பொள்ளாச்சி, பாளையங்கோட்டையை தொடர்ந்து சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்திலும் இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்துள்ளனர். மத்திய அரசின் புதிய தேசிய கல்விக்கொள்கை மற்றும் அதில் இருக்கும் மும்மொழிக் கொள்கை ஆகியவற்றை ஏற்கமாட்டோம் என்ற நிலைப்பாட்டில் தமிழ்நாடு அரசு உறுதியாக உள்ளது. ஆனால், தேசிய கல்விக் கொள்கையை அனைத்து மாநிலங்களிலும் அமுல்படுத்துவதில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. மும்மொழிக் கொள்கை வழியாக மத்திய அரசு இந்தியை திணிப்பதாக தெரிவித்து திமுக போராட்டங்களை முன்னெடுத்துள்ளது. அதேபோல, அதிமுக, நா.த.க, விசிக, தவெக உள்ளிட்ட கட்சிகளும் மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்தி திணிப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில், திமுகவை சேர்ந்த 4 பேர், தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் தொடருந்து நிலையத்தில் பெயர் பலகையில் உள்ள இந்தி எழுத்துக்களை கறுப்பு மையால் அழித்துள்ளனர். தமிழ், இந்தி, ஆங்கிலம் என்று மூன்று மொழிகளில் ‘சங்கரன்கோவில்’ என எழுதப்பட்டு இருந்த நிலையில், நடுவில் இருந்த இந்தி எழுத்தை மட்டும் அவர்கள் அழித்துள்ளனர். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஏற்கெனவே நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சி மற்றும் நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ரெயில் நிலையத்தில் இதேபோன்று பெயர் பலகையில் இடம் பெற்றிருந்த இந்தி எழுத்துக்களை திமுகவினர் அழித்த நிலையில், இன்று சங்கரன்கோவில் ரெயில் நிலையத்திலும் இந்தி எழுத்துக்களை திமுக அழித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக தொடருந்துநிலைய காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.