Home இலங்கை கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் காலமாகியுள்ளார்

by admin

கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்ட சக ஊடகவியலாளர் இராமச்சந்திரனின் தந்தையார் சுப்பிரமணியம் கரவெட்டி ,துன்னாலையில் தனது 86 வயதில் காலமாகியுள்ளார்.தனது இறுதிக்காலங்களில், மரணம் சம்பவிக்கும் வரை காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனான இராமச்சந்திரனை தேடிக்கண்டறிவதிலும் அவருக்கு நீதி பெற்றுக்கொள்வதிலும் அமரர் சுப்பிரமணியம் விடாமுயற்சியுடன் பாடுபட்டு வந்திருந்தார்.

தனது வயோதிப மனைவி சகிதம் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகன் பற்றி தகவல்களை பகிர்ந்து கொள்வதில் என்றுமே அமரர் சுப்பிரமணியம் பின்னின்றதில்லை.தன்னை தேடி வரும் ஊடக செயற்பாட்டளர்களுடன் தனது மகனது விடுதலைக்காக அவர் நீண்ட பயணத்தை செய்துமிருக்கின்றார்.

தனது மகன் காணாமல் ஆக்கப்பட்ட நாளில் இருந்து அவரை கண்டறிய தேடி அலைந்து பதிலேதும் கிடைக்காமலேயே அவர் இந்த மண்ணிலிருந்து பிரிந்துள்ளார்.தான் இறப்பதற்குள் காணாமல் ஆக்கப்பட்ட தனது மகனைப் பார்க்க வேண்டும் என்றும் , தனது இறுதிக்கிரியைகளை தனது மகனான இராமச்சந்திரனே முன்னின்று நடத்தவேண்டுமெனவும் அவர் பல தடவை பேசியிருக்கின்றார்.தனது மகனிற்கான சேமிப்பை தனது மரணத்தின் முன்னாராக அவரிடம் கையளிக்கவேண்டுமென்ற அவரது கனவு கடைசிவரை மெய்க்காதே போயேவிட்டது.

தமிழர் மக்களது துன்பியல் வாழ்வில் காணாமல் ஆக்கப்பட்ட தமது குடும்ப உறவுகளை தேடிக்கொண்டிருக்கின்ற போதே இந்த உலகை விட்டு பிரிந்துவிடுவது தொடர்கின்றது.அதனுள் ஒன்றாக காணாமல் ஆக்கப்பட்ட ஊடகவியலாளர் இராமசந்திரனின் தந்தையார் சுப்பிரமணியத்தின் மரணமும் அமைந்திருக்கின்றது.

2007ம் ஆண்டின் பெப்ரவரி மாதத்தில் வடமராட்சியின் துன்னாலை கலிகை சந்தி இலங்கை இராணுவ படைமுகாமில் வைத்து இராமச்சந்திரன் காணாமல் ஆக்கப்பட்டிருந்தார்.தடுத்து வைக்கப்பட்டிருந்த சூழலில் ஒரிரு நாட்கள் அவர் தொலைபேசி செயற்பட்டுக்கொண்டிருந்தேயிருந்தது.விசாரணையொன்றிற்காக தான் தடுத்து  வைக்கப்பட்டிருந்தமையினை அவர் அப்போது பகிர்ந்துள்ளார்.

யாழ்.தினக்குரல் ,வலம்புரி நாளிதழ்களது பிரதேச செய்தியாளராக பணியாற்றிக்கொண்டிருந்த இராமச்சந்திரன் தொடர்பில் இன்று வரை தகவல்கள் அற்றேயுள்ளது. தனது மகனிற்காக நீதி கோரி போராடியவாறே காலமாகியுள்ள அமரர் சுப்பிரமணியத்திற்கு யாழ்.ஊடக அமையம் தனது அஞ்சலிகளை செலுத்திக்கொள்கின்றது.

அன்னாரது பிரிவினால் கவலையுற்றிருக்கும் அவரது குடும்பத்திற்கும் எமது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்வதுடன் அவரது ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றது.

யாழ்.ஊடக அமையம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More