Home இலங்கை 10 வகுப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதி -பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் போராட்டம் நிறைவு

10 வகுப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதி -பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையின் போராட்டம் நிறைவு

by admin


பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளதை அடுத்து இரு நாள்களாக இடம்பெற்ற போராட்டம் இன்று புதன்கிழமை மதியத்துடன் முடிவுக்கு வந்தது.

குறித்த பாடசாலையில் இதுவரை தரம் 9 வரையான வகுப்புக்கள் இயங்கிவந்த நிலையில், க.பொ.த சாதாரண தரம் வரையான வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பல வருடங்களாக பாடசாலைச் சமூகம் கோரிக்கை விடுத்துவந்தது.

இந்த விடயம் தொடர்பாக கடந்த நவம்பர் மாதம் 28 ஆம் திகதி வலிகாமம் வலயக் கல்விப் பணிப்பாளரிடம் விடுத்த கோரிக்கை தொடர்பாக எதுவித நடவடிக்கையும் எடுக்காத அவர், இவ்வருடம் தரம் 10 வகுப்புக்கு அனுமதி வழங்க முடியாது என டிசம்பர் மாதம் 28 ஆம் திகதி பதில் வழங்கினார்.

அவரது இந்த அசமந்தப் போக்கால், காலங்கடந்த பதிலை ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறிய பெற்றோர்களும் பழைய மாணவர்களும் பாடசாலைக்கு முன்பாக நேற்று (02) செவ்வாய்க்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

இப்பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கப்படும் வரை தாங்கள் போராட்டத்தை தொடர்வோம் எனக் கூறிய அவர்கள் இன்று புதன்கிழமை காலையும் போராட்டத்தை முன்னெடுத்தனர்.

இப்போராட்டத்தினால் மாணவர்கள் எவரும் பாடசாலை உள்ளே செல்லவில்லை. அவர்கள் பெற்றோருடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

மாணவர்களுடன் இணைந்து பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கிராமமட்ட அமைப்புக்களின் பிரதிநிதிகளும் உறுதியுடன் போராட்டத்தை முன்னெடுத்தனர். இதன்;போது வட்டுக்கோட்டைப் பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.

சம்பவத்தைக் கேள்வியுற்ற வடக்கு மாகாண சபை உறுப்பினர் சோ.சுகிர்தனும் அங்கு வந்து போராட்டக்காரர்களுடனும் அதிபர், ஆசிரியர்களுடனும் கலந்துரையாடினார். இந்தப் பாடசாலை தரம் உயர்த்தப்படவேண்டியதன் அவசியத்தை அவரும் வலியுறுத்தினார்.

இந்நிலையில், வலயக் கல்விப் பணிமனையில் இடம்பெற்ற விசேட கூட்டம் ஒன்றை அடுத்து பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் அடுத்த வருடம் தரம் 11 வகுப்பை ஆரம்பிப்பது எனவும் முடிவெடுக்கப்பட்டது. இந்த முடிவு மாகாணக் கல்வி அமைச்சுக்கு அனுப்பிவைக்கப்பட்டது.

இதனையடுத்து அந்தக் கடிதத்தின் பிரதி போராட்டக்காரர்களுக்கு வழங்கப்பட்டதை அடுத்து மதியம் 1.00 மணியளவில் போராட்டம் கைவிடப்பட்டது. இதையடுத்து மாணவர்கள் வகுப்புக்களுக்குச் சென்றனர். இன்றைய தினமே தரம் 10 மாணவர்களுக்கு கற்றல் கற்பித்தல் வகுப்புக்கள் ஆரம்பமாகின.

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலை மாணவர்களும் பெற்றோர்களும் போராட்டம்

Jan 3, 2018 @ 06:15


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தரம் 10ஐ ஆரம்பிக்குமாறு கோரி மாணவர்களும் பெற்றோர்களும் நேற்று செவ்வாய்க்கிழமை முதல் கவனயீர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர். பொன்னாலை வரதராஜப் பெருமாள் வித்தியாசாலையில் தற்போது தரம் 9 வரையே வகுப்புக்கள் இடம்பெறுகின்றன. பாடசாலையில் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை ஆரம்பிக்குமாறு பழைய மாணவர்களும் பெற்றோர்களும் கடந்த பல வருடங்களாகக் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

‘இவ்வருடத்தில் (2018) இருந்து தரம் 10 ஐ ஆரம்பித்து அடுத்த வருடம் க.பொ.த சாதாரண தர வகுப்புக்களை நடத்துமாறு வலிகாமம் வலயக் கல்வி அலுவலகத்துக்கு கடந்த நவம்பர் 28 ஆம் திகதி கடிதம்மூலம் கோரிக்கைவிடுத்திருந்தோம்.

ஒரு மாதம் தாமதித்து டிசெம்பர் 28 ஆம் திகதி, இவ்வருடம் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க முடியாது என வலயக் கல்விப் பணிப்பாளர் அறிவித்தார்’ என பழைய மாணவர் சங்கச் செயலாளர் தெரிவித்தார். பொன்னாலை கிராம அபிவிருத்திச் சங்கம், மாதர் கிராம அபிவிருத்திச் சங்கம், பாடாசாலை அபிவிருத்திச் சங்கம், கிராம அபிவிருத்திச் சங்கம், கடற்றொழிலாளர் கூட்டுறவுச் சங்கம், ஸ்ரீ கண்ணன் சனசமூக நிலையம் ஆகிய பொது அமைப்புக்கள் இணைந்தே மேற்படிக் கோரிக்கையை முன்வைத்தனர்.

தமது கோரிக்கைக்கு வலயக் கல்விப் பணிப்பாளர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று பழைய மாணவர் சங்கம் குற்றஞ்சாட்டியது. இப்பாடசாலையில் தரம் 9 இல் கல்வி கற்றுவிட்டு வேறு பாடசாலைகளுக்குச் செல்பவர்கள் உரிய போக்குவரத்து வசதிகள் இன்மையால் இடைவிலகுகின்றனர்.

இதனால் பொன்னாலைக் கிராமம் கல்வியில் தொடர்ச்சியாகப் பின்னடைந்து வருகின்றது என பெற்றோர் தெரிவித்தனர். தமது பாடசாலையில் தரம் 10 வகுப்பை ஆரம்பிக்க அனுமதி வழங்கும் வரை தாங்கள் போராட்டத்தில் ஈடுபடப்போவதாக பெற்றோர்களும் மாணவர்களும் தெரிவித்துள்ளனர்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More