Home இலங்கை “அரசியல் ரீதியாக அல்ல நீதிமன்றம் ஊடாக மாணவர்களின் விடுதலையை அணுகுகின்றோம்”

“அரசியல் ரீதியாக அல்ல நீதிமன்றம் ஊடாக மாணவர்களின் விடுதலையை அணுகுகின்றோம்”

by admin

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர்கள் தொடர்பான முடிவை சட்ட மா அதிபர் திணைக்களம் இந்த வாரத்தில் எடுக்கும் என அரச சட்டவாதி, யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றுக்கு அறிவித்தார். அதனால் மாணவர்கள் இருவர் சார்பில் யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீதான சீராய்வு மனு விசாரணையை வரும் வெள்ளிக்கிழமைக்கு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றம் ஒத்திவைத்தது.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர், செயலாளர் ஆகியோருக்கு எதிரான வழக்கை தள்ளுபடி செய்யும் விண்ணப்பத்தை நிராகரித்து யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் வழங்கிய கட்டளை மீது யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றில் சீராய்வு மனுத் தாக்கல் செய்யப்பட்டது. சீராய்வு மனுவின் இடைக்கால நிவாரணமாக மாணவர்கள் இருவருக்கும் பிணை வழங்குமாறு கோரப்பட்டது. இந்த மனு யாழ்ப்பாணம் மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர் முன்னிலையில் நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.

மனுதாரர்கள் சார்பில் சிரேஸ்ட சட்டத்தரணி வி.திருக்குமரன், சட்டத்தரணிகள் கலாநிதி கு.குருபரன், கே.சுகாஷ், வி.ரிஷிகேசன் உள்ளிட்டோர் முன்னிலையானார்கள். சட்ட மா அதிபர் சார்பில் அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் முன்னிலையானார். சீராய்வு மனு இப்போது அவசியமானதா, அதற்கான காரணம் என்ன? என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகளிடம் மன்று கேள்வி எழுப்பியது.

“மாணவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்கும் கோரிக்கை அரசியல் ரீதியாக சட்ட மா அதிபரிடம் முன்வைக்கப்பட்டுள்ளது. அதனால் இந்த விடயம் அரசியல் ரீதியாகவே பார்க்கப்படுகிறது. அதனால் நீதிமன்றம் ஊடாக மாணவர்கள் இருவரின் விடுதலை தொடர்பில் நாங்கள் அணுகுகின்றோம்” என்று மனுதாரர்களின் சட்டத்தரணிகள் மன்றுரைத்தனர்.

“மாணவர்கள் இருவர் சார்பிலான சட்டத்தரணி என்ற வகையிலேயே சட்ட மா அதிபருக்கு கடிதம் மூலம் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது. அரசியல் ரீதியாக எந்த விண்ணப்பமும் செய்யப்படவில்லை.

சட்ட மா அதிபர் திணைக்களம் நடுநிலையாக நின்று இந்த விடயத்தைக் கையாளும். பெரும்பாலும் இந்த வாரம் இந்த வழக்குத் தொடர்பான முடிவை சட்ட மா திணைக்களம் எடுக்கும்” என்று அரச சட்டவாதி மாதினி விக்னேஸ்வரன் மன்றுரைத்தார்.

இருதரப்பு சமர்ப்பணங்களையும் ஆராய்ந்த மன்று நீதிவான் நீதிமன்றில் மாணவர்கள் இருவருக்கும் எதிரான வழக்கு நாளை மறுதினம் வியாழக்கிழமை விசாரணைக்கு வருகிறது.

ஆகவே அன்றைய தினம் நீதிவான் நீதிமன்றில் எத்தகைய தீர்மானம் எடுக்கப்படுகிறது என்பதைப் பார்த்து மேல் நீதிமன்றம் இந்தச் சீராய்வு மனுவைத் தொடர்வதா? என்ற முடிவுக்கு வரால். அதனால் வரும் வெள்ளிக்கிழமை இந்த வழக்கு விசாரணைக்கு எடுக்கப்படும்” என்று சுட்டிக்காட்டிய மேல் நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமசங்கர், அன்றைய தினம் வரை சீராய்வு மனுவை ஒத்திவைத்தார்.

பின்னணி

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அவர்கள் இருவரும் கோப்பாய் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். அவர்களுக்கு எதிராக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்குமாறும் இராணுவ அதிகாரியால் கோரப்பட்டுள்ளது. மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.

இந்த நிலையில் மாணவர்கள் சார்பில் நகர்த்தல் பத்திரம் அணைத்து இந்த வழக்கு கடந்த 6ஆம் திகதி விசாரணைக்கு எடுக்கப்பட்டது. வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ள முரண்பாடுகளைச் சுட்டிக்காட்டி மாணவர் சார்பில் முன்னிலையான சட்டத்தரணிகள், வழக்கைத் தள்ளுபடி செய்யுமாறு சமர்ப்பணம் செய்தனர்.

மாணவர்கள் சார்பான விண்ணப்பம் மீது கடந்த 8ஆம் திகதி புதன்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றால் கட்டளை வழங்கப்பட்டது. வழக்குத் தாக்கலில் உள்ள தவறுகள் சீர்படுத்தக் கூடியவை என்று வியாக்கியானம் வழங்கி மன்று மாணவர்கள் மீதான பிணை விண்ணப்பத்தையும் நிராகரித்தது.

இதேவேளை, மாணவர்கள் இருவரையும் விடுவிக்கவேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் கடிதம் மூலம் நேரிலும் சட்ட மா அதிபரிடம் வலியுறுத்தியிருந்தார். வழக்கிலிருந்து உடனடியாக விடுவிக்க சாத்தியமில்லை என்ற போதும் அவர்கள் இருவரையும் பிணையில் விடுவிக்க நடவடிக்கை எடுப்பதாக சட்ட மா அதிபர் உறுதியளித்தார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது. #Jaffnauniversitystudent #arrested #jaffnahighcourt

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More