வடபகுதியில் அதிகரித்துள்ள போதைப்பொருள் ஊடுருவல்களாலும், போதைப்பொருள் பாவனைகளாலும் ஒரு தொகுதி எதிர்கால சந்ததியினர் அழிவடைத் தொடங்கியுள்ளதாக வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் சுட்டிக்காட்டியுள்ளார். எனவே சட்டம் ஒழுங்கை சீர்ப்படுத்தி எதிர்கால தலைமுறையினரையும், பொது மக்களையும் பாதுகாக்க விரைந்து நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அவர் இதன்போது தெரிவித்துள்ளார்.
யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஜெயச்சந்திரமூர்த்தி ரஜீவன், அதிகரித்துள்ள போதைப்பொருள் பாவனைகளை கட்டுப்படுத்துவது தொடர்பில் சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணை ஒன்றினை நாடாளுமன்றில் புதன்கிழமை (05/03/2025) முன்மொழிந்தார்.
இந்நிலையில் குறித்த சபை ஒத்திவைப்புவேளைப் பிரேரணைதொடர்பான விவாதத்தில் பங்கேற்று கருத்துத் தெரிவிக்கும்போதே நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
மேலும் போதையினால் நாடு மட்டுமல்ல எங்களுடைய மாவட்டங்களும் தள்ளாடிக் கொண்டு தான் இருக்கிறது. இதுதொடர்பில் ஏற்கனவே நான் பாதுகாப்பு அமைச்சின் குழுநிலை விவாதத்தில்கூட போதைப்பொருட்களின் ஊடுருவல்கள் தொடர்பிலும், அவற்றைக் கட்டுப்படுத்துவது தொடர்பிலும் பேசியிருந்தேன்.
இருப்பினும் சக நாடாளுமன்ற உறுப்பினர் ரஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி அவர்களால் முன்மொழியப்பட்ட இந்த ஒத்திவைப்பு வேளைப் பிரேரணைக்கு எனது நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.
நாட்டின் அதியுயர் பீடமாகக் காணப்படும் நாடாளுமன்றிலே, தற்போது நாட்டில் போதைப்பொருட்களால் சீரழிந்து கொண்டிருக்கும் இளைஞர்கள், யுவதிகள், பொதுமக்களைப்பற்றி பேசிக்கொண்டிருக்கின்றோம்.
இந்தப் போதைப் பொருட்களைக் கட்டுப்படுத்துகின்ற விடயத்தில் காவல்துறையினருக்கு முக்கிய பொறுப்பு இருக்கின்றது. சட்டம் ஒழுங்கு முறையாகச் செயற்படுத்துங்கள். இந்த விடயத்தில் கூடிய கரிசனைசெலுத்தி போதைப் பொருட்களிடமிருந்து எமது மக்களைக் காப்பாற்றுங்கள். அதற்குரிய நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ளுங்கள் – என்றார்

