Home இலங்கை யாழில் வழிப்பறி கொள்ளைகள் – விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

யாழில் வழிப்பறி கொள்ளைகள் – விழிப்புடன் இருக்குமாறு எச்சரிக்கை

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

நாட்டில் உள்ள அசாதான சூழ்நிலையை சாதமாக்கி யாழில் வழிப்பறி கொள்ளைகள் நடைபெற்று வருவதாகவும் , பொதுமக்களை விழிப்புடன் இருக்குமாறும் யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

யாழ்.நல்லூர் பகுதியில் வீதியில் நின்ற இளைஞர்களிடம் மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை காவல்துறையினர் என அறிமுகம் செய்து , அவர்களிடமிருந்த விலைமதிப்பு மிக்க அலைபேசிகளை சோதனையிட வேண்டும் என கூறி அவற்றை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர். அது தொடர்பில் இளைஞர்களால் யாழ். காவல் நிலையத்தில் முறைப்பாடு செய்யபட்டு உள்ளது.

அதே போன்று நேற்று முன்தினம் திருநெல்வேலியை அண்டிய பகுதியில் வீதியால் சென்று கொண்டிருந்த முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று தம்மை காவல்துறையினர் ; என அறிமுகப்படுத்திக்கொண்டு வழிமறித்து அவரது அலைபேசி மற்றும் பணத்தினை கொள்ளையிட்டு தப்பி சென்றுள்ளனர். அது தொடர்பிலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

தாவடி உப்புமட பகுதியில் நேற்றைய தினம் வீதியில் சென்ற முதியவரை மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் வழிமறித்து தம்மை காவல்துறையினர் என அறிமுகம் செய்து கொண்டு , அடையாள அட்டையை காண்பிக்குமாறு கோரியுள்ளனர்.

அதன் போது குறித்த முதியவர் அடையாள அட்டையை காண்பிப்பதற்காக தனது பேர்ஸ எடுத்த போது அதனை அவர்கள் பறிமுதல் செய்து கொண்டு தப்பி சென்றுள்ளனர்.

குறித்த சம்பவங்கள் தொடர்பில் காவல்துறையினரிடம் கேட்ட போது ,

இவ்வாறான வழிப்பறி சம்பவங்கள் அதிகரித்து உள்ளது, இதுவரை இரண்டு முறைப்பாடுகள் தமக்கு கிடைக்க பெற்று உள்ளது. பல சம்பவங்கள் நடைபெற்று உள்ளதாக அறியமுடிகிறது. ஆனால் அவை தொடர்பில் முறைப்பாடுகள் கிடைக்க பெறவில்லை.

கிடைக்க பெற்ற முறைப்பாடுகளின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது , மோட்டார் சைக்கிள் இலக்கம் ஒன்றினை அடையாளம் கண்டு கொண்டோம். அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த போது குறித்த இலக்கம் தென்பகுதியை சேர்ந்தவரின் பெயரில் காணப்படுகின்றது. அதன் அடிப்படையில் பார்க்கும் போது அவை போலியான இலக்க தகடாக இருக்கலாம் என நம்புகின்றோம்.

குறித்த சம்பவங்கள் தொடர்பிலான விசாரணைகளை துரித கெதியில் முன்னெடுத்து வருகின்றோம். குற்றவாளிகளை மிக விரைவில் கைது செய்வோம் என தெரிவித்தனர்.

  #jaffna #robbery #police

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More