இந்தியாவின் ஜார்க்கண்ட் மாநிலத்தில் ஆள் கடத்தலுக்கு எதிராக தெருவோர நாடகங்கள் மூலம் விழிப்புணர்வு பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த ஐந்து பெண் செயற்பாட்டாளர்கள், கடத்தப்பட்டு துப்பாக்கி முனையில் கூட்டு வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதாக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பெண்கள் வலுக்கட்டாயமாக கார்களில் ஏற்றிச் செல்லப்பட்டு யாருமற்ற ஓர் இடத்தில் வன்புணர்வு செய்யப்பட்டதாக காவற்துறையினர், தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்துவதாக காவற்துறையினர் கூறுகின்றனர், ஆனால் சம்பவம் தொடர்பாக இதுவரை யாரும் கைது செய்யப்படவில்லை. குந்தி மாவட்டத்தில் ஆள் கடத்தல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றுடன் இணைந்து பணியாற்றும் பெண்கள் சென்றனர்.
“தெருவோர நாடகம் நடத்தி முடித்தபிறகு அவர்கள் ஒரு மிஷனரி பள்ளிக்குச் சென்றனர். அப்போது பள்ளிக்கு சென்ற ஆயுதம் ஏந்திய சிலர், குழுவில் இருந்த ஐந்து பெண்களை கடத்தி, காட்டுக்கு கொண்டு சென்று வன்புணர்வு செய்தனர்” என மூத்த காவற்துறை அதிகாரி ஏ.வி.ஹொம்கர், தெரிவித்துள்ளார். “இந்த வழக்கில் பலரையும் விசாரிக்க மூன்று காவற்துறைக் குழுக்களை அமைத்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
பாதிக்கப்பட்ட ஐந்து பெண்களும் தற்போது காவற்துறை பாதுகாப்பில் உள்ளதாக மற்றொரு காவற்துறை அதிகாரி கூறினார். அவர்களுக்கு மருத்துவப் பரிசோதனைகள் செய்யப்பட்டன, அதன் முடிவுகள் இன்னும் வரவில்லை எனவும், இப்பகுதியில் “வெளியாட்கள்” நுழைவதற்கு கடும் எதிர்ப்பு தெரிவுக்கும் ஒரு குழுவின் ஆதரவாளர்கள் இந்த பாலியல் தாக்குதலை நடத்தியிருக்கலாம் என அதிகாரிகள் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
மாவட்டத்தின் பழங்குடி மக்களிடையே செல்வாக்கையும் ஆதரவையும் கொண்டிருக்கும் அந்தக் குழு, வெளியிடங்களை சேர்ந்தவர்கள் இப்பகுதிக்குள் நுழைவதற்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் அறிவிப்புப் பலகைகளையும் வைத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
2016 ஆம் ஆண்டு இந்தியாவில் சுமார் 40,000 வன்புணர்வு வழக்குகள் பதிவாகியுள்ளன. வன்புணர்வு மற்றும் பாலியல் தாக்குதலுக்கு உள்ளானதாக வெளியில் கூறுவது அவமானமானம் என்றும் களங்கம் என்றும் நம்பப்படுவதால், பல வன்புணர்வு சம்பவங்களில் வழக்குப் பதிவு செய்யப்படுவதில்லை.
2012ஆம் ஆண்டு டெல்லியில் பேருந்தில் பயணித்த மாணவி வன்புணர்வு செய்யப்பட்டு உயிரிழந்ததற்கு பின்னர், இந்தியாவில் பாலியல் வன்முறை தொடர்பான மீளாய்வுகள் அதிகரித்துள்ளன. தற்போதைய சம்பவம் இந்தியாவில் தொடரும் பாலியல் வன்முறைகளின் சமீபத்திய சம்பவம் என்று சொல்லலாம். காஷ்மீரில் ஏப்ரல் மாதத்தில் சிறுமி ஒருவர் கூட்டு வன்புணர்வு செய்யப்பட்ட சம்பவம் சர்வதேச அளவில் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அதேபோல், ஜார்க்கண்ட் மாநிலத்தில் மே மாதத்தில் நடைபெற்ற வெவ்வேறு சம்பவங்களில் மூன்று இளம் பெண்கள் பாலியல் வன்முறைக்கு ஆளாக்கப்பட்டு, தீ வைக்கப்பட்டனர்.
படத்தின் காப்புரிமைGETTY IMAGES
நன்றி – பிபிசி