Home இலங்கை நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – இருவர் பலி – 59 பேர் படுகாயம்

நுவரெலியாவில் பேருந்து பள்ளத்தில் வீழ்ந்து விபத்து – இருவர் பலி – 59 பேர் படுகாயம்

by admin


வலப்பனை – நுவரெலியா பிரதான வீதியில் மாஹாஊவாபத்தன, பகுதியில் நேற்று (24.03.2019 ) இரவு 7 மணியளவில் தனியார் பேருந்து ஒன்று பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், 59 பேர் படுங்காயமடைந்துள்ளனர்.

நுவரெலியாவிலிருந்து நுவரெலியா வலப்பனை வழியாக அம்பாறை நோக்கி பயணித்த தனியார் சுற்றுலா பேருந்து வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளானது.

அம்பாறை பகுதியிலிருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றிக் கொண்டு நுவரெலியாவிற்கு சென்று, மீண்டும் அம்பாறை செல்லும் போது மாஹாஊவாபத்தன எனும் இடத்தில் பாரிய வளைவு பகுதியில் பாதையை விட்டு விலகி சுமார் 100 அடி பள்ளத்தில் பாய்ந்து விபத்துக்குள்ளானது. இதன்போது, பேருந்தில் பயணித்த 61 பேர் காயமடைந்த நிலையில் காயமடைந்தவர்களை உடனடியாக வலப்பனை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டு, அங்கிருந்து அனைவரும் மேலதிக சிகிச்சைக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டனர்.
இதன்போது வலப்பனை வைத்தியசாலையில் வைத்து 28 வயது மதிக்கதக்க அம்பாறை பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இதேவேளை, நுவரெலியா வைத்தியசாலையில் வைத்து கர்ப்பணி தாய் ஒருவர் உயிரிழந்துள்ளார். மேலும் கவலைக்கிடமாக இருந்த சிலரை கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக வைத்தியசாலை வட்டாரங்கள் தெரிவித்தன.

பேருந்தில் ஏற்பட்ட இயந்திர கோளாறு காரணமாக குறித்த பாரிய வளைவு பகுதியில் பேருந்தினை செலுத்த முடியாததன் காரணமாகவே, இந்த விபத்து நேர்ந்ததாக நேரடி விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது.

இவ்விபத்தில் காயமடைந்தவர்களில் சிறுவர்களும் அடங்குவதோடு, சிலர் நுவரெலியா ஆதார வைத்தியசாலையிலும், சிலர் கண்டி வைத்தியசாலையிலும் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். உயிரிழந்தவர்களின் சடலங்கள் நுவரெலியா மற்றும் வலப்பனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக தெரிவித்த வலப்பனை காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
(க.கிஷாந்தன்)

 

Spread the love

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More