Home இலங்கை இரணைத்தீவில் நில அளவீட்டுப் பணிகள் ஆரம்பம் – பூநகரி பிரதேச செயலா்

இரணைத்தீவில் நில அளவீட்டுப் பணிகள் ஆரம்பம் – பூநகரி பிரதேச செயலா்

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி பூநகரி பிரதேச செயலர் பிரிவில் உள்ள இரணைதீவில்  காணிகளை அளவீடு செய்வது தொடர்பில் அதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கிடைக்கவில்லை என தெரிவிக்கப்பட்ட நிலையில் கடந்த வியாழக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாக பூநகரிப்பிரதேச செயலாளர் எஸ்.கிருஸ்னேந்திரன் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்டத்தின் பூநகரிப்பிரதேச செயலர் பிரிவின்கீழ் உள்ள மிகவும் கடல் வளம் கொண்ட பிரதேசமான இரணைதீவு பிரதேசம் தொடர்ந்தும் படையினரின் கட்டுப்பாட்டில் இருப்பதனால் அங்கிருந்து இடம்பெயர்ந்த மக்கள் இரணைமாதா நகரில் தங்கி உள்ளனர்.

1990ம் ஆண்டு காலப்பகுதியில் யுத்தம் காரணமாக வெளியேறிய மக்கள் இரணைமாதாநகரில் வாழ்ந்து வருகின்றனர். இவர்கள் தமது சொந்த இடத்தில் மீள்குடியேற அனுமதிக்கக்கோரி கடந்த மே மாதம் 1ம் திகதி முதல் தொடர் கவனயீர்ப்புப்போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடந்த ஐந்து மாதங்களிற்கு மேலாக இந்த மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் நிலையில் பல்வேறு அரசியல் தரப்பினரது வாக்குறுதிகளை நம்பாமல் தமது போராட்டத்தினை தொடர்ந்தும் மேற்கொண்டு வருகின்றனர்.
.
கடந்த செம்ரம்பர் மாதம் 31ம் திகதி பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் மற்றும் மீள்குடியேற்ற அமைச்சர் ஆகியோர் தலைமையில் நடைபெற்ற கலந்துரையாடலையடுத்து பொதுமக்களுக்குச்சொந்தமான காணிகளை  அடையாளப்படுத்தி அவற்றை விடுவிப்பதற்கு கடற்படை இணக்கம் தெரிவித்தது. இதனையடுத்து கடந்த மாதம் பிரதேச செயலர்தலைமையிலான குழுவொன்று இரணைதீவிற்குச்சென்று நிலமைகளைப்  பார்வையிட்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்த பிரதேச செயலாளர், குறித்த பகுதியில் மக்கள் குடியிருந்ததாக கூறப்படும் பகுதிகள் சில அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும், குறித்த பகுதி பாரிய பற்றை காடுகளாக காணப்படுவதால் அதனை துப்பரவு செய்தே அளவீட்டு நடவடிக்கையை முன்னெடுக்கலாம் எனவும் குறிப்பிட்டதோடு, அதற்கான அனுமதியை பாதுகாப்பு அமைச்சிடமிருந்து பெற்றுக்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிட்டிருந்தார்.

கடந்த 09-10-2017 இரணைதீவிற்குச்சென்று நிலஅளவை செய்வதற்கான பாதுகாப்பு அமைச்சின் அனுமதி கோரப்பட்டபோதும், அதற்கான அனுமதி வழங்க்ப்படுவதில்இழுபறிநிலை காணப்பட்டது.

இச்சூழலில் கடந்த வியாளக்கிழமை அதற்கான அனுமதி கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், இவ்விடயம் தொடர்பில் நில அளவை திணைக்களத்தினரிடம் அறிவுறுத்தியுள்ளதாகவும் பூநகரி பிரதேச செயலாளர்  தெரிவித்துள்ளார்.

இரணைதீவில் நில அளவீட்டு பணிகள் இன்றுஆரம்பிக்கப்படவுள்ளதாகவும், 6 நாட்கள் தங்கியிருந்து முதல் கட்ட அளவீட்டு பணிகள் இடம்பெறும் எனவும் பின்னர் மற்றுமொரு திகதியில் 2ம் கட்ட பணிகள் இடம்பெறும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் பிரதேச செயலாளர் தெரிவிக்கின்றார்.

அளவீட்டு பணிகள் முடிவடைந்ததும் அது தொடர்பான அறிக்கை மீள்குடியேற்ற அமைச்சு மற்றும் பாதுகாப்பு அமைச்சுக்கு அனுப்பி வைக்கப்பட்டதன் பின்னர் அடுத்த கட்ட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More