Home இலங்கை தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு!

தொலைக்காட்சி வரலாற்றில் பல முதலாவதுகளைக் கண்ட கமலா தம்பிராஜா மறைவு!

by admin

M. வரதராஜன்..

*இலங்கையின் முதலாவது தொலைக்காட்சித் தமிழ்ச் செய்தி வாசிப்பாளர்

*இலங்கையின் முதலாவது பெண் தொலைக்காட்சித் தமிழ்ச் செய்திகள் பெண் வாசிப்பாளர்

*இலங்கையின் முதலாவது – தமிழ்த் தொலைக்காடசி நிகழ்ச்சிகள் -பெண் தயாரிப்பாளர்

*இலங்கையின் முதலாவது தமிழ் சிறுவர் நிகழ்ச்சித் தொலைக்காட்சித் தயாரிப்பாளர்

*முதலாவது :
திரைப்படத்தில் நடித்த மின் ஊடகப் பெண் ஊடகவியலாளர்

*முதலாவது:
அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்தில் தயாரிப்பாளராக வந்த பெண் ஊடகர்

*முதலாவது:
அச்சு ஊடகத்திலிருந்து மின் ஊடகத்திற்கு வந்து செய்தி வாசித்த பெண் ஊடகர் என்ற பெருமைகள் பலவற்றைக் கண்டவர்.

ரூபவாஹினியில் இவர் காலத்தில் பணியாற்றிய அஜிதா கதிர்காமர், விநோதினி அமரசிங்கம் போன்ற தமிழர்கள் இருந்தபோதிலும் அவர்கள் செய்திவிவரண நடப்புவிவகார நிகழ்ச்சிகளையே தயாரித்தனர்.

ஆனால் கமலா தமிழ் சிறுவர் நிகழ்ச்சியைத் தயாரித்தமையாலேயே அவர் முதலாவது தமிழ்ப் பெண் தயாரிப்பாளர் என நான் குறிப்பிட்டேன்.

இலங்கையின் தமிழ்த் தொலைக்காட்சிச் செய்திகள் 1979 இல் முதலில் ஐரிஎன் னிற்காகத் தயாரிக்கப்பட்டன .

அமரர் ஜோர்ஜ் சந்திரசேகரனே இலங்கைத் தமிழ்த் தொலைக்காட்சிச் செய்திகளின் முதலாவது தயாரிப்பாளராவார்.

அந்நேரம் செய்தி வாசித்த முதலாவது வாய்ப்பை கமலா தம்பிராஜா பெற்றுக் கொண்டார். தொலைக்காட்சித் தயாரிப்பில் முக்கியம் வாய்ந்த நேரமுகாமைத்துவத்திற்கும்
ஜோர்ஜ் அண்ணருக்கும் “விவாகரத்து” அமைந்ததால் தயாரிக்கும் பொறுப்பு அமரர் சில்வெஸ்டர் பாலசுப்பிரமணியத்திற்குக் கிடைத்தது எனப்பட்டது.

கமலாவைத் தொடர்ந்து மனோகரி சதாசிவம், வி.என்.மதியழகன் ஆகியோர் செய்திகளைத் தொலைக்காட்சியில் வாசித்தார்கள்.

1982 இல் இலங்கை அரச தொலைக்காட்சிஆரம்பமான காலத்தில் தொடங்கிய செய்தி மஞ்சரியையும் பின் செய்திகளையும்
பார்த்தவர்கள் கமலா தம்பிராஜாவை மறக்கமாட்டார்கள்.

இலங்கைத் தொலைக்காட்சி வரலாற்றில் முதலாவது சிறுவர் நிகழ்ச்சியான “மலரும் அரும்புகள்” நிகழ்ச்சியைப் பார்த்தவர்களுக்கு ” தயாரிப்பு : கமலா தம்பிராஜா” என்ற ஈற்றெழுத்து வாசகம் நினைவிருக்கலாம்.

நவீன கணினி எழுத்தோட்ட முறை வரமுன்னர் ரூபவாஹினி எழுத்து ஓவியர்கள் இர்ஷாத் கமால்தீன் ; யூ எல் எம் ரபீக்கின் எழுத்தில் திரையில் தோன்றிய பெயர் அது. கறுப்பு வெள்ளை அல்லது வண்ண fss card ( frequency slide system) அட்டையில் அவர்கள் எழுதித்தர கலையகம் அல்லது ரூபவாஹினி பிரதான கட்டுப்பாட்டகத்தில் ( Main Control Room ) அதனைப் பதிவு செய்து நிகழ்ச்சி அம்சங்களைத் தொகுத்து முடிய கமலா நின்று கடைசிக் cards ஐ நிகழ்ச்சி இறுதியில் போட்டுவிட்டு “எல்லாம் முடிய , இதுதான் முக்கியம் வரதராஜா ” என்று எழுத்தோட்டம் பற்றி சொன்னநாட்கள் மனதில் இன்று வந்தன.

1985 முதல் அவர் கனடாவுக்குப் போகும்வரை மலரும் அரும்புகள் நிகழச்சிக்கு தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றினேன்.

ரூபவாஹினியின் சிறுவர் நிகழ்ச்சிப்பிரிவு கல்விநிகழ்ச்சிப்பிரிவின் கீழ் இருந்தது. அதனால் நான் அவருக்கு தயாரிப்பு உதவியாளராகப் பணியாற்றும் வாய்ப்பைப் பெற்றேன்.
அப்போது நான் பயிற்சித் தயாரிப்பு உதவியாளன

“சிறுவர் நிகழ்ச்சித் தயாரிப்பில் ஈடுபட்டால் பிற்காலத்தில் நல்ல ஒளிபரப்பாளராக வரலாம்” என்று எனக்கு அடிக்கடி சொல்வார். அப்படி என்னை ஊக்கப்படுத்தியவர்.

இன்று உலகெங்கும் புகழ்பெற்று விளங்கும் பல கலைஞர்கள், சில ஒலிபரப்பாளர்கள் – கமலா தம்பிராஜா தயாரித்த” மலரும் அரும்புகளில் ” சிறுவர்களாக பங்கேற்றவர்கள் ஆகும்.

கமலாவின் நிகழ்ச்சி ஒளிப்பதிவுக்கு கலையகம் ஒழுங்கு ( studio bookings), கலைஞர்களுக்கு உள் அனுமதிப் பத்திரம் இடுதல்( gate permit) , editing bookings, கலைஞர்களுக்கு வேதனம் போடுதல் என பல வேலைகளை கமலாவிடம் பயின்றேன்.

அதைமட்டுமல்ல.
தமிழ் மொழியை சரியாக எழுதுவதிலும் , சிறுவர் நாடகங்கள், சிறு நாட்டிய நாடகங்கள், உரையாடல்கள் என்பவற்றிலும் எப்படி ” எடிற்” செய்வது என்பதிலும் மொழியிலும் மிகக் கவனமுள்ளவராக இருந்தார்.

அவருடன் பணியாற்றுவது ஆசிரியையுடன் பணியாற்றுவது போன்ற அனுபவத்தையே தந்தது.
கண்டிப்பு, கோபம் என்பவை இல்லாத ஒரு தயாரிப்பாளராக இருந்தார்.

1985 ஆம் ஆண்டு நத்தார் சிறுவர் நிகழ்ச்சியே நான்அவருக்கு உதவியாகத் தயாரித்த அவருடனான முதல் தொலைக்காட்சி நிகழ்ச்சியாகும்.

கிறிஸ்து பிறப்பில் சம்மனசு வலதுபக்கமாகத் தோன்றுவாரா இடது பக்கமாகத் தோன்றுவாரா என்ற ஒவ்வொரு விடயத்திலும் கவனமாக அவர் கவனமெடுத்துத் தயாரிப்பது போன்ற அரிவரிகளை அவருடன் மலரும் அரும்புகள் தயாரிக்கும்போது கற்றுக்கொண்டேன். அவருடன் பணியாற்றிய அனுபவம் எனது தொலைக்காட்சிப் பாலபாடம்.

நான் பின்னர் கலையக நிகழ்ச்சிகளை சிறுவர் கதைகளாக, சிறுவர் நடனங்களாக, சிறுவர் நிகழ்ச்சிகளாகவும் பின்னர்
ரூபவாஹினித் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவிலும் ஏனைய தொலைக்காட்சிகளிலும் “சூப்பர்ஸ்டார் மெகா இசை ” நிகழ்ச்சிகளை இயக்குவதற்குரிய வல்லமையைத் தந்த “பாலர் வகுப்பாக அமைந்தது கமலாவின் “மலரும் அரும்புகள்” நிகழ்ச்சியே என்பதை இந்நாளில் நினைக்கின்றேன்.

எனது ஊரவரும் வீரகேசரி செய்தி ஆசிரியருமாயிருந்த நடாராஜா கமலாவின் நண்பராக இருந்தமை எனக்கு கமலாவுடனான எனது தொழில் உறவுகளுக்கு செளகரியமான சூழலைத் தந்திருந்தது. என்மீது நம்பிக்கையும் அன்பும் வைத்திருந்தார்.

வீரகேசரி, ஈரான் தூதரகம், தகவற் திணைக்களம் , இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்பன அவரது பயிற்சிக் களங்கள்.

கலைப்பட்டதாரியான அவர் வீரகேசரியில் பல சிறுகதைகளை எழுதியுள்ளார்.
வீரகேசரி பிரசுரம் எனப் பல நாவல்கள் வந்த வேளையில்
“நான் ஓர் அனாதை”- என்ற நாவலை அதில் வெளியிட்டிருந்தார்.

பொன்மணி திரைப்படத்தில் நடித்திருந்தார். கனடா சென்றபின்னரும் அங்கும் பல ஊடகங்களில் செய்தி ஆசிரியராக செய்தி வாசிப்பாளராகப் பணியாற்றியுள்ளார். கனடாவிலிருந்து எமது மூத்த ஒலி/ ஒளிபரப்பாளர் பி.விக்னேஸ்வரன்(Wicky Param) காலையில் தந்த துயரச் செய்தியில் கமலா கனடாவில் ஆற்றிய ஊடகப் பணிகளைக் குறிப்பிட்டுள்ளார்.

யார் யார்க்கு எங்கென்று காலங்கள் சொல்லும் நிலையில் நாம் குறிப்பாக தமிழர்கள் வாழும் இன்றைய சூழ்நிலையில் கமலா சவோய் பஸ் தரிப்பில் ஏறி எம்முடன் 154 பஸ்லில் வந்து யாவத்தையில் பஸ்ஸால் எம்முடன் இறங்கி, ரூபவாஹினி வந்து, கலையகங்கள், தொகுப்பகம், பிரதான கட்டுப்பாட்டகம், சிற்றுண்டிச்சாலை, அரங்க அமைப்புப் பிரிவு, செய்தி அறை, ஒப்பனை அறை, வரவேற்பு மண்டபம், பத்திரிகைகள் படிக்கும் ஓடை..என அவர் மிடுக்காய் நடந்து திரிந்த நாட்கள் எம்மை விட்டு அப்படி ஏன் விரைவாய்ப் போகின்றன என்று எண்ணுவதைத் தவிர நம்மால் வேறு என்ன செய்ய முடியும்?

மூத்த ஒளிபரப்பாளர் விக்னேஸ்வரன் Wicky Param அவர்கள் காலையில் அனுப்பிய செய்தியைக் கண்டபின்னர் வந்த ஒளி அலைகள் இவை.

கமலா உங்கள் நினைவுகள் எம் கண்களில் நிற்கும்!
நிம்மதியாய் உறங்குவீர்களாக!

உங்கள் அன்பின்
வரதராஜா…
(அவர் என்னை அழைக்கும் பெயர்)

(படம்:நன்றி Wicky Param)

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More