Home இந்தியா நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை – ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கும் தமிழகம்!

நளினி உள்ளிட்ட ஏழு பேரையும் விடுவிக்க தமிழக அமைச்சரவை பரிந்துரை – ஆளுநரின் முடிவுக்கு காத்திருக்கும் தமிழகம்!

by admin

இந்திய முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையிருக்கும் பேரறிவாளன், நளினி உள்ளிட்ட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டுள்ளது.இன்று மாலை சுமார் 4 மணியளவில் தமிழக தலைமைச் செயலகத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் கூடிய அமைச்சரவை கூட்டத்தில் துணை முதல்வர் பன்னீர் செல்வம் உள்ளிட்ட அமைச்சர்கள் கலந்து கொண்டனர்.

இரண்டு மணி நேரத்துக்கும் மேலாக நடந்த இந்த அமைச்சரவை கூட்டத்தில், பேரறிவாளன், நளினி உட்பட 7 பேரையும் விடுதலை செய்ய பரிந்துரைக்கும் தீர்மானம் தமிழக அரசு சார்பில் நிறைவேற்றப்பட்டது. இதனையடுத்து, இப் பரிந்துரை தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்திடம் ஒப்படைக்கப்படவுள்ளது.

பேரறிவாளன், நளினி உள்ளிட்ட ஏழு பேர் கடந்த 27 ஆண்டுகளாக சிறையில் உள்ளனர். இவர்களை விடுதலை செய்ய முன்னாள் முதல்வர் ஜெயலலிதா முயற்சித்தபோதும் அதற்கான வாய்ப்புக்கள் இல்லாமல் போனது. இந்த நிலையில் இந்த ஏழு பேரையும் விடுதலை செய்ய எவ்வித ஆட்சேபனையும் இல்லை என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியும், சோனியா காந்தியும் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர்.

இதையடுத்து, உச்சநீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கில், இவர்கள் 7 பேரையும் விடுதலை செய்வது குறித்து சட்டப்பிரிவு 161இன் கீழ் தமிழக அரசே முடிவு செய்யட்டும் என உச்சநீதிமன்றம் அறிவித்தது.எதிர்க்கட்சிகளும், பல்வேறு அமைப்புகளும் அவர்களை விடுதலை செய்ய தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தன.

இந் நிலையில், ஏழு தமிழர்கள் விடுதலை தொடர்பில் தமிழக ஆளுநரின் முடிவை எதிர்பார்த்து ஒட்டுமொத்த தமிழகமும் உலகத் தமிழர்களும் காத்திருக்கின்றனர்.

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More