Home இலங்கை சிறுபான்மை மீதான தொடர் தாக்குதல்கள், துவேஷ பேச்சுகள், குறித்து அமைச்சரவையில் மனோ கணேசன்

சிறுபான்மை மீதான தொடர் தாக்குதல்கள், துவேஷ பேச்சுகள், குறித்து அமைச்சரவையில் மனோ கணேசன்

by admin

இன்று அதிகாலை காவத்தை நகரில் தீயினால் இரண்டு கடைகள் சேதமானது, சிறுபான்மையினர் மீதான திட்டமிட்ட தாக்குதல்கள், தனது அமைச்சில் பொதுபல சேனையினரின் நடவடிக்கை ஆகிய விவகாரங்கள் பற்றி தேசிய சகவாழ்வு கலந்துரையாடல் மற்றும் அரசகரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன், அமைச்சரவையின் கவனத்துக்கு இன்று கொண்டு வந்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் கூடிய அமைச்சரவை கூட்டத்தின் போது ஜனாதிபதி, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சக அமைச்சர்கள் ஆகியோரது கவனத்துக்கு இவ்விஷயங்களை கொண்டு வந்த அமைச்சர் மனோ கணேசன், தனது அமைச்சுக்குள் அல்லது எங்கேயும் எந்த ஒரு தீவிரவாத சக்திகள் வந்தாலும், தன்னால் அவர்களை எதிர்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளார்.

எனது அமைச்சுக்கு சிங்கமாக வந்த பொதுபல சேனை அதிபர் ஞானசார தேரர் பூனையாக திரும்பி போனார். ஆனால், சாதாரண மக்களின் நிலைமை அதுவல்ல. அவர்களுக்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளது. 2015ம் வருடம் நடைபெற்ற இரண்டு தேர்தல்களிலும் ஐக்கிய தேசிய முன்னணி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி, ஆகிய கட்சிகளுக்கு நல்லாட்சிக்காக வாக்களித்த சிறுபான்மை மக்களை, எமது அரசாங்கத்திடமிருந்து பிரித்து, எதிர்வரும் தேர்தல் காலங்களில் வாக்களிக்காமல், அவர்களை வீட்டில் இருக்க செய்யும் திட்டமே இதுவாகும் என கூறினார்.

அமைச்சர் மனோ கணேசனின் கருத்துகளை அடுத்து, அமைச்சர்கள் ரிசாத் பதூதீன், கபீர் ஹசீம், ரவுப் ஹக்கிம், துமிந்த திசாநாயக்க, சாகல ரத்னாயக்க ஆகியோரும் இது குறித்து பேசினர்.

இவற்றுக்கு  பதிலளித்த ஜனாதிபதி, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுவதில் என்ன பிரச்சினை என்று கேள்வி எழுப்பினார். தயவு தாட்சண்யம் இல்லாமல் கடும் முறையில் சட்டம், ஒழுங்கை நிலைநாட்டுமாறு அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு, ஜனாதிபதி பணிப்புரை விடுத்தார்.

அதையடுத்து இதுபற்றி பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, சம்பவங்கள் நடைபெறும் பிரதேசங்களில் பொறுப்பில் இருக்கும் பொலிஸ் அதிகாரிகளை நடைபெறும் சம்பவங்கள் தொடர்பில் பொறுப்பு கூறவைக்கும் நடைமுறையை உடனடியாக  அமுல் செய்யுமாறு, சட்டம் ஒழுங்கு துறை அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு பணிப்புரை விடுத்தார்.

தன்னை நேற்று முஸ்லிம் அமைச்சர்கள், எம்பீக்கள் சந்தித்ததாக, அமைச்சர் சாகல ரத்நாயக்க அமைச்சரவைக்கு தெரிவித்தார். அதையடுத்து இதை முஸ்லிம் பிரச்சினையாக பார்க்காமல், சட்டம், ஒழுங்கு பொது பிரச்சினையாக பார்த்து நடவடிக்கை எடுக்கும்படி, ஜனாதிபதி, அமைச்சர் சாகல ரத்நாயக்கவுக்கு கூறினார்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More