Home இலங்கை யாழ்.நகரில் 9 கடைகள் நீதிமன்ற உத்தரவினால் இடித்து அகற்றப்பட்டன.

யாழ்.நகரில் 9 கடைகள் நீதிமன்ற உத்தரவினால் இடித்து அகற்றப்பட்டன.

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ்.நகரில் அகற்றப்பட்ட கடைகளுக்கு நீதி கோரி இலங்கையில் எத்தனை சட்ட எல்லை வரை செல்ல முடியுமோ அதுவரை சென்று நீதி கேட்போம். என சட்டத்தரணி கே.சுகாஸ் தெரிவித்துள்ளார்.

யாழ். மத்திய பேருந்து நிலையத்திற்கு பின்புறமாக மின்சார நிலைய வீதியில், அமைக்கப்பட்டு இருந்த 9 கடைகளை கொண்ட கடைத்தொகுதி யாழ்.நீதவான் நீதிமன்றினால் அகற்ற உத்தரவு இடப்பட்டு இருந்தது.

அந்த நிலையில் கடந்த புதன் கிழமை நீதிமன்ற உத்தரவின் பேரில் கடை உரிமையாளர்கள் கடைகளில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்திய பின்னர் , நீதிமன்றினால் கடை கட்டட தொகுதி யாழ்.பிரதேச செயலகத்திற்கு பாரப்படுத்தப்பட்டது.

யாழ்.பல்கலைகழக மருத்துவ பீடத்திற்கு காணி கையளிப்பு.

அதனை அடுத்து பிரதேச செயலகத்தினால் யாழ்.பல்கலைக்கழக மருத்துவ பீடத்திற்கு குறித்த காணியினை பிரதேச செயலகம் கையளித்து இருந்தது.

இந்த நிலையில் நேற்று வெள்ளிக்கிழமை மதியம் யாழ்.பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்களின் மேற்பார்வையில் காணியினுள் இருந்த கடை கட்டட தொகுதி இடித்து அகற்றப்பட்டது.

அதனை தடுத்து நிறுத்தும் நோக்குடன் கடை உரிமையாளர்களின் சார்பில் நீதிமன்றில் முன்னிலையான சட்டத்தரணி கே.சுகாஸ் சம்பவ இடத்திற்கு சென்று இருந்த போதிலும் , அவரால் அதனை  நிறுத்த முடியவில்லை.

அது தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் ,

இயற்கை நீதிக்கும் இலங்கை சட்டத்திற்கும் முரணான முறையில் கடைகள் இடித்து அகற்றப்பட்டு உள்ளது. யாழ்.நீதிவான் நீதிமன்றினால் கடைகளை அகற்ற கோரிய கட்டளைக்கு எதிராக மேல் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்து , நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை கொழும்பில் மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு உள்ள நிலையில் , இன்றைய தினம் அந்த வழக்கினை விசாரிக்க மறு தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்பபப்ட்டு உள்ளது.

அது தொடர்பில் நாம் யாழ்.பிரதேச செயலக செயலாளர் பொன்னம்பலம் தயானந்தன் அவர்களுக்கும் மற்றும் உரியவர்களுக்கு எழுத்து மூலம் அறிவித்த பின்னரும் அவசர அவசரமாக சிலரின் தூண்டுதல்களினால் இந்த கடைகள் இடித்து அழிக்கப்பட்டு உள்ளது.

எந்தவொரு வழக்கிலும் காட்டப்படாத அதிதீவிர வேகம் இந்த வழக்கில் காட்டப்படுகின்றது மேல் முறையீட்டு நீதிமன்றில் இந்த வழக்கு விசாரணைக்காக திகதியிடப்பட்டு உள்ளது. எதிர்வரும் 6ஆம் திகதி வழக்கு விசாரணைக்கு எடுத்து கொள்ளப்படும் அதற்கு இடையில் எதற்காக வேகமாக கடைகள் இடிக்கப்பட்டன.

ஆனாலும் யாழ்.பல்கலைகழக  என கூறும் இருவர் நான் சட்டத்தரணி என அறிமுகம் செய்து உண்மை நிலையை எடுத்துக்கூறிய போதிலும் , என்னை ஒருமையில் விழித்து வெளியில் போ என துரத்த முற்பட்டார்கள். ஒரு சட்டத்தரணி என நான் என்னை அறிமுகம் செய்த பின்னரும் என்னை துரத்த முற்பட்டார்கள் என்றால் அப்பாவி கடைக்காரகளின் நிலைமை என்ன ?

இந்த விடயத்தை நாம் சட்ட ரீதியாக தான் அணுக போகின்றோம். இதனை நாங்கள் வன்முறை ஊடாக அணுகவில்லை. பாதிக்கப்பட்ட 9 கடை உரிமையாளர்களும் கொழும்பு மேல் முறையீட்டு நீதிமன்றில் வழக்குக்காக சென்று உள்ளார்கள். அவர்கள் இல்லாத நேரத்தில் இந்த கடைகள் இடிக்கபப்ட்டு உள்ளது.

எதற்கு எதிராக இலங்கையில் எத்தனை சட்ட எல்லை வரை செல்ல முடியுமோ அதுவரை சென்று நீதி கேட்போம் என தெரிவித்தார்.

மாற்றிடம் தாருங்கள்.

நாங்கள் இந்த இடத்தை விட்டு போக மாட்டோம் என சொல்லவில்லை. எமக்கு மாற்றிடம் தருமாறு கோரி வருகின்றோம். அதற்கு இடையில் திடீரென எமது கடைகளை அகற்றுமாறு கோரி அதனை இடித்து அழித்ததை ஏற்க முடியாது.

நாங்க பலாத்தகாரமாக இந்த இடத்தில் கடைகளை அமைக்க வில்லை அப்போதைய அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா அவர்களால் தான் இந்த இடம் எமக்கு தரப்பட்டது. அதனை நம்பியே நாம் இதில் கடைகளை நிரந்தரமாக அமைத்தோம். ஆனால் திடீரென எமது கடைகளை இடித்து அழித்து விட்டனர்.

நாம் பல கடன்களை இந்த கடைகளை நம்பியே பெற்று இருந்தோம் திடீரென அவற்றை அளித்தமையினால் நாம் பலத்த பொருளாதார நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளோம். எனவே எமக்கு மாற்று ஏற்பாடுகளை உடனடியாக செய்து தரவேண்டும். என கடை உரிமையாளர்கள் தெரிவித்தனர்.

பல்கலைகழகமே கட்டடங்களை அகற்றும் பணிகளை செய்தது .

யாழ்.பிரதேச செயலகத்தால் நீதிமன்றில் வழக்கு தொடர்ந்து நீதிமன்றம் கடைகளை அகற்ற உத்தரவு இட்டு கடைகளை அகற்றி பிரதேச செயலகத்திடம் காணியை பாரப்படுத்தியது. அதனை அடுத்து பிரதேச செயலகம் காணியை மருத்துவ பீடத்திடம் கையளித்தது.

அதனை தொடர்ந்து மருத்துவ பீடத்தினர் காணியை பொறுப்பெடுத்து காணிக்குள் இருந்த கட்டடங்களை அகற்றும் பணியில் ஈடுபட்டனர். அந்த நேரத்தில் சில குழப்பங்கள் அசம்பாவீதங்கள் நடைபெறுவதாகவும் அது தொடர்பில் நேரில் சென்று பார்வையிடுமாறும் பிரதேச செயலகர் எனக்கு பணித்திருந்தார். அதனாலயே நான் இங்கே வந்தேன். என J/80 பெரிய கடை  கிராம சேவையாளர் தெரிவித்தார்.

சட்ட ரீதியான ஆவணங்களை கையளித்து இருந்தால் கடைகளை இடிக்காமல் விட்டு இருப்போம்.

யாழ்.பல்கலைகழக பதிவாளரின் பணிப்பின் பேரில் தான் இங்கே வந்துள்ளோம்.  இந்த காணி பல்கலைகழகத்திற்கு ஒப்படைக்கப்பட்டு உள்ளதாக யாழ்.பிரதேச செயலக செயலாளர் கடிதம் மூலம் அறிவித்து உள்ளார். அதனை அடுத்தே இந்த காணியில் இருந்த கட்டடங்களை அகற்றும் நடவடிக்கையை முன்னெடுத்தோம்

அந்த நேரம் வெள்ளை சேர்ட்டும் கருப்பு ஜீன்ஸ்சும் அணிந்த ஒருவர் வந்து தான் சட்டத்தரணி கடைகளை இடிக்க வேண்டாம் என தடுத்தால் என்ன செய்ய முடியும், அவர் எம்மை அச்சுறுத்தும் வகையிலையே கதைத்தார்.

சட்ட ரீதியான ஆவணங்கள் எதுவும் இல்லமால் எங்களை அச்சுறுத்தி எமது அரச பணிக்கு இடையூறு விளைவித்து உள்ளார்.

அவர் நீதிமன்றினால் தடையுத்தரவு எடுத்து வந்து தந்திருந்தால் நாம் கட்டடங்களை அகற்றாமல் விட்டிருப்போம். ஆனால் அவர் அதனை செய்யாது எம்மோடு வந்து முரண்பட்டு பயனில்லை என தெரிவித்தனர். என யாழ்.பல்கலைகழக பாதுகாப்பு உத்தியோகஸ்தர்கள் தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More