Home இந்தியா 18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும் – இந்திய உச்ச நீதிமன்றம்:-

18 வயதுக்கு உட்பட்ட பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும் – இந்திய உச்ச நீதிமன்றம்:-

by editortamil

18 வயதை விட குறைவான வயதுடைய பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும் என இந்திய உச்ச நீதிமன்றம் மீண்டும் உறுதிப்படுத்தி உள்ளது.

இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 375-இன் படி 18 வயதை விட குறைவான வயதுடைய பெண்ணுடன் உறவு கொள்வது பாலியல் வல்லுறவாகக் கருதப்படும் எனவும், எனினும் 15 வயதுக்கு மேற்பட்ட சட்ட ரீதியான மனைவியிடம் உறவு கொள்வது குற்றமல்ல என அதில் ஒரு விதிவிலக்கு அளிக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில் ஓர் அரசு சாரா அமைப்பு தொடுத்த வழக்கில், நேற்று தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், அந்த விதிவிலக்கை ரத்து செய்து உத்தரவிட்டுள்ளது.

இந்தத் தீர்ப்பின்படி 18 வயது நிறைவடையாத, திருமண உறவில் உள்ள பெண்கள், கட்டாயமாக உறவு வைத்துக்கொள்ள வற்புறுத்தியதற்காக, சம்பவம் நடந்த ஓராண்டுக்குள், முறைப்பாடு தெரிவிக்க முடியும் என தீர்ப்பில் கூறப்பட்டு உள்ளது.

இந்தியாவில் பெண்களின் திருமண வயது 18-ஆக இருந்தாலும், திருமண உறவில் நிகழும் பாலியல் உறவு குற்றமாகக் கருதப்படவில்லை.
இந்தத் தீர்ப்பு பெண்ணுரிமைக்காகப் போராடும் அமைப்புகளின் வரவேற்பைப் பெற்றுள்ளது.

“பெண்களுக்கு எதிராக வரலாற்றுப் பிழையைத் திருத்தும் இந்தத் தீர்ப்பு ஒரு மைல்கல்லாகும். திருமணத்தை எப்படி பெண்களைப் பாரபட்சமாக நடத்துவதற்கான காரணியாகக் கருத முடியும்?” என இவ்வழக்கின் முக்கிய மனுதாரரான ‘இன்டிபென்டென்ட் தாட்’ எனும் அரசு சாரா அமைப்பின் நிறுவனரான, விக்ரம் ஸ்ரீவத்சவா கேள்வி எழுப்பி உள்ளார்.

இந்த தீர்ப்பு வரவேற்கத்தக்கதாக இருந்தாலும், குழந்தைத் திருமணங்கள் மிகவும் பரவலாக நடக்கும் இந்தியா போன்றதொரு நாட்டில் இந்தத் தீர்ப்பை அமல்படுத்துவது மிகவும் கடினம் எனத் தெரிவித்த அவர்

“நீதிமன்றங்களும், காவல் துறையும் திருமண வயதை எட்டாதவர்களின் படுக்கை அறையைக் கண்காணிக்க முடியாது. பெற்றோர் சம்மதத்துடன் திருமணமான இளம் பெண்களுக்கு, தங்கள் கணவன்மார்களுக்கு எதிராக நீதிமன்றத்தையோ காவல் துறையையோ அணுகுவதற்கு, வழக்கமாகத் துணிச்சல் இருக்காது,” எனக் குறிப்பிட்டுள்ளார்.

வறுமை மற்றும் பட்டினி ஆகியவற்றை ஒழித்தல், எல்லோருக்கும் ஆரம்பிக்க கல்வி வழங்குதல், பாலின சமத்துவத்தை அதிகரித்தல், குழந்தைகளின் உயிரைக் காத்தல், பெண்களின் உடல் நலத்தை முன்னேற்றுதல் போன்ற முன்னேற்றத்திற்கான இலக்குகளை அடைவதற்கு குழந்தைத் திருமணங்கள் மிகப்பெரிய தடையாக இருப்பதாக இந்திய அரசு கூறிவருவது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More