Home இலங்கை இலங்கையின் மாறுபட்ட அணுகுமுறை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

இலங்கையின் மாறுபட்ட அணுகுமுறை குறித்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளர் கவலை

by admin

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இணை அனுசரணை வழங்கிய தீர்மானத்திலிருந்து இலங்கை விலகியமை தொடர்பில் கவலையடைவதாக மனித உரிமைகள் ஆணையாளர் மிச்செல் பச்சலெட் இன்று தெரிவித்துள்ளார்.

ஜெனிவாவில் நடைபெறும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 43ஆவது கூட்டத்தொடரின் நான்காம் நாள் அமர்வு இன்று நடைபெற்ற போது இலங்கையின் நிலைப்பாடு குறித்து வெளிவிவகார அமைச்சர் தினேஷ் குணவர்தனவின் உரை தொடர்பில் பதிலளித்த போதே ஆணையாளர் இவ்வாறு பதிலளித்துள்ளார்.

பொறுப்புக்கூறல் மற்றும் மனித உரிமைகள் தொடர்பில் புதிய அரசாங்கம் மேற்கொண்ட மாறுபட்ட அணுகுமுறை குறித்து கவலையடைகின்றேன் எனத் தெரிவித்த அவர் இலங்கை அரசாங்கம் அனைத்து மக்களுக்காகவும் அனைத்து சமூகத்தினது தேவைகளுக்காகவும் செயற்பட வேண்டும்எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும் சிறுபான்மையினர் குறித்து செயற்பட வேண்டும் எனவும் கடந்த சில வருடங்களாக ஏற்பட்டுள்ள அனுகூலமான முன்னேற்றத்தை இல்லாதொழிக்க வேண்டாம் என தான் இலங்கை அரசாங்கத்திடம் வலியுறுத்துவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையின் சுயாதீன நிறுவனங்கள் 19ஆவது அரசியலமைப்புத் திருத்தத்தின் மூலம் பலப்படுத்தப்பட்டமை ஜனநாயகக் கட்டமைப்பின் முக்கிய அம்சமாகும்.

சிறுபான்மையினரான தமிழ், முஸ்லிம் சமூகத்தினருக்கு எதிரான வெறுப்பூட்டும் பேச்சு, பாதுகாப்பு மற்றும் கொள்கை ரீதியிலான நடவடிக்கைகள் அளவுக்கு அதிகமாகவே இடம்பெறுகின்றன.  பொறுப்புக்கூறலின் உள்ளக நடவடிக்கை கடந்த காலத்தில் தோல்வியடைந்துள்ளது. விசாரணைகளுக்காக மற்றுமொரு ஆணைக்குழுவை நியமிப்பதானது பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி மறுக்கப்படுவதே அதன் பெறுபேறாக அமையும். அதன்மீது நம்பிக்கை கொள்ள முடியாது.

இலங்கையின் அனைத்து சமூகத்தினருக்கு எதிராக கடந்த காலங்களைப் போன்று மீண்டும் மனித உரிமை மீறல்கள் இடம்பெறாது என்பதற்கு எவ்வித உத்தரவாதமும் இல்லை என்னும் நிலையில் இந்த நிலைமை குறித்து அவதானத்துடன் செயற்படுமாறு தான் பேரவையிடம் வலியுறுத்துகின்றேன் என மிச்செல் பச்சலெட் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, 30/1 மற்றும் 40/1 பிரேரணைகளிலிருந்து வெளியேறுவதற்கு இலங்கை அரசாங்கம் மேற்கொண்ட தீர்மானம் தொடர்பில் பிரித்தானியா, கனடா ஆகிய நாடுகள் கவலை தெரிவித்துள்ளன என்பதும் குறிப்பிடத்தக்கது  #இலங்கை #அணுகுமுறை  #ஐ.நா #மனிதஉரிமைகள்ஆணையாளர்  #கவலை #ஜெனிவா

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More