வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு பரிந்துரைப்படி வேளாண் விளைபொருள்களுக்கு விலை நிர்ணயம் செய்யாத மத்திய அரசை கண்டித்து சென்னையில் தொடருந்து மறியல் போராட்டம் நடத்திய தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.
பஞ்சாபில் போராட்டம் நடத்திய விவசாயிகள் கைது செய்யப்பட்டதைக் கண்டித்துச் சென்னை, உசிலம்பட்டி, மயிலாடுதுறை, திருப்பூரில் நேற்று (23/03/2025) தொடருந்து மறியல் போராட்டம் நடைபெறும் என்று தமிழக விவசாயிகள் பாதுகாப்புச் சங்கம் அறிவித்தது.
அதன்படி, சென்னை எழும்பூர் தொடருந்து நிலையத்தில் மறியல் போராட்டம் நடத்துவதற்காகத் தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனர் வழக்கறிஞர் ஈசன் முருகசாமி தலைமையில் விவசாயிகள் சென்றனர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதையும் மீறி தொடருந்து நிலையத்துக்குள் சென்று மறியலில் ஈடுபட முயன்றதால் 40 விவசாயிகளும் கைது செய்யப்பட்டனர்.