Home இலங்கை யாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….

யாழ் முஸ்லிம்களை ஒரு சில எஜமான்கள், தமது அடிமைகளாக வைத்திருக்க விரும்புகின்றார்கள்….

by admin

யாழ் முஸ்லிம் மக்களை ஒரு சில எஜமான்கள் தமது அடிமைகளாக வைத்திருக்கவே விரும்புகின்றார்கள். ஆனால் நான் இருக்கும்வரை எமது மக்களை கௌரவமானவர்களாக சுதந்திரமானவர்களாகவே வாழவைப்பேன் என வடக்கு மாகாணசபை உறுப்பினர் அய்யூப் அஸ்மின் தெரிவித்தார்.

யாழ் முஸ்லிம் மக்களுக்கு உதவித்திட்டங்களை கையளிக்கும் நிகழ்வு யாழ் ஒஸ்மானியா கல்லூரி மஹ்மூத் மண்டபத்திலே அப்துல் கபூர் நௌபர் தலைமையில் நேற்று(21) இடம்பெற்றது.

இதன் போது கருத்து வெளியிட்ட அவர்,

மக்கள் சுயாதீனமாக தமது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டுமாக இருந்தால் அவர்கள் தமது சொந்த உழைப்பில் தமது வாழ்வை மேற்கொள்வதற்கு முன்வரவேண்டும் இப்போது எமது மக்களின் நிலைமைகள் திருப்திப்படும் வகையில் இல்லை இதற்குப் பல காரணிகள் இருக்கின்றன நான் இதற்கான காரணிகளை வெளியில் தேடவில்லை உள்ளேதான தேடுகின்றேன். நான் கடந்த ஐந்து வருடங்களில் நிறைவேற்றி முடித்திருக்கின்ற செயற்திட்டங்களை மீளாய்வு செய்கின்றபோது நான் திருப்தியடையும் அமைப்பில் அவை அமைக்கப்பட்டிருக்கின்றன.

எமது மக்கள் அடிமைகள் அல்ல இதை செய்யவேண்டும் இதைச் செய்யக்கூடாது இவரோடு பேசவேண்டும் இவரோடு பேசக்கூடாது இவரோடு இருந்தால் உனது தொழிலை நான் பறிப்பேன் இவருக்கு ஆதரவாக இருந்தால் நீ வாடகை கொடுத்து இருக்கும் எனது கடையை நான் பறிப்பேன் இப்படியாக பல்வேறு விடயங்கள் எமது பிரதேசத்திலே நடைபெற்றுக்கொண்டிருக்கின்றன. எனது கேள்வி என்னவென்றால் இந்தப் பிரதேசத்தில் நாம் மீள்குடியேற்றத்தை மேற்கொள்வதற்கு ஒத்துழைக்கின்றோமா அல்லது காட்டுத்தர்பார் செய்கின்றோமா என்பதுதான். இறைவனின் நியதிகளின்படி இவை எதுவுமே நிலைக்கின்ற செயற்பாடுகள் அல்ல. நான் எனது மக்களை நன்கு அறிந்து வைத்திருக்கின்றேன் அவர்களது பலம் என்ன பலவீனம் என்ன என்பதை நான் நன்கு அறிந்தே வைத்திருக்கின்றேன் எனவே எனது மக்களை ஒரு சீரான பாதையில் வழிநடாத்துவதற்கும் அவர்களுக்கு நன்மையான விடயங்களைக் கொண்டுவந்து சேர்ப்பதற்கும் நான் அர்ப்பணத்தோடு செயலாற்றுவேன்.

மாகாணசபை கலைந்ததன் பின்னர் என்னுடைய அரசியல் ரீதியான செயற்பாடுகள் ஒரு சாதாரண சமூக ஆர்வலனாக தொடரும். இறைவனின் அருளைக்கொண்டு முன்னரை விட மிகவும் பலமான அமைப்பில் எனது செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும். யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் தமிழ் மக்கள் யாழ் மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினர்கள் யாழ் மாநகரசபையின் ஆளும்தரப்பு அரச அதிகாரிகள் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இலங்கைத் தமிழரசுக் கட்சி என்னும் மாபெரும் அரசியல் நிறுவனம் என்பவற்றின் துணையோடு எமது மக்களுக்குத் தேவையான அனைத்துவிடயங்களையும் நான் முன்னெடுப்பேன் என இவ்விடத்தில் குறிப்பிட்டுக் கூற விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

இதன் போது வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான அய்யூப் அஸ்மினின் 10 இலட்சம் பெறுமதியான உதவித்திட்டங்களும் இ.ஜெயசேகரத்தின் 2இலட்சம் பெறுமதியான உதவித்திட்டங்களும் கேசவன் சயந்தனின் 1இலட்சம் ரூபாய் உதவித்திட்டங்களும் முஸ்லிம் மக்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட்டன.

பாறுக் ஷிஹான்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More