Home இலங்கை கோணாவில் பாடசாலை மாணவனுக்கு காவல்துறை பாதுகாப்பு :

கோணாவில் பாடசாலை மாணவனுக்கு காவல்துறை பாதுகாப்பு :

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

கோணாவில் பாடசாலை மாணவனின் பாதுகாப்பு கருதி குறித்த பாடசாலை ஆரம்பிக்கும் போதும் நிறைவுறும் போதும் குறித்த பகுதிகளில் காவல்துறை சுற்றுக்காவல் மேற்கொள்ளப்படும் என கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ன தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதியின் பணிக்கமைய பாடசாலைகளில் கடைப்பிடிக்கப்பட்ட தேசிய போதைப் பொருள் ஒழிப்பு வாரத்தின் போது கஞ்சா விற்பனைபற்றி காவல்துறையினருக்கு தகவல் வழங்கிய மாணவன் அச்சுறுத்தப்பட்ட பின்னர் தாக்கப்பட்ட பல்வேறு மட்டங்களில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியிருந்தது.

இந்த நிலையில் இன்றைய தினம்(06) வடக்கு மாகாண சபையின் முன்னாள் எதிர்க் கட்சித் தலைவர் சி. தவராசாவின் ஏற்பாட்டில் குறித்த மாணவனின் தந்தை வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து தனது மகனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாடியிருந்தார்.

இதனையடுத்த வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்னவை தொடர்புகொண்டு கலந்துரையாடியதோடு, மாணவனின் தந்தையை பிரதி காவல்துறை மா அதிபரை சந்திப்பதற்கு அனுப்பியிருந்தார்.

இதனையடுத்து மாணவனின் தந்தையுடன் உரிய காவல்துறை அதிகாரிகளை அழைத்து கலந்துரையாடி கிளிநொச்சி முல்லைத்தீவு மாவட்டங்களின் பிரதி காவல்துறை மா அதிபர் மகிந்த குணரட்ன தமக்கு கிடைத்த இரண்டு முறைப்பாடுகளில் ஒன்றுக்கு மூன்று பெண்களை கைது செய்யது சட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும், மாணவன் தாக்கப்பட்ட முறைப்பாடு தொடர்பில் தொடர் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்

மேலும் பாடசாலை அதிபருடன் மாணவனின் பாதுகாப்பு தொடர்பில் கலந்துரையாட இருப்பதாகவும், சில வாரங்களுக்கு கோணாவில் பாடசாலை ஆரம்பிக்கும் போதும் முடிவுறும் போதும் காவல்துறை சுற்றுக்காவல் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தோடு, மாணவனின் பெற்றொர் எவ்வேளையும் தங்களோடு தொடர்பு கொள்வற்குரிய ஏற்பாடுகளும் செய்துகொடுக்கப்பட்டுள்ளது எனவும் தெரிவித்தார்.

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More