Home இலங்கை பேசலாம் வாருங்கள் – விக்கி – முடியாது- பல்கலை மாணவர் – முற்றுப்பெறாத முள்ளிவாய்க்கால் பேரவலம்…

பேசலாம் வாருங்கள் – விக்கி – முடியாது- பல்கலை மாணவர் – முற்றுப்பெறாத முள்ளிவாய்க்கால் பேரவலம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்..


முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் கலந்துரையாடலில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் பிரதிநிதிகள் பங்குகொள்ளாமை வருத்தமளிக்கிறது என வடக்கு மாகாண முதலமைச்சர் சீ.வீ.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை ஒன்றிணைந்து முன்னெடுப்பது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சர் தலைமையில் இன்று (09.05.18) கலந்துரையாடல் நடைபெற்றது.

இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்று கருத்துக்களை வழங்குமாறு யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் பிரதிநிதிகளுக்கு முதலமைச்சர் அழைப்புவிடுத்திருந்தார். எனினும் முதலமைச்சரின் அழைப்பை ஏற்பதில்லை எனவும் கலந்துரையாடலில் பங்கேற்பதில்லை எனவும் யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம் தீர்மானித்திருந்தது.

இது குறித்து கருத்து வெளியிட்ட முதலமைச்சர், “யாழ்ப்பாண பல்கலைக்கழக மாணவர்கள் துரதிஷ்டவசமாக இன்றைய கலந்துரையாடலுக்கு வரவில்லை. மாணவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. நாமும் பல்கலைக்கழகத்தினூடாக வந்தவர்களே. அவர்கள் எங்களுக்கு எதிரானவர்கள் அல்ல. ஏதோ சில பிழையான கருத்துக்கள் அவர்களை ஆட்டிப்படைப்பதாக நான் நினைக்கின்றேன். முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வை நடத்தும் எண்ணம் அவர்களுக்கு இருக்கின்றது என்றால், முதலில் எம்முடன் வந்து கலந்தாலோசித்திருக்கலாம். 2 அல்லது 3 மாதங்களுக்கு முன்னர் வந்து, இவ்வாறு நாம் செய்யவுள்ளோம். அதனை நடத்தவதற்கு விருப்பமாக உள்ளது எனக் கூறியிருக்கலாம். எங்களுடைய உறுப்பினர்களையும் சேர்த்து அவர்களுடன் பேசி, நாங்கள் அதனைக் கொண்டு நடத்தியிருக்கலாம். ஆனால் “நாங்கள் செய்யப்போகின்றோம் எல்லோரும் வந்து சேருங்கள்” என்று அவர்கள் கூறியது வருத்தப்படவேண்டிய செயல். ஏனெனில், நாங்கள் செய்கின்றோம் நீங்கள் வந்து சேருங்கள் என ஒவ்வொருவரும் வந்து சொல்லலாம்..

உத்தியோகபூர்வமாகத்தான் நாம் இந்த விடயத்தில் உள்நுழைந்துள்ளோம். 3 வருடங்களாக செய்து வந்துள்ளோம் – அதனை முன்னெடுக்கும் காணி எமது அமைச்சின் கீழ் வருகின்றது. மாகாணத்தின் மக்களுடைய பிரதிநிதிகள் என்ற வகையில் எமக்கு அந்த உரித்து இருக்கின்றது. ஆகவே நாங்கள் உத்தியோகபூர்வமாக எமது கடமைகளைச் செய்துகொண்டிருக்கின்றோம். அந்தவகையில் முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்த வடக்கு மாகாண சபை தீர்மானித்துள்ளது. இதில் பல்கலைக்கழக மாணவர்களும் இணைந்து அஞ்சலி செலுத்தலாம். இது தொடர்பாகக் கலந்துரையாடுவதற்கு மாணவர் ஒன்றியத்தினரை மீண்டும் அழைக்கின்றேன்” என முதலமைச்சர் விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

எனினும்  முள்ளிவாய்க்கால் நினைவாலயத்தில் நினைவேந்தல் நிகழ்வை நடத்துவது தொடர்பில் வடக்கு மாகாண முதலமைச்சருடனும், அமைச்சர்களுடனும் யாழ்ப்பாணப் பல்கலைக் கழக மாணவர் ஒன்றியம் கலந்துரையாடாது என அந்தச் சங்கத்தின் தலைவர் கிருஸ்ணமேனன் அறிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More