Home உலகம் சீனாவின் “முள்ளிவாய்க்காலா” தியன்மென் சதுக்கம்? டாங்கிகளால் கொன்றொழிக்கப்பட்ட மாணவர்களும் நசுக்கப்பட்ட போராட்டமும்….

சீனாவின் “முள்ளிவாய்க்காலா” தியன்மென் சதுக்கம்? டாங்கிகளால் கொன்றொழிக்கப்பட்ட மாணவர்களும் நசுக்கப்பட்ட போராட்டமும்….

by admin

குளோபல் தமிழ்ச் செய்திகளின் அலுவலக செய்தியாளர்…

சீனாவில், 1989ஆம் ஆண்டு இடம்பெற்ற தியானன்மென் சதுக்க போராட்டத்தில், குறைந்தது 10,000 பேர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. இதனை புதிதாக வெளியாகியுள்ள பிரித்தானியாவின் வெளிவிவகாரக் கோப்பு விவரங்கள் உறுதிப்படுத்தி உள்ளன. இந்த உயிர் பலி எண்ணிக்கையினை, ரகசிய ராஜதந்திர தகவல் பறிமாற்ற முறையின் ஊடாக, அப்போதைய சீனாவிற்கான பிரித்தானிய தூதர் அலன் டொனால்டிற்கு அனுப்பப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது

இந்த ஆண்டு ஜூன் 5ஆம் திகதி இந்தத் தந்தி கிடைத்ததாக தெரிவித்த டொனால்ட், இந்தத் தகவலை பெற்றுத் கொடுத்தவர் அப்போதைய சீன அமைச்சரவையில் உறுப்பினராக இருந்த ஒருவரின் நெருங்கிய நண்பர் எனவும், அவரின் மூலமாக இந்த தகவல்கள் பறிமாறப்பட்டன எனவும் தெரிவித்துள்ளார். எனினும் இதற்கு முன்பு வெளியான அறிக்கைகளின்படி, இறந்தவர்களின் எண்ணிக்கை, ஆயிரத்திற்கு மேல் என்றே தெரிவிக்கப்பட்டிருந்தது.

இந்தப் போராட்டத்தின் பின், 1989ஆம் ஆண்டு, ஜூன் மாத இறுதியில் சீனா வெளியிட்ட அறிக்கையில், ஜூன் 4ஆம் திகதி இடம்பெற்ற போராட்டத்தில் பொதுமக்களில் 200 பேரும் பல பாதுகாப்பு அதிகாரிகளும் இறந்ததாக குறிப்பிடப்பட்டு இருந்தது.

இந்தத் தகவல்கள் லண்டனிலுள்ள பிரித்தானிய தேசிய ஆவணக்காப்பத்தில் வைக்கப்பட்ட நிலையில், கடந்த ஒக்டோபர் மாதம், H.K.01 என்ற செய்தி தளத்தில் வெளியாகி இருந்தன.

இந்தத் தகவல் அளிப்பவர் மிகவும் நம்பிக்கையானவர் எனவும், கடந்த காலங்களில் நம்பத்தகுந்த கருத்துகளையும், புரளிகளையும் பிரித்துப்பார்க்கும் சரியான தன்மை கொண்டவர் எனவும் அலன் அலன் டொனால்ட் குறிப்பிட்டுள்ளார்.

மாணவர்கள் ஒரு மணிநேரத்தில், சதுக்கத்தைவிட்டு வெளியேற வேண்டும் எனத் தீர்மானித்து இருந்தனர் எனவும் எனினும் அடுத்த ஐந்து நிமிடங்களில், அவர்கள் டாங்கிகளால் தாக்கப்பட்டனர் எனவும் டொனால்ட் தனது குறிப்பில் எழுதியுள்ளார்.

மாணவர்கள் போராட்டத்தில் இருந்து வெளியேற நினைத்த போதிலும், அவர்கள் கொல்லப்பட்டனர், பின்னர் ஏ.பி.சி டாங்கிகள், அவர்கள் உடல்கள் மீது பலமுறை ஏற்றி இறக்கப்பட்டன, அந்த நசுங்கிய உடல் மிச்சங்கள், கனரக வாகனத்தில் சேமிக்கப்பட்டு எரிக்கப்பட்டன எனவும் மிஞ்சியவை கால்வாய்களில் கரைக்கப்பட்டன எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

காயப்பட்டு, உயிருக்காக கெஞ்சிய நான்கு பெண்கள், துப்பாக்கி முனையில் உள்ள ஈட்டியால் குத்திக் கொல்லப்பட்டனர் எனவும் தெரிவித்த டொனால்ட் அரசின் குழுவிலிருந்த சில உறுப்பினர்கள், உள்நாட்டுப்போர் உடனடியாக தேவை என்ற நிலைப்பாட்டில் இருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

ராணுவம் அனுப்பப்படும் வரை, ஏழு வாரங்களாக இந்த அரசியல் போராட்டம் நடைபெற்றது என்பதுடன் கம்யூனிச சீனாவின் வரலாற்றிலேயே மிகப்பெரிய போராட்டம் இதுவாகும் என்பதுடன் அங்கு இடம்பெற்ற கொலைகள், சீனாவில் இன்னும்கூட உணர்ச்சி மிகுந்த சம்பவங்களாக உள்ளன.

இந்த சம்பவம் குறித்து சமூக வளைத்தளங்களில் விவாதிப்பது குறித்து சீனா அதிக கட்டுப்பாடுகளை விதித்துள்ளதுடன் அனைத்து செயல்பாட்டாளர்களுக்குமான நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சிகளையும் தடைசெய்துள்ளது.

எனினும்;, உலகளவில் பல இடங்களில் இதன் நினைவுநாளுக்காக ஆண்டுதோறும் பல செயல்பாட்டாளர்களால் அஞ்சலி செலுத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, ஹொங்ஹொங் மற்றும் தைவானில் இந்த நினைவு அஞ்சலி நாள் அனுசரிக்கப்படுகிறது.

 

படங்கள் – independent uk

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More