Home இலங்கை கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை – முதலாவது சந்தேகநபர் விடுதலை.

கோண்டாவில் இரும்பக உரிமையாளர் கொலை – முதலாவது சந்தேகநபர் விடுதலை.

by admin
மயூரப்பிரியன்
கோண்டாவில் உப்புமடச் சந்தி இரும்பக  உரிமையாளரைத் தாக்கி கொலை செய்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டு  48 மணிநேரம் காவல்துறை   தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட இளைஞன் வழக்கிலிருந்து விடுக்கப்பட்டார்.
அவருக்கு எதிராக கொக்குவில் ரயில் நிலைய அதிபரைத் தாக்கிய குற்றச்சாட்டை முன்வைத்து மற்றொரு வழக்கை யாழ்ப்பாணம் காவல்துறையினர்  தாக்கல் செய்தனர்.
அத்துடன், இரும்பக உரிமையாளரது கொலைக் குற்றச்சாட்டில் மற்றொரு இளைஞன் கைது செய்யப்பட்டார். அவரை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கோண்டாவில் உப்புமடச் சந்தியில் அமைந்துள்ள லக்சுமி இரும்பகத்தின் உரிமையாளர் கந்தையா கேதீஸ்வரன் (வயது -47) என்பவர் வன்முறைக் கும்பலின் தாக்குதலில் உயிரிழந்தார்.
இந்தச் சம்பவம் செம்ரெம்பர் 6ஆம் திகதி மாலை 4 மணியளவில் இடம்பெற்றது.
அன்றுமாலை இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று இரும்பகத்துக்குள் புகுந்து அதன் உரிமையாளரை கண்மூடித்தனமாகத் தாக்கியதுடன், இரும்பகத்துக்குள் அட்டூழியத்தில் ஈடுபட்டுவிட்டுத் தப்பித்தது.
இரும்பகத்தில் இருந்த கட்டை ஒன்றை எடுத்து உரிமையாளரின் தலையில் கும்பல் தாக்கியிருந்தது. அதனால் தலையில் படுகாயமடைந்த அவர், யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் 24 நாள்களின் சிகிச்சையின் பின்னர் அவர் கடந்த  30ஆம் திகதி இரவு  உயிரிழந்தார்.
இந்தத் தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்களின் ஒளிப்படங்கள் மற்றும் சிசிரிவி காணொளிகள் காவல்துறையினரினால் வெளியிடப்பட்டிருந்த நிலையில், தாக்குதலை மேற்கொண்ட இருவரும் தலைமறைவாகியிருந்தனர்.
காவல்துறையினரின் தீவிர தேடுதல் நடவடிக்கையின் போது, தலைமறைவாகியிருந்த இருவரில் ஒருவர் கிளிநொச்சியில் வைத்து கடந்த செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டார். கொக்குவிலைச் சேர்ந்த இளைஞரே இவ்வாறு கோப்பாய் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார்.
சந்தேகநபர் விசாரணைகளின் பின்னர் நேற்றுமுன்தினம் பிற்பகல் யாழ்ப்பாணம் நீதிமன்ற நீதிவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில்  முற்படுத்தப்பட்டார்.
இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சிலர் கைது செய்யப்படவேண்டும். இந்தக் கொலையின் பின்னணி தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்படுவதால் சந்தேகநபர் காவல்துறை  தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதிக்கவேண்டும் என்று காவல்துறையினர் விண்ணப்பம் செய்தனர்.
காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த நீதிவான் ஏ.பீற்றர் போல், கொலைச் சம்பவம் தொடர்பில் விசாரணைகளைத் துரிதப்படுத்த காவல்துறையினரை அறிவுறுத்தியதுடன், சந்தேகநபரை  48 மணித்தியாலங்கள் தடுப்புக் காவலில் வைத்து விசாரிக்க அனுமதியளித்து உத்தரவிட்டார்.
வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை வரை ஒத்திவைக்கப்பட்டது. இந்த வழக்கு யாழ்ப்பாணம் நீதிமன்ற மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன் முன்னிலையில் இன்று வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது.
தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்துவைக்கப்பட்ட இளைஞனையும் மற்றொரு இளைஞனையும்  காவல்துறையினர் மன்றில் முற்படுத்தினர்.
பாதிக்கப்பட்டோர் நலன் சார்பில் சட்டத்தரணி சிவலிங்கம் ரிஷிகேசன் முன்னிலையானார்.
“முதலாவதாக பெயர் குறிப்பிடப்பட்டு தடுப்புக்காவல் உத்தரவு பெற்று விசாரணைக்கு உள்படுத்தப்பட்ட சந்தேகநபரை இந்தக் கொலைச் சம்பவத்தில் தொடர்புபட்டுள்ளார் என்பதற்கு போதிய சாட்சியங்கள் – சான்றுகள் இல்லை.
ஆனால் இவர் கொக்குவில் ரயில் நிலைய அதிபரைத் தாக்கிய சம்பவத்துடன் தொடர்புடையவர் என்பது யாழ்ப்பாணம் தலைமையகப் காவல்துறையினரின் விசாரணைகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே இந்தக் கொலை வழக்கிலிருந்து முதலாவது சந்தேகநபரை விடுவிக்கவேண்டும்.
அத்துடன்,  ஒருவர் இந்தக் கொலைச் சம்பவத்துடன் தொடர்புடையவர் என இரண்டவதாக சந்தேகநபர் ஒருவர் யாழ்ப்பாணம் பெரும் குற்றத்தடுப்பு காவல்து பிரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.
அவரிடம் விசாரணைகளைத் தொடர ஏதுவாக சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடவேண்டும்” என்று கோப்பாய் காவல்துறையினர்  விண்ணப்பம் செய்தனர்.
காவல்துறையினரின் விண்ணப்பத்தை ஆராய்ந்த யாழ்ப்பாணம் மேலதிக நீதிவான் காயத்திரி சைலவன், முதலாவது சந்தேகநபரை வழக்கிலிருந்து விடுவித்து விடுதலை செய்யததுடன், இரண்டாவது சந்தேகநபரை வரும் 24ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார். #கோண்டாவில் #இரும்பக உரிமையாளர்  #கொலை

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More