Home இலங்கை திலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்…

திலீபனின் நினைவுத்தூபி அமைப்பு – இராணுவப் புலனாய்வாளர்களின் அச்சுறுத்தலுக்கு யாழ் மாநகரசபை கண்டனம்…

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

தியாக தீபம் திலீபனின் நினைவு தூபியினை சுற்றி பாதுகாப்பு வேலிகளை அமைக்கும் பணியில் ஈடுபட்டு இருந்த யாழ்.மாநகர சபை ஊழியர்களை இராணுவ புலனாய்வாளர்கள் அச்சுறுத்தியமை கண்டித்து யாழ்.மாநகர சபையில் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.
யாழ்.மாநகர சபையின் மாதாந்த கூட்டம் இன்று காலை முதல்வர் இமானுவேல் ஆர்னோல்ட் தலைமையில் நடைபெற்றது. அதன் போது , யாழ்.மாநகர சபை ஊழியர்களை அச்சுறுத்தியமைக்கு மாநகர சபை உறுப்பினர்கள் தமது கடும் கண்டனங்களை தெரிவித்தனர்.

கடந்த 14ஆம் திகதி மாநகர சபை பணியாளர்கள் வேலி அமைக்கும் பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த வேளை அவ்விடத்திற்கு சிவில் உடையில் வந்தவர்கள் தம்மை இராணுவ புலனாய்வாளர்கள் என அறிமுகப்படுத்திக்கொண்டு, பணியாளர்களை ‘வெளியில் சந்தோஷமா வாழ ஆசையில்லையா? ‘ , ‘பருப்பும் சோறும் சாப்பிட ஆசையா? ‘ என பணியாளர்களை கேட்டு அச்சுறுத்தியிருந்தனர்.

அதனால் அச்சமடைந்த பணியாளர்கள், வேலி அடைக்கும் வேலையை கைவிட்டு அலுவலகம் திரும்பியவுடன், தாம் அந்த பணியில் ஈடுபடமாட்டோம் என தெரிவித்தனர். அதனால் , வேலி அடைக்கும் மிகுதி பணிகளை வெளியில் இருந்து தற்காலிக வேலைக்கு பணியாளர்களை அமர்த்தி யாழ்.மாநகரசபை பூரணப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அதேவேளை அன்றைய தினம் ஊழியர்கள் அச்சுறுத்தப்பட்ட சம்பவத்தை கேள்வியுற்று அவ்விடத்திற்கு தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் யாழ்.மாநகர சபை உறுப்பினர் வ.பார்த்தீபன் சம்பவ இடத்திற்கு சென்று, நிலைமைகள் ஆராய்ந்து இருந்தார்.

குறித்த சம்பவத்தை கேள்வியுற்றவுடன் ஏன் தமக்கு அறிவிக்கவில்லை எனவும் , அறிவித்து இருந்தால் தாமும் சம்பவ இடத்திற்கு வந்து ஒத்துழைப்பினை வழங்கி இருப்போம் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மாநகர சபை உறுப்பினர்கள் கடிந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More