Home இலங்கை முக்கொலை நடைபெற்ற இடத்தில் தலைமுடி, இரத்த படிவுகள் காணப்பட்டன

முக்கொலை நடைபெற்ற இடத்தில் தலைமுடி, இரத்த படிவுகள் காணப்பட்டன

by admin

முக்கொலை நடைபெற்ற இடத்தில் இருந்து இரத்த படிவுகள் , தலைமுடி , நைலோன் கயிறு என்பவற்றை மீட்டேன் என யாழ்.காவல்நிலைய தடயவியல் பிரிவு உப காவல்துறை பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியம் அளித்துள்ளார்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மே மாதம் 04ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியில் இடம்பெற்ற முக்கொலை வழக்கு விசாரணை செவ்வாய்க்கிழமை  மதியம் யாழ்.மேல் நீதிமன்றில் நீதிபதி மா. இளஞ்செழியன் முன்பாக விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. அதன் போது இடம்பெற்ற சாட்சி பதிவின் போதே அவ்வாறு சாட்சியம் அளிக்கப்பட்டது.

குறித்த வழக்கின் சாட்சியங்கள் மேலும் குறிப்பிடுகையில்,
இரத்த படிவு, தலைமுடி என்பவற்றை மீட்டேன். 
இக் கொலை சம்பவத்தில் தடயப் பொருள் ஆய்வினை மேற்கொண்ட யாழ்.தடயவியல் பிரிவு உப பொலிஸ் பரிசோதகர் ஜெயவம்ச சாட்சியமளிக்கையில்
நான் அச்சுவேலி ஜே.282 கிராம சேவகர் பிரிவில் இடம்பெற்ற குறித்த முக்கொலை தொடர்பாக தடயப்பொருட்களை சேகரிக்க சென்றிருந்தேன். இக் கொலை சம்பவமானது 2014.05.04ஆம் திகதி அதிகாலை ஒரு மணியளவில் இடம்பெற்றிருந்தது. நான் சென்று சம்பவம் நடந்த இடத்தில் காணப்பட்டிருந்த உடலில் இருந்து வந்த இரத்த படிவுகளையும், இரண்டு இடங்களில் காணப்பட்ட தலைமுடிகளையும் வீட்டின் முற்றத்தில் இருந்த நைலோன் கயிற்றையும் சேகரித்து தடயப்பொருட்களாக இணைத்திருந்தேன்.
 அதன் பின்னர் அவ் தடயப் பொருட்களை அச்சுவேலி பொலிஸ் ஊடாக பிரேத பரிசோதனை நடவடிக்கையின் போதும், பொலிஸாரது புலன் விசாரணையின் போது கைப்பற்றப்பட்ட கத்தியின் இருந்த இரத்த கறையுடனும், இறந்தவரின் உடலில் இருந்த இரத்த மாதிரியுடனும் ஒன்றுக்கொன்று தொடர்புபடுத்தி ஆய்வு செய்வதற்காக மல்லாகம் நீதிவான் நீதிமன்றில் பாரப்படுத்தியிருந்தேன்.
இதன்பின்னர் குறித்த தடயப் பொருட்களை ஜின்டெக் நிறுவனத்திற்கு வழங்க மல்லாகம் நீதிவான் நீதிமன்றானது கட்டளை பிறப்பித்திருந்தது என சாட்சியமளித்திருந்தார்.இதனை தொடர்ந்து குறித்த சாட்சியிடம் எதிரி தரப்பு சட்டத்தரணி குறுக்கு விசாரனை  செய்தார். அதில், முற்றத்தில் கைப்பற்றப்பட்ட நைலோன் கயிறு யாருடையது என உங்களுக்கு தெரியுமா? என குறித்த சாட்சியிடம் சட்டத்தரணி வினவியபோது அதற்கு குறித்த சாட்சி தமக்கு தெரியாது என பதிலளித்தார். இதனை தொடர்ந்து குறித்த சாட்சி வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
முச்சக்கர வண்டியில் இரத்த கறை.
இவரை தொடர்ந்து இவ் வழக்கின் 09சாட்சியாக அணைக்கப்பட்டிருந்த சாட்சியான தடயவியல் பிரிவில் கடமையாற்றிய பொலிஸ் சார்ஜன் சேனவிரட்ண ராஜபக்ஷ சாட்சியமளிக்கையில்,
2014.05.05ஆம் திகதி குறித்த குற்றச் செயல் தொடர்பாக கைப்பற்றப்பட்ட முச்சக்கர வண்டியை பரிசோதனை செய்யுமாறு எனது பிரிவு (சோக்கோ) பொறுப்பதிகாரியால் எனக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தலுக்கு அமைய அதனை பரிசோதிக்க சென்றேன்.
நான் பரிசோதனை செய்ய சென்ற முச்சக்கரவண்டி அச்சுவேலி பொலிஸ் நிலையத்திற்கு அண்மையில் இருந்த வாகன திருத்தகத்தில் (கறாச்சில்) கறுப்பு துணியால் மூடப்பட்டிருந்தது. அதன் நிறம் வெள்ளை அது ரி.வி.எஸ் கம்பனியை சேர்ந்த முச்சக்கரவண்டியாகும்.
குறித்த முச்சக்கரவண்டியை நான் பரிசோதனை செய்து பார்த்த போது அதில் டஸ்போட்டில் சிவப்பு நிற கறை இருந்தது. அது இரத்தம் போன்றதாக காணப்பட்டிருந்தது. அத்துடன் பின் ஆசனத்தில் இடது பக்க முடிவில் இருந்து 25சென்றீமீற்றர் தூரத்தில் இரத்த கறைகள் இரண்டு காணப்பட்டிருந்தது. அவற்றை இலக்கமிட்டு புகைப்படம் எடுத்திருந்தேன். அவ்வாறு சேகரிக்கப்பட்ட இரத்த கறைகளை சான்று பொருளாக அரசாங்க இரசாயன பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பாரம் கொடுக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து குறித்த சாட்சி தாம் பரிசோதனை செய்த முச்சக்கரவண்டியை சுட்டுவிரலால் சுட்டிகாட்டி அடையாளம் காட்டியிருந்தார். இதன்படி குறித்த முச்சக்கரவண்டி சான்றுபொருள் எக்ஸ் என அடையாளமிடப்பட்டது.
இவரது சாட்சியத்தை குறுக்கு விசாரனை செய்த எதிரி தரப்பு சட்டத்தரணி குறித்த தடயப் பொருட்களை நீதிமன்ற கட்டளையூடாகவா அரச இரசாயண பகுப்பாய்வு திணைக்களத்திற்கு பாரம் கொடுத்தீர்கள் என வினவியிருந்தார். இதற்கு குறித்த சாட்சி தாம் மல்லாகம் நீதிவான் நீதிமன்றத்தின் கட்டளையின் பிரகாரமே அரச இரசாயன பகுப்பாய்வுக்கு கொடுத்ததாக தெரிவித்திருந்தார். இதனை தொடர்ந்து இவர் இவ் வழக்கில் இருந்து விடுவிக்கப்பட்டார்.
மேலும் இவ் வழக்கு விசாரணையின் மூன்றாம்கட்ட சாட்சிப் பதிவிற்காக புதன் கிழமை காலை 9 மணிவரை வழக்கை ஒத்திவைக்கவும் அதுவரை குறித்த எதிரியை விளக்கமறியலில் வைக்கவும் யாழ்.மேல் நீதிமன்ற நீதிபதி மா.இளஞ்செழியன் உத்தரவிட்டிருந்தார்.
வழக்கின் பின்னணி.
கடந்த 2014ஆம் ஆண்டு மே மாதம் 04 ஆம் திகதி அச்சுவேலி கதிரிப்பாய் பகுதியை சேர்ந்த மனைவியின் தாயான நி. அருள்நாயகி , மனைவியின் தம்பியான நி. சுபாங்கன் மற்றும் மனைவியின் அக்காவான யசோதரன் மதுஷா ஆகியோரை படுகொலை செய்து, மனைவியான தர்மிகா மற்றும் மனைவியின் அக்காவின் கணவனான யசோதரன் ஆகியோரை படுகொலை செய்யும் நோக்குடன் வெட்டி காயமேற்படுத்தப்பட்டது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More