Home அரசியல் புதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை

புதிய அரசியல் யாப்பு இலங்கையை மதச்சார்பற்ற நாடாக பிரகடனப்படுத்த வேண்டும் – ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி கோரிக்கை

by admin


புதிய அரசியல் யாப்பில் பௌத்த மதத்திற்கு முன்பிருந்ததைப் போன்றே முக்கியத்துவம் இருக்கும் என்று அரசாங்கம் தெரிவித்துள்ள நிலையில் நாம் எமது நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டியுள்ளது என்று ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் க.பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். தனது கட்சியின் நிலைப்பாடு குறித்து அவர் அறிக்கையின் மூலம் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார்.  அவரது அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:

1978ஆம் ஆண்டில் இலங்கையின் அரசியல் யாப்பில் இரண்டாவது அத்தியாயம் பௌத்த மதம் தொடர்பாக கீழ்க்கண்டவாறு கூறுகிறது. இலங்கைக் குடியரசில் பௌத்த மதத்திற்கு முதன்மைத்தானம் வழங்கப்படவேண்டும் என்பதோடு, அதற்கிணங்க பத்தாம் மற்றும் பதினான்காம் உறுப்புரைகளால் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை எல்லா மதங்களுக்கும் காப்புறுதி செய்யும் அதேவேளை, பௌத்த சாசனத்தைப் பாதுகாத்தலும், பேணி வளர்த்தலும் அரசின் கடமையாக இருத்தல் வேண்டும். பௌத்த மதம் தொடர்பான இதே விடயங்கள், தற்போதைய அரசாங்கம் உருவாக்க இருக்கின்ற புதிய அரசியல் சாசனத்திலும் உள்ளடக்கப்படும் என்று பிரதமர் உள்ளிட்டவர்கள் தெரிவித்து வருகின்றனர்.

இலங்கை பல இனங்கள், பல மொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு பன்மைத்துவ சமூகமாகும். அது மட்டுமன்றி, ஏறத்தாழ 70வீதமானோர் பௌத்தர்களாகவும், ஏனையோர் இந்துக்களாகவும், கிறிஸ்தவர்களாகவும், இஸ்லாமியர்களாகவும் இருக்கின்றனர். குறிப்பாக வடக்கு-கிழக்கில் வாழும் மிகப் பெரும்பான்மையோர் தமிழ் பேசுபவர்களாகவும் இந்து, கிறிஸ்து மற்றும் இஸ்லாமிய மதங்களைச் சேர்ந்தவர்களாகவும் உள்ளனர். இவ்வாறான ஒரு சூழ்நிலையில், அரசியல் சாசனரீதியாக வடக்கு-கிழக்கு உட்பட முழு இலங்கையிலும் பௌத்தம் முதலாவது மதமாக இருக்க வேண்டும் என்பதும் ஆட்சியாளர்களினால் அது பேணி வளர்க்கப்படவேண்டும் என்பதும் எவ்வளவு தூரம் சரியான கருத்தாக இருக்க முடியும்?
இந்திய – இலங்கை ஒப்பந்தமானது வடக்கு-கிழக்கு என்பதை தமிழ்பேசும் மக்களின் வரலாற்றுபூர்வ வாழ்விடமாகக் குறிப்பிடுகின்றது. இந்த விடயத்தை அப்போதிருந்த ஜே.ஆர்.ஜெயவர்தன அரசாங்கமும் இந்தியாவின் ராஜீவ்காந்தி அரசும் கையெழுத்திட்டு ஏற்றுக்கொண்டுள்ளன.

இப்பொழுது, வடக்கு-கிழக்கு மாகாணங்களில் குறிப்பாக வடக்கு மாகாணத்தில் பௌத்த மக்கள் வாழாத பிரதேசங்களில் இராணுவம் பௌத்த விகாரைகளையும் புத்தர் சிலைகளையும் நிறுவி வருகிறது. இதனை சிங்கள பௌத்தத்தின் மேலாதிக்கமாகவே தமிழ் மக்கள் பார்க்கின்றனர். இலங்கையைப் பொறுத்தவரையில் அது ஒரு மதசார்பற்ற நாடாக இருக்க வேண்டும் என்பதே தமிழ் மக்கள் கருத்தாகும். அதனை இலங்கை அரசாங்கம் ஏற்க மறுக்கும் பட்சத்தில், குறைந்த பட்சம் வடக்கு-கிழக்காவது மதச்சார்பற்ற பிரதேசமாக இருக்க வேண்டுமென்பது தமிழ் மக்களின் விருப்பமாக இருந்துவருகின்றது. தமிழ் மக்கள் கௌதம புத்தரையும், அவரது நற்சிந்தனைகளையும் ஜீவகாருண்யத்தையும் மிகவும் நேசிக்கின்றார்கள். ஆனால், பௌத்தம் அவர்களது தலைகளின்மீது திணிக்கப்படுவதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்பதை ஆணித்தரமாகச் சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். புதிய அரசியல் சாசனமானது இனங்களுககிடையிலும், மதங்களுக்கிடையிலும் நல்லுறவை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும். அவ்வாறிருக்க வேண்டுமாயின், பலமொழிகள், பல மதங்களைக் கொண்ட ஒரு நாட்டில் ஒரு மொழிக்கோ அல்லது ஒரு மதத்திற்கோ முன்னுரிமை அளிப்பதென்பது மேலும் மேலும் பிரச்சினைகளைச் சிக்கலாக்குவதாகவே இருக்கும்.

புதிய அரசியல் சாசனமென்பது சகல மதங்களையும் சகல மொழிகளையும் சமத்துவக் கண்ணோட்டத்தில் அணுகக்கூடியதாக இருக்க வேண்டும் என்பதை ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தெளிவுபடக் கூறிக்கொள்ள விரும்புகின்றது.
சுரேஷ். க.பிரேமச்சந்திரன்
தலைவர்
ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More