உக்ரைன்-ரஷியா இடையேயான போர் கடந்த 3 ஆண்டுகளாக நீடித்து வருகிறது. இந்தப் போரில் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். இந்தப் போரை முடிவுக்குக் கொண்டுவர அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் முயற்சித்து வருகிறார். போர்நிறுத்தம் தொடர்பாக ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் உடன் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தொலைபேசி மூலம் பேச்சுவார்த்தை நடத்தினார்.
அதேவேளை, தங்கள் கருத்துக்களைக் கேட்காமல் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமில்லை என்று உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்திருந்தார். மேலும், நேட்டோ அமைப்பு இல்லாமல் தங்களுக்கென்று தனியே படையை ஐரோப்பிய யூனியன் உருவாக்க வேண்டுமென்றும் செலன்ஸ்கி கூறினார். ஆனால், உக்ரைனில் நடைபெற்று வரும் போரை முடிவுக்குக் கொண்டுவர வேண்டும் என்பதில் டொனால்டு டிரம்ப் உறுதியாக உள்ளார்.
இந்தச் சூழலில் போரை முடிவுக்குக் கொண்டுவருவது தொடர்பாக அமெரிக்கா-ரஷியா இடையே சவுதி அரேபியாவில் நேற்று முன்தினம் பேச்சுவார்த்தை நடந்தது. இந்தப் பேச்சுவார்த்தையில் உக்ரைனுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை. இது குறித்து உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி அதிருப்தி தெரிவித்தார். இதனால் கோபம் அடைந்த டிரம்ப், போர் தொடங்க உக்ரைன்தான் காரணம் என்றும், உக்ரைன் அதிபர் முன்பே இந்தப் போரை நிறுத்தி இருக்க வேண்டும் என்றும் கடுமையாகச் சாடினார்.
இந்நிலையில் உக்ரைன் தலைநகர் கீவில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிபர் செலன்ஸ்கி, “போருக்கு உக்ரைன்தான் காரணம் என்று டிரம்ப் தவறாக கூறுகிறார். இ்ந்த விவகாரத்தில் அவர் ரஷியாவால் தவறாக வழிநடத்தப்படுகிறார்” என்று அவர் தெரிவித்தார்.
இதனிடையே அமெரிக்க அதிபர் டிரம்பை நேரில் சந்தித்துப் பேசத் தான் விரும்புவதாகவும், அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருவதாகவும் உக்ரைன் அதிபர் செலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.