Home இலக்கியம் காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்…

காணாமல் போன அண்ணன்! தீபச்செல்வன்…

by admin

ஓர் நாள் கும்மிருட்டில் அண்ணனைக்
கொண்டு செல்லும்பொழுது
வாகனத்தின் பேரிரைச்சல் கேட்கையில்
அண்ணன் எங்கே என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தெருவில் அண்ணனைப் போன்றவர்களைப்
பார்க்கும்போதும்
அடுத்த வீட்டுப் பிள்ளைகளுடன்
விளையாடச் செல்லும்போதும்
அண்ணன் வந்துவிட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்வில்லை

யாராவது திருவிழாவுக்கு செல்லும்போதும்
கொண்டாட்டநாட்கள் வரும்போதும்
அண்ணன் வரமாட்டானா? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

தூங்கி எழும்பும்போதும்
பள்ளிக்கூடம்செல்லும்போதும்
அண்ணா எப்பொழுது வருவான்? என்பதைத் தவிர
அவள் வேறெதுவும் கேட்கவில்லை

வருடங்கள் பல ஓடிய பின்னரும்
யாரைப் பார்த்தாலும்
எங்காவது அண்ணாவைக் கண்டீர்களா?
என்பதைத் தவிர
அவள் வேறெதையும் கேட்கவில்லை.

கடத்தப்பட்டவர்களின் கண்கள்

தவிட்டுக் கலர் துணிகளால்
கண்கள் இறுகக் கட்டப்பட்டவர்கள்
இரத்தப் பொருக்குப் படிந்து
வெடில் மாறாத வழிகளில்
பறவைகளின் ஒலியை கேட்டுத் திரிந்தனர்

பூக்களைப் போன்ற கண்கள்
நசுங்கி இறந்து போயின

என்னுடைய குழந்தைகளின் கண்களை
மூடிக் கட்டியவர்கள்
இறுதியில் கண்களை பிடுங்கியெடுத்ததை
நான் காணமுடியாதிருந்தேன்

எனது கண்கள் ஒளிபொருந்தியவை
காதல் ஊற்றெடுப்பவை என்று சொல்லிக் கொண்டே
காதலி முத்தமிடுவாள்
அவளது விரல்களால் இமைகளை கோதி முத்திமிட்டபோது
கண்பூக்கள் செழித்துச் சடைத்தன

வெள்ளை நிற வண்டிகள்
மிருகங்களை போல கவ்விச் சென்று
கண்களை மூடிக்கட்டும்பொழுது சூரியன் அணைந்தது

என்னுடைய கண்கள் உதிர்ந்துபோயின

வியர்த்து வெந்து பல நாட்களாய் கண்டுண்ட கண்கள்
எல்லா சித்திரவதைகளின் பின்பாயும்
அவிழ்த்து விடப்படுகையில்
தேசம் இருண்டிருந்தது

நடுத்தெருக்களில் கண்களற்றுத் திரியும்
மனிதர்களின் கண்கள் தனித்தலைந்தன

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More