Home இலங்கை காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான சந்தேகநபர் மருத்துவமனையில்

காவல்துறையினரின் தாக்குதலுக்குள்ளான சந்தேகநபர் மருத்துவமனையில்

by admin

யாழ்ப்பாணம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்ட சந்தேக நபர் ஒருவர் காவல் நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டு கடுமையாகத் தாக்கப்பட்ட நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவால் மீட்கப்பட்டார். அவர் தற்போது யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம், அரியாலை மாம்பழம் சந்தியைச் சேர்ந்த விக்டர் சுந்தர் (வயது – ) என்ற குடும்பத்தலைவரே இவ்வாறு காவல்துறையினரால் சித்திரவதைக்கு உள்படுத்தப்பட்ட நிலையில் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சைக்காகச் சேர்க்கப்பட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில்  கெமி குரூப்பைச் சேர்ந்த இளைஞர் ஒருவர் தாக்கப்பட்டநிலையில் வீதியில் அடிகாயங்களுங்களுடன் கடந்த டிசெம்பர் 4ஆம் திகதி மீட்கப்பட்டார். அந்த வழக்கில்  விக்டர் சுந்தர் காவல்துறையினரால் தேடப்பட்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் இன்றைய தினம் முற்பகல் 11 மணியளவில் சிகை அலங்கரிப்பு நிலையத்திலிருந்த வேளை, யாழ்ப்பாணம் குற்றத் தடுப்பு காவல்துறை பிரிவின் உதவிகாவல்துறையினர் பரிசோதகர் ஹர்ஷா என்பவரால் கைது செய்யப்பட்டு யாழ்பப்ாணம்  காவல்நிலையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளார்.

சந்தேக நபரின் மனைவி வேலைக்குச் சென்று வீடு திரும்பிய போது வீடு பூட்டப்பட்டதை அறிந்து தேடிய நிலையிலேயே கணவர் கைது செய்யப்பட்டு யாழ்ப்பாணம்  காவல்நிலையத்தில் தடுத்துவைக்கப்பட்டமை தெரிய வந்துள்ளது. காவல்நிலையத்துக்கு அவர் சென்ற போதும் கணவரை பார்க்க காவல்துறையினர் அனுமதிக்கவில்லை.

அதனால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் அலுவலகத்தில் சந்தேக நபரின் மனைவி முறைப்பாட்டை வழங்கியுள்ளார். அதுதொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளர் கனகராஜ் துரிமாகச் செயற்பட்டு யாழ்ப்பாணம்  காவல் நிலையத்துக்குள் சென்றுள்ளார்.

அங்கு சந்தேக நபர் கடுமையாகத் தாக்கப்பட்டு மயக்கமுற்ற நிலையில் காணப்பட்டுள்ளார். காவல்நிலையத்திலிருந்து இன்று மாலை 6 மணியளவில் சந்தேக நபர் மீட்கப்பட்டு யாழ்ப்பாணம்  போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார். அவருக்கு தற்போது அவசர சிகிச்சைப் பிரிவில் சேர்ப்பட்டு சிகிக்சை வழங்கப்படுகிறது.

“யாழ்ப்பாணம் கல்வியங்காடு பகுதியில் கெமி குரூப்பின் சகோதரர் தாக்கப்பட்ட சம்பவத்துடன் கணவருக்குத் தொடர்பில்லை. அன்றைய தினம் அவர் வேலைக்குச் சென்றிருந்தார். அத்துடன், சம்பவம் தொடர்பில்  காவல்துறையினர் நீதிமன்றில் தாக்கல் செய்த வழக்கிலும் எனது கணவர் சந்தேக நபராகச் சேர்க்கப்படவில்லை.

என் கண் முன்னேயே கணவரை  காவல்துறையினர் கடுமையாகத் தாக்கினார்கள். எனது வீட்டுத் திறப்பு கணவரின் பொக்கெட்டுக்குள் இருந்த போதும் அதனைத் தர  காவல்துறையினர்  மறுத்தனர்” என்று காவல்துறையினரால் தாக்கப்பட்ட விக்டர் சுந்தரின் மனைவி தெரிவித்தார்.

“ காவல்நிலையத்துக்கு நாம் சென்று சந்தேக நபரைப் பார்த்த போது, அவர் மயக்கநிலையிலிருந்தார். அவரை மீட்டெடுக்க காவல்துறையினருடன் கடுமையாகப் போராடினோம். சந்தேக நபரை அழைத்துச் செல்ல மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு எந்த அதிகாரம் இல்லை என்று குற்ற தடுப்புப் பிரிவு பொறுப்பதிகாரி கடுமையாக எதிர்த்தார்.

இந்தச் சம்பவம் தொடர்பில் உரிய ஆதாரங்கள் கிடைத்துள்ளமையால் காவல்துறையினரின் சித்திரவதை தொடர்பில் மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அறிக்கை சமர்ப்பிக்கப்படும்” என்று மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாணம் இணைப்பாளர் கனகராஜ் தெரிவித்தார்.  #யாழ்  #சந்தேகநபர்  #மருத்துவமனை #இலங்கைமனிதஉரிமைகள்ஆணைக்குழு  #கல்வியங்காடு

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More