Home இலங்கை வட மாகாணத்தை குலுக்கிய கொள்ளையர்கள் கைதாகினர்…

வட மாகாணத்தை குலுக்கிய கொள்ளையர்கள் கைதாகினர்…

by admin

யாழ்ப்பாணம் உள்பட வடக்கு மாகாணம் முழுவதும் வீடுகளுக்குள் புகுந்து கைக்குண்டுகள் மற்றும் வாள்களைக் காட்டி கொள்ளையிடுவது, பெண்களுக்கு பாலியல் துன்புறுத்தல்களை மேற்கொள்வது போன்ற குற்றங்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த நால்வர் உள்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அச்சுவேலிக் காவற்துறையினர்  தெரிவித்தனர்.

“சந்தேகநபர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள், கொள்ளையிடபட்ட நகைகள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டுள்ளன. இந்தக் கும்பலைச் சேர்ந்த மேலும் பலர் வடக்கு மாகாணம் முழுவதிலும் பதுங்கியுள்ளனர்” என்று காவற்துறையினர்  தெரிவித்தனர்.

“அச்சுவேலியில் கொள்ளைக் கும்பல் ஒன்று பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்தது. காங்கேசன்துறை பிராந்திய மூத்த காவற்துறை அத்தியட்சகர் டபிள்யூ.எஸ். சேனாதீரவின் உத்தரவில் சிறப்பு காவற்துறைப் பிரிவு விசாரணைகளை முடுக்கிவிட்டது.

அதனைத் தொடர்ந்து ஒருவர் கைது செய்யப்பட்டார். அவரிடம் நடத்திய தேடுதல் மற்றும் விசாரணையில் கொள்ளைக் கும்பலைச் சேர்ந்த நால்வர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 2 கைக்குண்டுகள், 2 வாள்கள் மற்றும் 2 மோட்டார் சைக்கிள்கள் கைப்பற்றப்பட்டன.

இந்தக் கும்பல் சாவகச்சேரி, சுன்னாகம், அச்சுவேலி, கோப்பாய் மற்றும் மன்னார் காவற்துறைப்  பிரிவுகளில் இரவு வேளைகளில் வீடுகளுக்குள் புகுந்து வாள்களைக் காண்பித்து அச்சுறுத்தி நகைகளைக் கொள்ளையிட்டுள்ளது. மேலும் பெண்கள் உள்ள வீடுகளில் பாலியல் துன்புறுத்தல்களையும் இந்தக் கும்பல் செய்துள்ளது.

கொள்ளையிட்ட 37 லட்சத்து 24 ஆயிரம் ரூபா பெறுமதியான நகைகளை நெல்லியடியிலுள்ள நகைக் கடையில் விற்பனை செய்துள்ளனர். கொள்ளையிட்ட நகை எனத் தெரிந்தும் அவற்றை வாங்கிய நகைக் கடை உரிமையாளரும் கைது செய்யப்பட்டுள்ளார். கொள்ளைக் கும்பலின் முக்கியஸ்தர் ஏழாலையைச் சேர்ந்தவர். ஏனையோர் சிறுப்பிட்டி, சுன்னாகம், அச்சுவேலிப் பகுதிகளைச் சேர்ந்தோர்.

இந்தக் கும்பல் வடக்கு மாகாணம் முழுவதும் இயங்குகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் 3-4 பேர் உள்ளனர். அவர்கள் ஒரு குழுவாக இணைந்து தமது இடங்களில் கொள்ளைகளில் ஈடுபடுவது விசாரணையில் தெரியவந்துள்ளது.

சந்தேகநபர்கள் ஐவரும் மல்லாகம் நீதிவான் முன்னிலையில் இன்று இரவு முற்படுத்தப்படவுள்ளனர். அவர்களை 48 மணிநேரம் தடுப்புக் காவலில் வைத்து விசாரணை நடத்த நீதிமன்றில் விண்ணப்பம் செய்யப்பட்டுள்ளது” என்றும் காவற்துறையினர்  தெரிவித்தனர்.

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More