Home இலங்கை சரியான சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்!

சரியான சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்த வேண்டும்!

by admin

நாட்டில் பாரிய பொருளாதார நெருக்கடி நிலை ஒன்று உருவாகியுள்ள போதிலும், அதனை சாதகமாக மாற்றவும், நாட்டில் அரசியல் அமைப்பு உருவாக்கம், நிறைவேற்று ஜனாதிபதி முறைமை நீக்கம், அரசியல் தீர்வுகளை பெற்றுக்கொள்ளுதல் முதலானவற்றிற்கு இதுவே மிகச் சரியான சந்தர்ப்பமாகும் எனவும், நெருக்கடிக்கு மத்தியிலும் சந்தர்ப்பத்தை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் கலாநிதி ஜயம்பக்தி விக்ரமரத்ன தெரிவித்துள்ளார்.

அமைச்சரவையை குறைத்து, பொருளாதார மற்றும் சர்வதேச விவகாரங்களை கையாளக்கூடிய நிபுணர்களை கொண்ட குழுவொன்றை அமைத்து அமைச்சரவையுடன் இணைத்து இன்றைய நிலைமைகளை கையாள வேண்டும்.

அதுவே இன்றைய நிலைமைகளில் இருந்து மீள இருக்கும் சிறந்த வேலைத்திட்டமாகும், நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடிகளை தீர்க்க இப்போதும் எம்மிடம் மாற்று வேலைத்திட்டங்கள் உள்ளன. அவற்றை கையாள தாமதிக்கக்கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.

ஒன்றில் ராஜபக்ஸவினர் சுயமாக ஆட்சியை விட்டு வெளியேறினால் அடுத்ததாக என்ன செய்வது என்பது குறித்து ஆராய்ந்து புதிய பயணம் ஒன்றினை முன்னெடுக்க முடியும். அல்லது பாராளுமன்றத்தில் இதனை தீர்த்துக்கொள்ள வேண்டும்.

எதிர்கட்சிகள் மற்றும் சுயாதீன அணியினர் இணைந்து அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டுவர வேண்டும். அதற்கான முயற்சிகளும் முன்னெடுக்கப்படுகின்றன. ஜனாதிபதிக்கு எதிராக குற்றப்பிரேரணை ஒன்றினை கொண்டுவருவது இலகுவான காரியம் அல்ல.

அதற்கு நீண்ட காலம் எடுக்கும். குற்றப்பிரேரணை கொண்டுவரப்பட்டால் அரைவாசிப்பேர் கையொப்பமிட வேண்டும் அல்லது மூன்றில் ஒரு தரப்பு கையொப்பமிட்டால் கொண்டுவரப்பட்ட குற்றப்பிரேரணையில் உள்ள குற்றச்சாட்டுக்கள் பாரதூரமானது என்பதை சபாநாயகர் அங்கீகரித்து ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அதேபோல் உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பவும் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமாகும். அதுமட்டுமல்ல ஜனாதிபதி தெரிந்தே அரசியல் அமைப்பை மீறியுள்ளார், அல்லது அரசியல் அமைப்பிற்கு முரணாக செயற்பட்டுள்ளார் என நீதிமன்றமும் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

அல்லது ஒரு சில பலவீனம் காரணமாக ஜனாதிபதியினால் தொடர்ந்தும் பதவியில் இருக்க முடியாது என நீதிமன்றம் ஏற்றுக்கொள்ள வேண்டும். ஆகவே இவை இலகுவாக செய்து முடிக்க முடிந்த விடயங்கள் அல்ல.

எனவே நாட்டின் பொதுவான கோரிக்கைக்கு செவி மடுத்து மக்களின் ஆணை என்ன என்பதை கருத்தில் கொண்டு தாமாக பதவி விலக வேண்டும். அரசாங்கமும் பலமிழந்துவிட்டது.

சர்வதேசத்தின் நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. மக்கள் அதிருப்தியில் உள்ளனர். ஆகவே பலமிழந்த அரசாங்கத்துடன் இனியும் எவரும் கலந்துரையாட மாட்டார்கள். எனவே இருக்கும் சிறந்த தெரிவு என்னவென்றால் அரசாங்கம் முழுமையாக பதவி விலக வேண்டும்.

மாற்று அரசாங்கம் ஒன்றினை தற்காலிகமாக உருவாக்கி குறுகிய அமைச்சரவையை உருவாக்கி நிபுணர்களுடன் இணைந்து இயங்கக்கூடிய பொறிமுறை ஒன்றினை உருவாக்கி பயணிக்க வேண்டும்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை நீக்கி, பொறுப்புக்கூறல் விடயங்கள், நல்லிணக்க விடயங்கள், ஜனநாயகத்தை பலப்படுத்தும் விடயங்களை உடனடியாக நடைமுறைப்படுத்துவதே இன்றைய நெருக்கடியை தீர்க்க இருக்கும் தெரிவாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More