Home இலங்கை சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..  

சரத் பொன்சேகா நெடுந்தீவு குதிரைகளில் அக்கறை செலுத்த வேண்டும்..  

by admin

யாழ்ப்பாணம் நெடுந்தீவு பகுதியில் உள்ள குதிரைகளைப் பராமரிக்க மற்றும் பாதுகாக்க வேண்டிய பொறுப்பில் எவரும் அக்கறையின்றி உள்ளதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர். நெடுந்தீவில் வரட்சி காரணமாக குதிரைகள் பல உயிரிழக்கும் நிலை தற்போது ஏற்பட்டுள்ளமையும் உரிய பராமரிப்பு இன்மையினால் ஆகும் என குற்றம் சுமத்துகின்றனர்.

இப் பகுதியில் குதிரைகள் இறப்பதனைத் தடுப்பதற்கான நடவடிக்கைகளை அவற்றை பராமரிப்பதற்கான செயற்பாடுகள் எவையும் உருப்படியாக எவரும் மேற்கொள்ளப்படவில்லை.எனவே வனஜீவராசிகள் திணைக்களமாவது இதில் கவனம் எடுக்க வேண்டும் என மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

குறித்த நெடுந்தீவுக் குதிரைகள் போத்துக்கேயரது ஆட்சிக் காலத்தில் அவர்களால் எடுத்துவரப்பட்ட குதிரைகளின் வழித்தோன்றல்களாக காணப்படுவதுடன் மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழ்கின்றமையினால் இக்குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகமாக உயிரியலாளர்களால் அடையாளப்படுத்தப்பட்டுள்ளன. இக்குதிரைகள் சுற்றுலாச் சிறப்பு மிக்க நெடுந்தீவில் சுற்றுலாப் பயணிகளைக் கவருகின்ற உயிரியற் சொத்தாகவும் உள்ளது. மேலும் அங்கு காணப்படும் குதிரைகளை அப்பகுதி மக்கள் சவாரி செய்வதற்கும் மாடுகள் கலைப்பதற்கும் பயன்படுத்தி வருவதும் குறிப்பிடத்தக்கது.

மேற்குறித்த குதிரை இனங்களை பாதுகாக்க முன்னாள் வடக்கு மாகாண விவசாய அமைச்சர் பொன்னுத்துரை ஐங்கரநேசன் தலைமையிலான ஒரு குழுவை வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி விக்னேஸ்வரன் நியமித்திருந்தார். இக்குழுவில் வடக்கு மாகாண சபை உறுப்பினர்களான விந்தன் கனகரத்தினம் வை.தவநாதன் பிராந்திய உள்ளூராட்சி உதவி ஆணையாளர் நெடுந்தீவு பிரதேச செயலர் ஆகியோர் உள்ளடங்குகின்றனர்.

இவர்களும் ஏலவே குதிரைகள் குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு அறிக்கைகளை சமர்ப்பித்திருந்த நிலையில் எந்த வேலைத்திட்டமும் ஒழுங்காக மேற்கொள்ளப்படவில்லை.

இக்குதிரைகள் பாதுகாக்கப்பட்ட மரபுரிமைச் சொத்தாக தேசிய மரபுரிமைத் திணைக்களத்தால் பிரகடனப்படுத்தப்பட்டுள்ள போதிலும் இக்குதிரைகளை வேறிடங்களுக்கு கொண்டு செல்வதுசட்டவிரோதமாகும். ஆனால் ஒரு சிலரினால் இவை கடல் மார்க்கமாக கடத்திச் செல்லப்படுவதாக மக்கள் குறிப்பிடுகின்றனர். இதே போன்று  நெடுந்தீவுக்கே உரித்தான இவ்வாறான குதிரைகள் இவ்வாறு தொடர்ச்சியாக வேறுபகுதிகளுக்கும் கடத்தபட்டிருக்கலாம் எனவும் சந்தேகம் வெளியிடப்படுகிறது.

உல்லாசப் பயணிகளுக்கான கேந்திர நிலையமாக நெடுந்தீவை மாற்றுவதற்கான நடவடிக்கைகளைதொல்பொருள் திணைக்களத்தினரும் வன ஜீவராசிகள் திணைக்களத்தினரும் மேற்கொண்டு வருகின்றனர்.ஆனால் இக்குதிரைகளின் நலன்களில் எவ்வித அக்கறையும் செலுத்தியதாக தெரியவில்லை. தற்போது நிலவுகின்ற வரட்சி காரணமாக அங்குள்ள நீர்நிலைகள் வறண்டு போய் இருக்கின்றன.குதிரைகளுக்கு குடிப்பதற்கு நீர் இல்லாமலும் மேய்ச்சலுக்கென போதிய புல் இல்லாமலும் குதிரைகள் இறப்பதற்கு சாத்தியக்கூறுகள் உள்ளதாக விசனம் தெரிவிக்கப்படுகிறது.

மிக நீண்டகாலமாக நெடுந்தீவில் வாழுகின்ற குதிரைகள் இப்பிராந்தியத்துக்குரிய தனித்துவமான ஒரு ரகத்தைச் சேர்ந்தது என அடையாளப் படுத்தப்பட்டுள்ளது. சுமார் 50 சதுர கிலோ மீற்றர் பரப்பளவைக் கொண்ட சுற்றுலா சிறப்பு மிக்க நெடுந்தீவில் 400க்கும் மேற்பட்ட குதிரைகள் இருப்பதாகக் கணிப்பிடப்பட்டிருக்கின்றது.

 

செய்தி – படங்கள் – பாறுக் ஷிஹான்..

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More