Home இலங்கை பேருந்து சாரதியை தாக்கிய புலனாய்வு உத்தியோகஸ்தருக்கு சிறை.

பேருந்து சாரதியை தாக்கிய புலனாய்வு உத்தியோகஸ்தருக்கு சிறை.

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

யாழ். நகரிலுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்தில் வைத்து சாரதியைத் தாக்கி, அச்சுறுத்தியமை தொடர்பான குற்றத்துக்கு காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரது முகவராகச் செயற்பட்டவருக்கு தலா இரண்டு மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கி யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

கடந்த 2016ஆம் ஆண்டு காலப்பகுதியில் யாழ்ப்பாணம் பண்ணையிலுள்ள தனியார் பேருந்துத் தரிப்பிடத்தில் சேவைக்காக தரித்து நின்ற பேருந்தின் சாரதியையும் நடத்துனரையும் அச்சுறுத்தி சாராயம் வாங்கித்தருமாறு இருவர் வற்புறுத்தி உள்ளனர்.

சாரதி அதற்கு மறுப்புத் தெரிவித்துள்ளதனால் ஆத்திரமடைந்த அந்த குறித்த இருவரும் சாரதி மீது தாக்குதல் நடத்தினர். அது தொடர்பில் தாக்குதலுக்கு இலக்கான சாரதியினால் யாழ்ப்பாணம் காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டதன் பிரகாரம் காவல்துறை புலனாய்வு உத்தியோகத்தர் மற்றும் அவரின் முகவர் ஆகிய இருவர் கைது செய்யப்பட்டனர்.

சாரதி மற்றும் நடத்துனரை அச்சுறுத்தியமை மற்றும் சாரதியைத் தாக்கியமை ஆகிய இரண்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்து சந்தேகநபர்கள் இருவருக்கும் எதிராக யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் காவல்துறை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.

வழக்கு விசாரணைகள் இடம்பெற்றுவந்த நிலையில் இரண்டு குற்றச்சாட்டுகளிலும் இருவரையும் குற்றவாளிகள் என நீதிவான் சின்னத்துரை சதீஸ்தரன் நேற்று செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்தார்.

‘குற்றவாளிகள் இருவரும் முதலாவது குற்றத்துக்காக தலா ஆயிரத்து 500 ரூபா தண்டம் செலுத்தவேண்டும். இரண்டாவது குற்றத்துக்காக குற்றவாளிகள் இருவருக்கும் 2 மாதங்கள் சிறைத்தண்டனை வழங்கப்படுகிறது’ என நீதிவான் தண்டனைத் தீர்ப்பை வழங்கினார்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More