Home இலங்கை மூவாயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள போதும் 34 பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு – மாற்று வலுவுள்ளோர் சங்கம் குற்றச்சாட்டு

மூவாயிரம் மாற்றுத்திறனாளிகள் உள்ள போதும் 34 பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு – மாற்று வலுவுள்ளோர் சங்கம் குற்றச்சாட்டு

by admin


குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் நிர்வாக குழு உறுப்பினர்கள், பிரதேச மட்ட உறுப்பினர்கள் அனைவரையும் விசேட கலந்துரையாடல் ஒன்றுக்கு வருமாறு எழுத்து மூலம் அழைத்து 3000 பேர் உள்ள இடத்தில் யாப்புக்கு மாறாக கோரமின்றி 34 பேருடன் புதிய நிர்வாகத்தை மாவட்ட சமூக சேவைகள் திணைக்களம் தெரிவு செய்துள்ளது. என மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் இதுவரையான காலத் தலைவரான ஆ. சிவநேசன் குற்றம் சுமத்தியுள்ளனர்.

இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது

கிளிநொச்சி மாவட்ட மாற்று வலுவுள்ளோர் சங்கத்தின் நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மட்ட உறுப்பினர்களை கடந்த 21-05-2018 திங்கள் கிழமை காலை பத்து மணிக்கு மாவட்ட சமூக சேவைகள் திணைக்கள அலுவலகத்தில் மாகாண பணிப்பாளர் தலைமையில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலுக்கு வருமாறு மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் வே தபேந்திரன் எழுத்து மூலம் அறிவித்திருந்தார்.

இதற்கமைவாக மாவட்டத்தில் மூவாயிரத்திற்கு மேற்பட்ட மாற்றுவலுவுள்ளோர் உறுப்பினர்களாக உள்ள இடத்தில் நிர்வாக உறுப்பினர்களும், பிரதேச மட்ட உறுப்பினர்களும் என சுமார் முப்பது பேர் கலந்துரையாடலுக்கு சென்றிருந்தோம். ஆனால் அங்கு விசேட கலந்துரையாடலுக்கு பதிலாக கிளிநொச்சி மாவட்ட மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் புதிய நிர்வாகத் தெரிவினை மேற்கொண்டனர்.

இதற்கு நாம் எங்களுடைய கடுமையான எதிர்ப்பினை வெளிப்படுத்தினோம், மூவாயிரம் பேர் உள்ள இடத்தில் முப்பது பேருடன் புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ள முடியாது இது சட்டவிரோதமானது, அத்தோடு கோரமும் இல்லை எனவே தாங்கள் எம்மை எழுத்து மூலம் என்ன நோக்கத்திற்காக அழைத்தீர்களோ அதனை மேற்கொள்ளுங்கள், புதிய நிர்வாகத்தை தெரிவை மேற்கொள்ள வேண்டாம். புதிய நிர்வாகத் தெரிவு மேற்கொள்ள வேண்டுமாயின் 14 நாட்களுக்கு முன் அறிவித்தல் விடப்பட்டு பெரும்பாலன உறுப்பினர்களின் பிரசன்னத்துடன் மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தியோடு எதிர்பினையும் வெளியிட்டோம் இருப்பினும் எமது கோரிக்கையினையும், எதிர்ப்பினையும் பொருட்படுத்தாது மாகாண சமூக சேவைகள் பணிப்பாளரின் முன்னிலையில் சட்ட விதிமுறைகளுக்கு மாறாக புதிய நிர்வாகத்தை மாவட்ட சமூக சேவைகள் அலுவலர் மேற்கொண்டுள்ளார் எனத் தெரிவித்தார் மாற்றுவலுவுள்ளோர் சங்கத்தின் தலைவர் ஆ. சிவநேன்.

இது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட சமூகசேவைகள் அலுவலர் வே. தபேந்திரனை வினவிய போது

விசேட கலந்துரையாடலுக்காகவே எழுத்து மூலம் அறிவிக்கப்பட்டது என்றும் ஆனால் வருகை தந்தவர்கள் புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொள்ளுமாறு கோரிக்கை விட்டமைக்கு அமைவாக தாம் புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொண்டதாக குறிப்பிட்ட யாப்புக்கு மாறாக கோரம் இன்றி புதிய நிர்வாகத் தெரிவை மேற்கொண்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டு தெடர்பில் வினவிய போது மூவாயிரம் பேர் மாவட்டத்தில் மாற்று வலுவுள்ளோராக உள்ள போதும் சுமார் முன்னூறுக்கு மேற்பட்டவர்களே அங்கத்தவர்களாக உள்ளனர். இதில் கடந்த திங்கள் 36 பேர் வரை கலந்துகொண்டனர். மேலும் கடந்த 2016 ஆம் ஆண்டு தலைவர் தெரிவும் கோரமின்றியே இடம்பெற்றது எனத் தெரிவித்தார்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More