Home இலங்கை சேவையாற்றிய 3 வருட சேவைக்காலம் கணிக்கப்படவில்லை…

சேவையாற்றிய 3 வருட சேவைக்காலம் கணிக்கப்படவில்லை…

by admin
பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் முதலமைச்ர் சி.வி.விக்னேஸ்வரனிடம் கோரிக்கை!
வடமாகாணத்தின் வன்னிப் பகுதிப் பாடசாலைகளில் 01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்துச் சேவையாற்றும் ஆசிரியர்களின் மூன்று வருட சேவைக்காலம் சேர்க்கப்படாதமையால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களின் பிரதிநிதிகள் வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை கடந்த 06.06.2018 ஆம் திகதி காலை 10.00 மணிக்கு கைதடியிலுள்ள வடமாகாண சபை பேரவைச் செயலகத்தில் சந்தித்துக் கலந்துரையாடி தமது பிரச்சினைகள் தொடர்பில் எடுத்துரைத்து, தமது கோரிக்கைகள் அடங்கிய மனு ஒன்றையும் கையளித்திருந்தனர்.  பாதிக்கப்பட்ட  ஆசிரியர்களின் பிரச்சினையைக் கேட்டறிந்துகொண்ட முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அவர்கள் இப்பிரச்சினை தொடர்பில் அதிக கவனம் செலுத்தி அதற்குரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
 வடமாகாண முதலமைச்சர் அவர்களிடம் கையளிக்கப்பட்ட மனுவில்,
01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்த எமக்கு அதே திகதியிலிருந்து சேவைக் காலத்தைக் கணித்தல்.
வடமாகாணத்தில் கடந்த 01.07.2013 இல் ஆசிரியர் நியமனம் கிடைத்து ஆசிரியர் சேவைக்குள் இணைத்துக்கொள்ளப்பட்ட எமது சேவைக் காலத்தை 01.08.2016 இல் இருந்து தற்போது கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமது சேவைக் காலம் மூன்று வருடங்களால் குறைக்கப்பட்டுள்ளது. இதன் விளைவாக எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் நாம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
கடந்த யுத்த காலம் உள்ளடங்கலாக, கிளிநொச்சி, முல்லைத்தீவு, துணுக்காய், வவுனியா வடக்கு, வடமராட்சி கிழக்கு, மடு போன்ற கல்வி வலயங்களின் கீழ் உள்ள பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறை காரணமாக கடந்த 15 வருடத்திற்கும் மேலாக எவ்வித கொடுப்பனவுமற்ற நிலையில் தொண்டர் ஆசிரியர்களாச் சேவையாற்றி வந்த எமக்கான நிரந்தர ஆசிரியர் நியமனம் அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்தோம் என்ற காரணத்தாலும், அரசியல் காரணங்களாலும் அப்போது வழங்கப்படாது நாம் மட்டுமே புறக்கணிக்கப்பட்டிருந்தோம்.
கடந்த 2009 ஆம் ஆண்டு வடமாகாணத் தொண்டர் ஆசிரியர்களுக்கு நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்பட்ட போதுகூட கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற அரச கட்டுப்பாடற்ற பகுதியில் வசித்து யுத்தத்தால் இடம்பெயர்ந்த நிலையில் செட்டிகுளம் முள்வேலி முகாம்களில் அடைக்கப்பட்டிருந்த தொண்டர் ஆசிரியர்கள் எவருக்குமே நிரந்தர ஆசிரியர் நியமனம் வழங்கப்படாது நாம் மட்டும்தான் புறக்கணித்து ஒதுக்கப்பட்டிருந்தோம்.
நிரந்தர நியமனத்தில் நாம் தொடர்ந்தும் திட்டமிட்டுப் புறக்கணித்து ஒதுக்கப்படுவதைச் சுட்டிக்காட்டி எமக்கான நியமனத்தை வலியுறுத்தி நாம் தொடர்ச்சியாக மேற்கொண்ட போராட்டம் காரணமாக கடந்த 01.07.2013 இல் எமக்கு ஆசிரியர் நியமனம் வழங்குவதாகக் கூறி வடமாகாணக் கல்வி அமைச்சால் ஆசிரிய உதவியாளர் என்னும் நியமனம் வழங்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து நாம் ஆசிரியர் பயிற்சிக் கலாசாலைப் பயிற்சிகளையும் முடித்து பயிற்றப்பட்ட ஆசிரியர்களாக வெளியேறியுள்ளோம்.
இந்நிலையில் எமது முதல் நியமனத் திகதி 01.07.2013 என இடப்பட்ட போதிலும் தற்போது எமக்கு ஆசிரியர் சேவை தரம் 3-1 வழங்கப்பட்ட 01.08.2016 திகதியிலிருந்தே எமது முதல் நியமனத் திகதியாகக் கருதி எமது சேவைக் காலம் கணிக்கப்பட்டுள்ளது. இதனால் எமக்கு நியமனம் கிடைத்து நாம் சேவையாற்றிய மூன்று வருட காலப்பகுதி எமது சேவைக் காலமாகச் சேர்த்துக்கொள்ளப்படவில்லை. ஏற்கனவேயும் வடமாகாணத்தில் நியமனம் வழங்கப்படும் போது திட்டமிட்ட வகையில் புறக்கணிக்கப்பட்டுப் பாதிக்கப்பட்ட நாம் தற்போதும் நியமனம் கிடைத்துச் சேவையாற்றிய எமது சேவைக் காலத்தில் மூன்று வருடத்தைச் சேர்க்காமல் விட்டுள்ளமையால் ஆசிரியர் சேவையில் எமது பதவி உயர்வு, சம்பள ஏற்றம் போன்றவற்றிலும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளோம்.
முன்னைய காலங்களிலும், தற்போதும் தொண்டர் ஆசிரியர்களுக்கு ஆசிரியர் சேவை தரம் 3-11 என்ற நியமனமே வழங்கப்பட்டுள்ளது. ஆனால் எமக்கு மட்டுமே ஆசிரிய உதவியாளர் என்ற நியமனம் வழங்கப்பட்டு அநீதி இழைக்கப்பட்டுள்ளது.
எனவே எமது சேவைக் காலம், வயது என்பவற்றினைக் கருத்திற்கொண்டு எமக்கு வடமாகாணக் கல்வி அமைச்சால் நியமனம் வழங்கப்பட்ட 01.07.2013 இல் இருந்து எமது சேவைக் காலத்தை ஆசிரியர் சேவை தரம் 3-11 ஆகக் கணித்து விடுபட்டுள்ள எமது சேவைக் காலமும் சேர்க்கப்பட ஆவன செய்யுமாறு தங்களை நம்பிக்கையோடு மிகவும் பணிவாகக் கேட்டுக்கொள்கின்றோம். என்றுள்ளது.
மேற்படி பிரச்சினை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் மற்றும் வடமாகாணக் கல்வி அமைச்சர் க.சர்வேஸ்வரன் ஆகியோரிடமும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தமது கோரிக்கை அடங்கிய மனுவை வழங்கியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More