Home இலங்கை கொரோனா தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்

கொரோனா தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட வைத்தியர் மீது தாக்குதல்

by admin

கொரோனா வைரஸ் தொடர்பாக விழிப்புணர்வில் ஈடுபட்ட ஊர்காவற்றுறை சுகாதார மருத்துவ அதிகாரி மருத்துவர் பரா.நந்தகுமார் தாக்கப்பட்டுள்ளார். அவருடன் சென்ற யாழ்ப்பாணப் பல்கலை்ககழக ஊழியர் சங்கத் தலைவர் மீதும் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

நேற்று திங்கட்கிழமை (16) பிற்பகல் நல்லூர் றியோ ஐஸ்கிறீம் விற்பனை நிலையத்திற்கு முன்பாக இச்சம்பவம் இடம்பெற்றது. றியோ பணியாளர்களும் மேலும் சிலரும் இணைந்து இந்தத் தாக்குதலை நடத்தியுள்ளனர்.

சம்பவத்துடன் தொடர்புடைய றியோ பணியாளர்கள் இருவர் யாழ்ப்பாண காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு தடுத்துவைக்கப்பட்டுள்ளனர். மேலும் சிலர் தப்பியோடிவிட்டனர் என பாதிக்கப்பட்டவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

மருத்துவர் நந்தகுமார் மற்றும் அவரது நண்பரான யாழ்ப்பாணப் பல்கலைக்கழக ஊழியர் சங்கத் தலைவர் த.சிவரூபன் ஆகியோர் நேற்று பிற்பகல் கொரோனா விழிப்புணர்வில் ஈடுபட்டிருந்தனர். இதன்போது, வெளிநாட்டு குடிமக்கள் இருவர் றியோ ஐஸ் கிறீம் விற்பனை நிலையத்தினுள் செல்வதை அவதானித்தனர்.

அங்கு சென்ற மருத்துவரும் அவரது நண்பரும் குறித்த வெள்ளை இனத்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவ சிகிச்சைக்கு உட்படுத்தப்பட வேண்டியவர்கள் என்பதை றியோ விற்பனையாளர்களுக்கு எடுத்துக் கூறினர்.

இது தொடர்பாக யாழ்ப்பாணம் சுகாதார மருத்துவ அதிகாரிக்கு தகவல் வழங்கிய மருத்துவர் நந்தகுமார், அவர் வரும்வரை தமது நண்பருடன் அங்கு காத்திருந்தார். இதன்போது றியோ ஐஸ்கிறீம் நிலைய பணியாளர்களும் வேறு சிலரும் திடீரென இருவர் மீதும் மோசமாக தாக்குதல் நடத்தினர். கற்களாலும் எறிந்தனர்.

இதையடுத்து, அங்கிருந்து தப்பிச்சென்ற இவர்கள் இது தொடர்பாக காவல்துறையினருக்கு தகவல் வழங்கியதை அடுத்து, அங்கு சென்ற காவல்துறையினர் தாக்குதலாளிகள் இருவரை மட்டும் கைது செய்து காவல்நிலையம் கொண்டு சென்றனர்.

சம்பவம் தொடர்பாக மருத்துவரும் அவரது நண்பரும் காவல்தநிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்துள்ளனர்.  #கொரோனா   #விழிப்புணர்வு  #றியோ   #வைத்தியர்   #தாக்குதல்

Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More