183
இந்தியாவின் ஜம்மு கஷ்மீர் மாநிலத்தில் தீவிரவாதிகளினால் நடாத்தப்பட்ட குண்டுத்தாக்குதலில் 40 சிஆர்பிஎப் இராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளனர். இவர்களின் குழந்தைகளின் கல்விச்செலவை ஏற்பதாக இந்திய அணியின் முன்னாள் வீரர் வீரேந்திர சேவாக் தெரிவித்துள்ளார்.
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள, புல்வாமா மாவட்டம், அவந்திபோரா வீதியில், நேற்று முன்தினம், துணை ராணுவப்படையினர் சென்ற பேருந்து தீவிரவாதிகளின் தற்கொலைப்படைத் தாக்குதல் நடத்தப்பட்டதில் 40 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
பாகிஸ்தான் தீவிரவாத அமைப்பொன்றின் இச் செயற்பாட்டுக்கு இந்தியாவிலிருந்து கடும் கண்டனம் எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர்கள் விராட்கோலி, கவுதம் கம்பிர், வீரேந்திர சேவாக், முகமது கைப், ஷிகர் தவண் ஆகியோர் கண்டனம் தெரிவித்திருந்தனர். கொல்லப்பட்ட வீரர்களுக்கு மாநில அரசுகள் நிவாரணங்களை அறிவித்து வருகின்றன.
இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் வீரேந்திர சேவாக், அனைவரையும் நெகிழச் செய்யும் விதமாக, கொல்லப்பட்ட 40 வீரர்களின் குழந்தைகளின் கல்விச் செலவையும் ஏற்பதாக டுவிட்டரில் அறிவித்துள்ளார். அதோடு, வீர மரணம் அடைந்த வீரர்களின் புகைப்படங்கள், அவர்களின் பெயர் பட்டியலையும் அவர் வெளியிட்டுள்ளார்.
சேவாக் டுவிட்டரில் கூறியிருப்பது,
வீரமரணம் அடைந்த இந்த வீரர்களுக்கு நாம் எது செய்தாலும் அது போதுமானதாக இருக்காது. ஆனால், என்னால் முடிந்தவரைக் குறைந்தபட்சமாக வீரமரணம் அடைந்த சிஆர்பிஎப் வீரர்களின் குழந்தைகளின் முழுமையான கல்விச் செலவு அனைத்தையும் நான் பார்த்துக்கொள்கிறேன். என்னுடைய சேவாக் சர்வதேச பள்ளியில் படிக்க வைக்கிறேன் ” எனத் தெரிவித்துள்ளார். சேவாக்கின் இந்த நடவடிக்கையை பலரும் பாராட்டி வருகின்றனர்.

Spread the love