இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவானது மற்ற நாடுகளைப் பாதிக்கக் கூடாது என சீனா தெரிவித்துள்ளது.
அரசு முறைப் பயணாமாக நேற்று அமெரிக்கா சென்ற பிரதமர் நரேந்திர மோடிக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அமெரிக்காவில் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்ற பிரதமர் மோடி, அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை இந்திய நேரப்படி இன்று (14/2/2025) அதிகாலையில் சந்தித்தார்.
இந்த சந்திப்பின்போது இரு நாடுகளுக்கும் இடையே முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. ஜனாதிபதி டிரம்பைச் சந்தித்த பிரதமர் மோடி பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து விவாதித்தார். இதன் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், இந்தியாவுக்கு அதிக அளவிலான ராணுவ தளவாடங்களை விற்பனை செய்ய உள்ளதாகவும், இந்தியாவுக்கு எப்-35 ரக ஜெட் விமானங்களை அமெரிக்கா வழங்க உள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த நிலையில், இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவு மற்ற நாடுகளை பாதிக்க கூடாது என சீனா கருத்து தெரிவித்துள்ளது. இது குறித்துச் சீனாவின் வெளியுறவுத்துறைச் செய்தித் தொடர்பாளர் குவோ ஜியாகுன் கூறுகையில், ஆசியா-பசிபிக் பிராந்தியம் புவிசார் அரசியல் போட்டிக்கான களம் அல்ல என்றும், மாறாக அமைதியான வளர்ச்சிக்கான மையம் என்றும் தெரிவித்தார்.
மேலும் இரண்டு நாடுகளுக்கு இடையிலான இருதரப்பு உறவுகளும், ஒத்துழைப்பும் சீனாவிற்கோ அல்லது பிற நாடுகளின் நலன்களுக்கோ பாதிப்பை ஏற்படுத்தக் கூடாது என்று குறிப்பிட்ட அவர், இருதரப்பு உறவு என்பது அமைதி, ஸ்திரத்தன்மை மற்றும் செழிப்பை ஏற்படுத்துவதாக இருக்க வேண்டும் என்று சீனா நம்புவதாக தெரிவித்துள்ளார்.