Home இலங்கை அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும்

அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும்

by admin

அலுவலர்கள் தங்கள் கடமைகளைச் சட்டப்படி பக்கச்சார்பின்றிச் செய்ய வேண்டும் எனவும் ஒழுங்காகவுந் திறமையுடனும் செய்ய வேண்டும் எனவும்; அவர்களை அரசியல் ரீதியாக நெருக்குவதானது பாரிய பின்விளைவுகளை ஏற்படுத்தும் எனவும் வடமாகாண முதலமைச்சர் சிவி விக்கினேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

இதை உணர்ந்தே வடமாகாணசபை சுதந்திரமாக இயங்க விடப்பட்டது எனவும் இவ்வாறு விட்டமையானது நிர்வாகிகளான தமக்குக் கிடைத்த பரிசு எனவும் காரியாலய நடவடிக்கைகளில் அரசியல் ரீதியான உள்ளீடுகள் குறைந்து காணப்பட்டதால்த்தான் இந்த விருதுகளைப் பெறமுடிந்தது என நம்புகின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

இன்று இடம்பெற்ற வடமாகாண சபையின் 7 தங்க விருதுகள் பெற்றவர்களுக்கான பாராட்டு விழாவில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

எம்மை வினைத்திறன் அற்றவர்கள் என்று இதுகாறும் விமர்சித்தவர்கள் சென்ற கால நியதிகளை வைத்து விமர்சித்தவர்களே. அதாவது ஒருஅரசியல்வாதி என்றால் தனக்குத் தேவையானவற்றைத் தட்டிப்பறித்து அலுவலர்களைக் கொண்டு நடைமுறைப்படுத்துபவர் என்று அறிமுகப்படுத்தப்பட்டிருந்தது. அவ்வாறு செய்யாதவன் வினைத்திறன் அற்றவன் எனப்பட்டது.

இதனால்த்தான் முன்னைய இராணுவ ஆளுநர் ஒரு இராணுவ ரீதியான நிர்வாகத்தை நடத்தி வந்தார். ஆனால் அவர்களின் முடிவுகளை அவர் பின் வந்த அரசாங்க பொதுச்சேவையில் இருந்து ஓய்வு பெற்ற சிரேஸ்ட அலுவலரான ஆளுநர் ‘பிழை’ என்று அடையாளம் கண்டார். வெளிப்படைத் தன்மையும் ஊழலற்றதுமான ஒரு நிர்வாகம் நடைபெறுவதானால் இராணுவரீதியாக ‘செய் இல்லையேல் செல்’ என்ற ரீதியில் நடைபெற முடியாது. ஒரு விடயத்தைச் செய்ய சட்டம் இடம் கொடுக்கின்றதா என்பதைப் பாராது தான்தோன்றித்தனமாக நடவடிக்கை எடுக்க அந்த முறை வழிவகுத்தது. இதைத்தான் நல்ல நிர்வாகம் என்று எம்முட் பலர் அடையாளங் கண்டு அதனையே நாமும் பின்பற்ற வேண்டும் என்று எதிர்பார்த்தனர்.

இந்த நடைமுறை பிழையென்று அரசியலுக்கும் நிர்வாகத்திற்கும் வந்தவுடனேயே நாங்கள் அடையாளங் காண நேரிட்டது. சில விடயங்களை நாம் அவதானித்தோம். அதாவது நிர்வாக சேவை என்று ஒரு சேவையை உருவாக்கி, அதற்கான பயிற்சி அளித்து, அவர்களுக்கான நடைமுறைகளைச் சட்டதிட்டங்களை வகுத்து, அலுவலர்கள் அவற்றில் இருந்து வழுவநேரிட்டால் உத்தியோக பூர்வமாக மாற்று நடவடிக்கைகள் எவ்வாறு எடுப்பது என்பது போன்ற பல வரையறைகளை அரசாங்கம் வகுத்திருந்தது.

பக்கச் சார்பில்லாமல் தமது கடமைகளைச் சட்டப்படி சிரத்தையுடன் செய்வதையே நிர்வாகச் சட்டமும் கணக்கியல் சட்டமும் எம் அலுவலர்களிடம் எதிர்பார்த்தன. அதைச் செய்யவிடாது அரசியல்வாதிகள் தமக்குப் பக்கச்சார்பாக அலுவலர்கள் நடக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பது பிழையென்றே எமக்குப்பட்டது. ஆகவே அலுவலர்கள் சட்டப்படி சிரத்தையுடன் பக்கச் சார்பின்றிக் கடமையாற்ற நாம் வழியமைத்துக் கொடுத்தோம். அண்மையில் மாற்றலாகிச் சென்ற வவுனியா அரசாங்க அதிபர் புஷ்பகுமார அவர்கள் எனக்கு எழுதிய கடிதத்தில் அரசியல் ரீதியாக நாங்கள் அவர் நிர்வாகத்தில் எந்தவித உள்ளீடல்களிலும் இறங்காததைக் குறிப்பிட்டு தனது நன்றியைத் தெரிவித்தார். எமது அலுவலர்கள் எமது அரசியல் ரீதியான உள்ளீடல்கள் இன்றி தமது கடமைகளைச் செய்தபடியால்த்தான் இந்த விருதுகள் தரப்பட்டுள்ளன என்று நம்புகின்றேன். இதில் உங்கள் ஒவ்வொருவரின் பங்கும் இருக்கின்றது. முக்கியமாக எமது பிரதம கணக்காளரினதும் அவரின் முன்னையவரினதும் பங்குகள் மிக அதிகமாக இருக்கின்றன.

வழிமுறைகளை, வரம்புகளை, வகுக்கப்பட்ட நடைமுறைகளை கருத்தில்க் கொண்டு அரசியல் ரீதியான உள்ளீடல்கள் தமக்கு ஏற்படாது என்ற நம்பிக்கையுடன் எமது அலுவலர்கள் கடமையாற்றியதால்த்தான் இந்த விருதுகளை நாம் பெற்றுள்ளோம் என்று கருதுகின்றேன்.

இது விடயமாக பலர் பாராட்டுகளுக்கு உரியவர்கள். முதலில் எமது முதலமைச்சர் அமைச்சின் அலுவலர்கள் யாவரும். அடுத்து வடமாகாணசுகாதார அமைச்சின் அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.  அதற்கடுத்து பிரதிப்பிரதம செயலாளர் அலுவலக நிதிப்பிரிவின் அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். நான்காவதாகச் சுகாதார திணைக்கள அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஐந்தாவது நீர்பாசனத் திணைக்கள அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள்.
ஆறாவதாக கால்நடை உற்பத்தி மற்றும் கால்நடை சுகாதார திணைக்கள அலுவலர்கள் பாராட்டுக்குரியவர்கள். ஏழாவதாக வீதி அபிவிருத்தித் திணைக்கள அலுவலர்கள் ஆகிய அனைவரும் எமது பாராட்டுக்கு உரியவர்கள்.

அதேபோன்று நிதி முகாமைத்துவத்தில் சிறப்பான பெறுபேறுகளைப் பெற்று பாராட்டுச் சான்றிதழ்களைப் பெற்றுக் கொண்ட நல்லூர்ப் பிரதேச சபை, வவுனியா (தெற்கு) பிரதேசசபை, மன்னார் பிரதேசசபை, பச்சிலைப்பள்ளிப் பிரதேசசபை மற்றும் கரைத்துரைப்பற்றுப் பிரதேசசபை ஆகிய ஐந்து பிரதேசசபைகளுக்கும் எமது பாராட்டுக்கள் உரித்தாகுக.

வடமாகாணத்தின் அமைச்சுக்கள், திணைக்களங்கள் மற்றும் உள்ளுராட்சி மன்றங்களில் 2015ம் ஆண்டில் நிதி நடவடிக்கைகளின் அதியுயர் செயலாற்றுககைளை திறமையாக மேற்கொண்ட அவ்வத் திணைக்களங்களின் அமைச்சுக்களின் தலைவர்கள், கணக்காளர்கள் மற்றும் அனைத்து உத்தியோகத்தர்களையும் மனமாரப் பாராட்டுகின்றேன். உங்களின் முன்மாதிரியில் இனிவரும் காலங்களிலும் இது போன்ற சிறந்த நிதி முகாமைத்துவத்தைப் பேணி மிகச்சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுக் கொள்வதற்கும் பொதுமக்களுக்கு சிறப்பான சேவைகளை வழங்குவதற்கும் அனைத்து அதிகாரிகள் மற்றும் உத்தியோகத்தர்களும் கடுமையாகவும் நேர்மையாகவும் உழைக்க வேண்டும் என இச்சந்தர்ப்பத்தில் கேட்டுக்கொள்கின்றேன். நாட்டின் சகல அமைச்சுக்கள் திணைக்களங்கள் போன்றவற்றினிடையே நீங்கள் சிறந்த பெறுபேறுகளைப் பெற்றுள்ளீர்கள். இவ்வாறான ஒரு உயர் மதிப்பைப் பெற அதியுயர் செயலாற்றுகையை வெளிப்படுத்திய எல்லா நிறுவனங்களுக்கும் அலுவலர்களுக்கும் மீண்டும் ஒருமுறை எனது வாழ்த்துக்களையும் பாராட்டுக்களையும் தெரிவிக்கின்றேன்.

நாங்கள் விருது அளிக்கும் ஒரு நிகழ்ச்சியில் ஒரு வயோதிபர் கலந்துகொண்டார். விருதை நான் வழங்கியதும் அவர் தேம்பித் தேம்பி அழுதார். பின்னர் அவரிடம் ஏன் என்றுகேட்டதும் ‘என்னையும் மதித்து அழைத்து வந்து விருது வழங்கிவிட்டீர்களே. என் வாழ்நாளில் இது மறக்க முடியாதநாள்’ என்றார். நாம் செய்யும் பணிக்கு மதிப்புகிடைக்கும் போது ஏற்படும் மகிழ்ச்சிக்கு எல்லையில்லை. எனவே உங்கள் ஒவ்வொருவரையும் உங்கள் கடமைகளை முறையாகப் பாரபட்சமின்றி வினைத்திறனுடன் தொடர்ந்து செய்யுங்கள் என தெரிவித்தார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More