Home இலங்கை வழக்குகளை இடம் மாற்றுவது தமிழ் பகுதிகளில் இயங்கும் நீதிமன்றங்களை அவமதிப்பதாகும்.

வழக்குகளை இடம் மாற்றுவது தமிழ் பகுதிகளில் இயங்கும் நீதிமன்றங்களை அவமதிப்பதாகும்.

by editortamil

அரச சாட்சிகளுக்கு பாதுகாப்பில்லை என்ற போர்வையில் வழக்குகளை இடம் மாற்றுவது தமிழ் பகுதிகளில் இயங்கும் நீதிமன்றங்களை அவமதிப்பதாகும்.

– தமிழ் சிவில் சமூக அமையம்


தமிழ் அரசியல் கைதிகள் மூவருக்கு எதிராக பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் குற்றச்சாட்டுப் பத்திரம் தாக்கல் செய்யப்பட்டு அவர்களிற்கு எதிரான வழக்குகள் வவுனியா மேல் நீதிமன்றில் நடைபெற்று வந்த நிலையில் அவ்வழக்குகள் கடந்த மாதம் (செப்டெம்பர்) அனுராதபுரத்திற்கு சட்டமா அதிபரால் மாற்றப்பட்டுள்ளன. இதற்கு எதிராக அக்கைதிகள் உணவுத் தவிர்ப்பு போராட்டம் ஒன்றை நடாத்தி வருகின்றனர். அவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகின்றது.

இக்கைதிகளுக்கு எதிராக சாட்சி அளிக்க அடையாளம் காணப்பட்டோர் தமக்கு வவுனியாவில் பாதுகாப்பு இல்லை எனக் கருத்துவதாலேயே அனுராதபுரத்திற்கு வழக்கு மாற்றப்பட்டதாக சட்ட மா அதிபர் தெரிவித்துள்ளார். இந்த விளக்கம் அடிப்படைகளற்றது. யுத்தம் முடிவடைந்து எட்டு வருடங்கள் கடந்த நிலையில் வவுனியாவில் அரச சாட்சிகளை அச்சுறுத்தலுக்குள்ளாக்குவது யார் என்பதை சட்ட மா அதிபர் தெளிவு படுத்த வேண்டும். அரச சாட்சிகளிற்கு வவுனியாவில் பாதுகாப்பு கரிசனை உள்ளது என்பது நம்பமுடியாத ஒரு நொண்டிச்சாட்டு. வடக்கு கிழக்கில் அரசியல் கைதிகளின் வழக்குகள் இடம்பெறக் கூடாது என சட்ட மா அதிபர் திணைக்களம் கருத்துகின்றதா என்ற கேள்வி எழுகின்றது. வவுனியாவில் வழக்கை நடாத்த பாதுகாப்பில்லை என்ற நிலைப்பாடு ஒரு நாடு ஒரே சட்டம் என்ற முழக்கத்தை நகைப்புக்குரியதாக்குகின்றது. இந்த நாட்டின் தமிழ் குடிமக்கள் மட்டுமல்ல தமிழ் பகுதிகளில் உள்ள நீதிமன்றங்களும் இரண்டாம் தரமாக கணிக்கப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகின்றது. சட்ட மா அதிபருக்கு குற்றவியல் வழக்குகளை நடத்துவதில் உள்ள தற்துணிவு அதிகாரங்கள் (prosecutorial discretion) எல்லைகள் அற்றவை அல்ல. சட்ட மா அதிபர் திணைக்களம் சட்டத்தின் ஆட்சியையும் வடக்கு கிழக்கில் நீதிமன்றங்களின் சுயாதீனத்தையும் உறுதிப்படுத்தும் பொறுப்புடையவர்கள். உடனடியாக வவுனியாவிற்கு இவ்வழக்குகளை மீள இடம் மாற்றுமாறு தமிழ் சிவில் சமூக அமையம் சட்ட மா அதிபரை இவ்விடயம் தொடர்பில் வலியுறுத்திக் கேட்டுக்கொள்கிறது.

அனைத்து அரசியல் கைதிகளும் நிபந்தனையின்றி விடுதலை செய்யப்படும் எனும் பொதுவான நிலைப்பாட்டை தமிழ் சிவில் சமூக அமையம் மீள வலியுறுத்துகின்றது.

P.N. சிங்கம்
பொதுச் செயலாளர், தமிழ் சிவில் சமூக அமையம்
குமாரவடிவேல் குருபரன்
பேச்சாளர், தமிழ் சிவில் சமூக அமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More