Home இலங்கை பத்திரிக்கை செய்தியினை முகநூலில் விமர்சனம் செய்தவரை காவல்துறையினர் அழைத்து எச்சரிக்கை

பத்திரிக்கை செய்தியினை முகநூலில் விமர்சனம் செய்தவரை காவல்துறையினர் அழைத்து எச்சரிக்கை

by admin

பத்திரிக்கை செய்தியினை முகநூலில் விமர்சனம் செய்தவரை யாழ்ப்பாண காவல்துறையினர் அழைத்து எச்சரித்து விடுவித்துள்ளனர்.  யாழில்.இருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்றில் , நேற்றைய தினம் வெளியான தலைப்பு செய்தி தொடர்பில், ஒருவர் செய்திக்கும் , தலைப்புக்கும் தொடர்பில்லை என பத்திரிகையை விமர்சித்து முகநூலில் பதிவொன்றினை எழுதி இருந்தார்.

குறித்த முகநூல் பதிவுக்கு பலரும் கடுமையான விமர்சனங்களை முன் வைத்து கருத்திட்டிருந்தனர். இந்நிலையில் , பதிவை எழுதிய  நபருக்கு எதிராக யாழ்பாண தலைமை காவல்நிலையத்தில் பத்திரிகை நிறுவனத்தால் முறைப்பாடு செய்யப்பட்டது.
முறைப்பாட்டின் பிரகாரம் முகநூலில் பதிவிட்ட நபருக்கு சிங்கள மொழியில் எழுத்து மூல அழைப்பு விடுத்த காவல்துறையினர் , இன்று புதன்கிழமை மதியம் 1 மணிக்கு  காவல் நிலையத்திற்கு வருமாறு அழைப்பு விடுத்தனர்.
அதன் போது, அவர் தான் கடை நடத்தி வருவதாகவும் , கடை திறந்துள்ளதால் மாலை நேரம் வருவதாக கூறிய போதிலும் , காவல்துறையினர் அதனை ஏற்காது மதியம் 1மணிக்கு  காவல் நிலையத்திற்கு கட்டாயம் சமூகமளிக்க வேண்டும் என கட்டாயப்படுத்தி அழைத்துள்ளனர்.
காவல் நிலையத்தில், பத்திரிகை நிறுவனத்தின் முறைப்பாட்டின் பிரகாரம் , விசாரணைகளை முன்னெடுத்த  காவல்துறையினர் அச்சுறுத்தும் பாணியில் முகநூல் பதிவை நீக்குமாறு கூறியுள்ளனர். அதற்கு அவர் மறுப்பு தெரிவிக்கவே , இரு தரப்பையும் தலைமை பொறுப்பதிகாரியிடம் அனுப்பி வைத்தனர்.
இரு தரப்பையும் விசாரித்த யாழ்ப்பாண தலைமை காவல்துறை பொறுப்பதிகாரி பிரசாத் பெனார்ண்டோ , பத்திரிகையை விமர்சித்து எழுதிய முகநூல் பதிவு குற்றவியல் தவறு இல்லை எனவும், அதனால் காவல்நிலையத்தில் அது தொடர்பில் முறைப்பாடு செய்து நடவடிக்கை எடுக்க முடியாது  என பத்திரிகை நிறுவனத்திற்கு அறிவுரை கூறி இரு தரப்பையும்  அனுப்பி வைத்துள்ளார்.
இதேவேளை முகநூலில் பத்திரிகையை விமர்சித்து பதிவிட்டவர் , யாழ்.புறநகர் பகுதியில் கடை ஒன்றினை நடாத்தி வருகின்றார். அவரது கடையில் பத்திரிகைகளையும் விற்பனை செய்து வருகின்றார். நேற்றைய தினம் தமது பத்திரிகையை முகநூலில் விமர்சித்து கருத்திட்டமையால் , இன்றைய தினம் தமது பத்திரிகையின் விற்பனை உரிமத்தை குறித்த பத்திரிகை நிறுத்தியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. அதேவேளை அவரது கடைக்கு வந்திருந்த யாழில் இருந்து வெளிவரும் மற்றுமொரு பத்திரிகைகட்டும் களவாடப்பட்டு உள்ளமையும் குறிப்பிடத்தக்கது. #பத்திரிக்கை  #முகநூல்  #விமர்சனம்  #எச்சரிக்கை
Spread the love
 
 
      

Related News

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More