Home இலங்கை யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

யாழ் பல்கலைக்கழக மாணவர்களை விடுவிக்கக் கோரி போராட்டம்

by admin

குளோபல் தமிழ்ச் செய்தியாளர்

பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளர் மற்றும் மருத்துவ பீட சிற்றுண்டிச் சாலை நடத்துனர் ஆகிய மூவரையும் விடுவிக்கக் கோரி மாணவர்கள் இன்றைய தினம் புதன்கிழமை கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாக முன்றலில் இந்தக் கவனயீர்ப்புப் போராட்டம் காலை 9 மணிக்கு இடம்பெற்றது.

மாணவர்கள் உள்ளிட்ட மூவருக்கும் இடையிலான வழக்கு நாளையதினம் வியாழக்கிழமை யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றில் இடம்பெறவுள்ள நிலையில் சட்ட மா அதிபர் மூவரின் விடுதலை தொடர்பில் உரிய அறிவுறுத்தலை வழங்கவேண்டும் என்று இந்தப் போராட்டத்தில் மாணவர்கள் வலியுறுத்தினர்.

யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வளாகத்தில் கடந்த 3ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது, தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் தலைவரின் ஒளிப்படம் மற்றும் இனப்படுகொலை தொடர்பான பதாதைகள் என்பன மாணவர் ஒன்றியத்தின் அலுவலக அறையில் மீட்கப்பட்டன. அத்துடன் மருத்துவ பீட சிற்றுண்டி சாலையில் திலீபனின் படம் ஒட்டப்பட்டு இருந்துள்ளது.

அதனையடுத்து மாணவர் ஒன்றியத்தின் தலைவர் மற்றும் செயலாளர் இராணுவத்தினரால் கைது செய்யப்பட்டனர். அத்துடன் சிற்றுண்டி சாலை நடத்துனரும் கைது செய்யப்பட்டார்.

மாணவர் ஒன்றியத்தின் தலைவர், செயலாளரையும் சிற்றுண்டி சாலை நடத்துனரையும் வரும் 16ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

#யாழ் பல்கலைக்கழக  #மாணவர்களை  #போராட்டம் #protest #jaffnauniversity #students

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More