Home இந்தியா தமிழை வாழ வைக்கிறோம் என ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை

தமிழை வாழ வைக்கிறோம் என ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழைக் கட்டாயமாக்க இயலவில்லை

by editorenglish

தமிழைக் கட்டாய பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயற்படுத்த நடவடிக்கை எடுக்க அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தி உள்ளார். பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:

தெலுங்கானாவில் மாநிலப் பாடத்திட்டம், சி.பி.எஸ்.இ பாடத்திட்டம் உள்ளிட்ட அனைத்துப் பாடத்திட்டங்களைப் பின்பற்றும் பள்ளிகளிலும் ஒன்று முதல் பத்தாம் வகுப்பு வரை தெலுங்கு கட்டாய பாடமாக்கப்பட்டுள்ளது. ஆனால், தமிழ்நாட்டில் தமிழைக் கட்டாயப்பாடமாக்கும் சட்டம் நிறைவேற்றப்பட்டு 19 ஆண்டுகளாகியும் இன்று வரை அந்தச் சட்டத்தை செயற்படுத்துவதற்கு அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது.

தமிழை வளர்க்கிறோம், வாழ வைக்கிறோம் என்று கூறி ஆட்சிக்கு வந்தவர்களால் தமிழகத்தில் தமிழை இன்னும் பயிற்று மொழியாகவோ, கட்டாயப்பாடமாகவோ கொண்டு வர முடியவில்லை. தமிழ்மொழியைக் கட்டாயப்பாடமாக்குவதில் தமிழக ஆட்சியாளர்கள் செய்த துரோகங்கள் மிக நீண்டவை.

சி.பி.எஸ்.இ உள்ளிட்ட பாடத்திட்டத்தைப் பின்பற்றும் தனியார் பள்ளிகள் தமிழைக் கட்டாய பாடமாக்கத் தேவையில்லை; அதற்குப் பதிலாகத் தமிழைக் கூடுதல் கட்டாயப்பாடமாக்கினால் போதுமானது. தமிழ்ப் பாடத்திற்கு சி.பி.எஸ்.இ உள்ளிட்ட வாரியங்கள் தேர்வு நடத்தத் தேவையில்லை; தமிழ்நாடு அரசுத் தேர்வுத்துறையே நடத்தி அதற்கான சான்றிதழை அளிக்கும் என்று அறிவிக்கப்பட்டமை மோசடியானது.

தனியார் பள்ளிகள் எந்தப் பாடத்திட்டத்தை பின்பற்றுகின்றனவோ, அந்தப் பாடத்திட்டத்தின்படி தமிழ்ப் பாடத்திற்கு தேர்வு நடத்தப்பட்டு, அதில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப் பட்டால் தான் மாணவர்கள் தமிழைப் படிப்பார்கள். மாறாக பொதுத்தேர்வில் தமிழ்ப் பாடம் கிடையாது; பத்தாம் வகுப்பில் தேர்ச்சி பெற தமிழ் கட்டாயம் கிடையாது; எந்தத் தாக்கத்தையும் ஏற்படுத்தாத வகையில், தமிழக அரசுத் தேர்வுத்துறை நடத்தும் தேர்வை பெயரளவில் எழுதினால் போதுமானது என்றால் எவரும் தமிழ் படிக்க மாட்டார்கள்.

இன்னொருபுறம், தமிழைக் கட்டாயப் பயிற்று மொழியாக்கும் அரசாணை செல்லாது என்று உயர்நீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து 200-ம் ஆண்டில் தமிழக அரசு தாக்கல் செய்த மேல்முறையீட்டு மனு 25 ஆண்டுகளுக்கும் மேலாக உச்சநீதிமன்றத்தில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. அதை விசாரணைக்குக் கொண்டு வரவோ அல்லது தமிழைக் கட்டாயப் பயிற்றுமொழியாக்கிச் சட்டம் கொண்டு வரவோ அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இதற்கெல்லாம் காரணம், தமிழை வெறுக்கும் தனியார் பள்ளி நிர்வாகங்களுக்குத் தமிழக ஆட்சியாளர்கள் செலுத்தி வரும் பதில் மரியாதை தான். இது தமிழ்த் துரோகம்.

தாய்மொழிக்கு எவ்வாறு சேவை செய்வது என்பதை கேரளம், தெலுங்கானம், கர்நாடகம், ஆந்திரம் போன்ற பிற திராவிட மாநில அரசுகளிடமிருந்து தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கற்றுக்கொள்ள வேண்டும். இனியும் அன்னைத் தமிழுக்கு துரோகம் செய்வதை விடுத்து, தமிழகத்தில் தமிழைக் கட்டாயப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் செயல்படுத்த தமிழக அரசு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More