிங்கமும் சந்தித்துக் கொண்டதாகவும் பிரபாகரனை அமீர் ஊக்கப்படுத்தியதாகவும்   இலங்கைத் தமிழரசுக் கட்சித் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.

அத்துடன் தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் நிழலைக்கூடக் காணாதவர்களே இப்போது  அவரைப் பற்றி அதிகமாகப் பேசுவதாகவும் தம்மால் புலிகளின் வரலாற்றை எழுத முடியும் என்றும் குறிப்பிட்டார்.

வலி.மேற்குப் பிரதேச சபை மண்டபபத்தில் நேற்று இடம்பெற்ற அமிர்தலிங்கத்தின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் அமிர்தலிங்கத்தின் போராட்ட வரலாற்றைக் கூறிய மாவை சேனாதிராஜா, அவருடன் சேர்ந்து இயங்கிய சம்பவங்களையும் பதிவு செய்தார்.

அமிர்தலிங்கம் இந்தியாவில் இருந்தபோது அனுப்பிய கடிதம் ஒன்று தவறாக மொழிபெயர்க்கப்பட்டதால் சிறைசெல்ல நேரிட்டதாகவும் அது தொடர்பில் மயிலிட்டி துறைமுகத்துக்கான நிகழ்வில் கலந்து கொண்ட அரச தலைவரிடமும் தாம் தெரிவித்ததாகவும் நினைவுபடுத்தினார்.

அத்துடன் அமீர்தலிங்கம், பிரபாகரனை சந்தித்தார் என்பதும் அவர் எவ்வளவு தூரம் அவர்களை நேசித்தார் என்பதையும், அவர்களை ஊக்கப்படுத்தினார் என்பதையும் தமக்கு நன்கு தெரியும் என்றும் மாவை குறிப்பிட்டார்.

அவர் இந்தியாவில் இருக்கும்போதும் புலிகளை ஊக்கப்படுத்தியதாகவும் ஆனால் காலம் தவறாகக் கையாளப்பட்டிருப்பதாகவும் அவ்வாறு நடக்காத பட்சத்தில், இன்றுவரையும் பிரபாகரன், புலிகள் இயக்கத்தை கொண்டு நடத்தியிருக்ககூடிய சந்தர்ப்பங்கள் இருந்திருக்கும் என்றும் இது பலருக்கு தெரியாதபோதும் தமக்குத் தெரியும் என்றும் மாவை கூறினார்.

அத்துடன் தன்னால் புலிகளின் வராலாற்றை எழுதமுடியும் என்றும் எல்லாவற்றையும் எழுதுவது கடினம் என்றும் தெரிவித்த அவர், புலிகள் இயக்கத்துடன் தாம் எப்படி இயங்கினோம் என்பதை இப்போது சொல்லப்போனால் நாடு தாங்கிக்கொள்ளுமோ தெரியாது என்றும் ஆனாலும் சொல்லித்தான் ஆகவேண்டும் என்றும் அவர் கூறினார்.சென்ற மாதத்திலே பழநெடுமாறனைச் சந்தித்தபோது, அவரும் அந்த விடயங்களை எழுதித்தான் ஆகவேண்டும் என்று வற்புறுத்தியதாகவும் ஆனபடியால் வரலாறுகளைத் திரித்து மறந்து குற்றஞ்சுமத்தி, பிரபாகரனுடைய நிழலைக்கூடத் தரிசிக்காதவர்கள், தெரியாதவர்கள், காணாதவர்கள் எல்லாம் இப்போது அதிகமாகப்பேசுகிறார்கள் என்றும் மாவை சேனாதிராஜா மேலும் தெரிவித்தார்.  #பிரபாகரன் #அமிர்தலிங்கம் #விடுதலைப் புலிகள் #மாவை சேனாதிராஜா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More