Home இலங்கை மன்னார் மனித புதை குழி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

மன்னார் மனித புதை குழி தொடர்பாக விசேட கலந்துரையாடல்

by admin

மன்னார் மனித புதைகுழி தொடர்பாக நேற்று வியாழக்கிழமை (14)மன்னார் காவல்துறையினர் நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளனர்.

நேற்று இடம் பெற்ற குறித்த வழக்கு விசாரணைகளின் போது தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் மன்னார் மனித புதை குழி தொடர்பான வழக்கு விசாரனை இம்மாதம் 27 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

மன்னார் பிரதான பாலத்திற்கு அருகில் ‘சதொசா’ வளாகத்தில் இடம் பெற்ற கட்டுமான பணியின் ஆரம்ப அகழ்வு பணிகளின் போது அகழப்பட்ட மண்ணில் இருந்து சந்தேகத்திற்கு இடமான மனித எச்சங்கள் மீட்கப்பட்டதை தொடர்ந்து குறித்த ‘சதொசா’ வளகத்தில் பணிகள் இடை நிறுத்தப்பட்டு கடந்த ஒரு வருடத்திற்கு மேலாக எலும்புக்கூட்டு அகழ்வு பணிகள் இடம் பெற்றது.

குறித்த அகழ்வு பணிகளின் போது சுமார் 318க்கும் மேற்பட்ட மனித எலும்புக்கூடுகள் மீட்கப்பட்ட நிலையில் குறித்த மனித எலும்புக்கூடுகள் எந்த காலப் பகுதிக்கு உரியவை என கண்டறிவதற்காக மனித எலும்புக்கூடுகளின் மாதிரிகள் அமெரிக்காவில் உள்ள புளோரிடா ஆய்வு கூடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்ட நிலையில் ஆய்வு முடிவு அறிக்கையின் அடிப்படையில் குறித்த எலும்புகள் 500 வருடங்களுக்கு மோற்பட்டவை என குறிப்பிடப்பட்டதை தொடர்ந்து இவ் முடிவுகள் சம்மந்தமாக பலரும் சந்தேகம் வெளியிட்டிருந்தனர்.

இந்த நிலையில் மன்னார் நீதவான் நீதி மன்றத்தில் கடந்த 22.03.2019 இடம் பெற்ற உயர் மட்ட கலந்துரையாடலில் குறித்த புதைகுழி அகழ்வு பணிகளை தற்காலிகமாக இடை நிறுத்துவதுடன் குறித்த மனித புதைகுழி பகுதியில் காணப்படும் மண் படைகள் மற்றும் ஏனைய சாதக பாதக தன்மைகள் தடைய பொருட்கள் தொடர்பாக ஆய்வு செய்து அறிக்கை ஒன்றினை வழங்குமாறு களனி பல்கலைகழக பேராசிரியர் ராஜ் சோமதேவவிடம் கோரப்பட்டிருந்தது.

இந்த நிலையில் நேற்று வியாழக்கிழமை மன்னார் காவல்துறையியனர் குறித்த புதை குழி தொடர்பாக நகர்தல் பத்திரம் ஒன்றை மன்னார் நீதிமன்றத்தில் தாக்கல் செய்தனர்.

இதன் மூலம் மன்னார் மனித புதை குழியானது 500 வருடங்களுக்கு மேற்பட்டதாக காணப்படுவதாக அறிக்கை கிடைக்கப் பெற்றமையினால் அகழ்வு பணிகள் தொடர்பாக இலங்கை தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கருத்துக்கள் முன்வைக்கப்பட்டது.

மேலும் குறித்தத வழக்கு விசாரணைகளின் போது காணமல் ஆக்கப்பட்டவர்கள் அலுவலகம் சார்பாக சட்டத்தரணி புராதணி யும் காணாமல் ஆக்கப்பட்ட உறவினர்கள் சார்பாக சட்டதரணி டினேசணும் முன்னிலையாகி இருந்தனர்.

இந் நிலையில் தொல்லியல் திணைக்களத்தை உள்ளீர்ப்பது தொடர்பாக கவனம் செலுத்தப்பட்டதுடன் மன்னார் மனித புதைகுழி தொடர்பான எதிர் கால நடவடிக்கைகள் சம்மந்தமாக தீர்மானங்கள் மேற்கொள்வதற்காக இம்மாதம் 27 திகதி விசேட கூட்டம் ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் குறித்த வழக்கை விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்ட தினத்திற்கு திகதியிட்டு குறித்த வழக்கானது ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. குறித்த விசேட கூட்டத்திற்கு விசேடமாக தொல்லியல் திணைக்களமும் அழைக்கப்படவுள்ளமை குறிப்பிடதக்கது.

#மன்னார்  #மனித புதை குழி  #விசேட கலந்துரையாடல் #தொல்லியல் திணைக்களம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More