Home இலங்கை கைதான தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

கைதான தமிழக கடற்தொழிலாளர்களின் விளக்கமறியல் நீடிப்பு

by admin

யாழ்ப்பாணம் – பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி நுழைந்து மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைதான 12 தமிழக கடற்தொழிலாளர்களின்   விளக்கமறியலை பருத்தித்துறை நீதவான் நீடித்து உத்தரவிட்டுள்ளார்.

கடந்த டிசம்பர் மாதம் 10ஆம் திகதி பருத்தித்துறை கடற்பரப்பினுள் அத்துமீறி மீன் பிடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் , 25 தமிழக கடற்தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களின் இரு படகுகளையும் கடற்படையினர் கைப்பற்றி இருந்தனர்.
அதில் , ஒரு படகில் இருந்த 13 கடற்தொழிலாளர்களுடன் , படகின் உரிமையாளரும் இருந்தமையால் , அவர்கள் 13 பேரின் வழக்கு விசாரணைகளில் , அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொண்டதை அடுத்து , அவர்களுக்கு எதிரான 03 குற்றச்சாட்டுக்களுக்கும் தலா 06 மாத சிறைத்தண்டனை (18 மாத சிறை) விதித்து , அதனை 10 வருடங்களுக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அதேவேளை அவர்கள் கடற்படையினரை தாக்கி , மூன்று கடற்படையினருக்கு காயங்களை ஏற்படுத்திய பிறிதொரு குற்றச்சாட்டில் மீள விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
கடற்படையினரை தாக்கிய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கு விசாரணை கடந்த 28ஆம் திகதி நடைபெற்ற போது அக்குற்றத்தினையும் கடற்தொழிலாளர்கள் ஏற்றுக்கொண்டதை அடுத்து 12 மாத சிறை தண்டனை விதிக்கப்பட்டு, அதனை 10 வருடங்களுக்கு நீதவான் ஒத்திவைத்தார்.
அதேவேளை மற்றைய படகில் இருந்த ஏனைய 12 கடற்தொழிலார்களின் வழக்கு விசாரணைகள் நடைபெற்று வந்த நிலையில், கைதானவர்களுக்குள்  படகின் உரிமையாளர் இல்லாத காரணத்தால் , அவருக்கு அழைப்பாணை விடுப்பது தொடர்பில் சட்டமா அதிபரிடம் விளக்கங்களை பெற வேண்டி இருப்பதாக நீரியல் வளத்துறை திணைக்களத்தினர்  மன்றில் முன் வைத்த கோரிக்கையை மன்று ஏற்றுக்கொண்டு , கடற்தொழிலாளர்களை எதிர்வரும் 10 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைத்த நீதவான் உத்தரவிட்டார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More