Home இலங்கை விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கும் நீதி கோரி போராட்டம்

விபத்தில் உயிரிழந்த சகோதரிகளுக்கும் நீதி கோரி போராட்டம்

by admin
மன்னார்-மதவாச்சி பிரதான வீதி,பரப்பான் கண்டல் சந்தியில் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி இடம் பெற்ற விபத்தில் சகோதரிகள் இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்திய வாகனத்தை செலுத்தி வந்த நபர் காவல்துறையினரினால் கைது செய்யப்பட்டு உடனடியாக மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டார்.
இந்த நிலையில் குறித்த இரு சகோதரிகளின் மரணத்திற்கும் நீதி கோரி குடும்ப உறவுகள் இன்றைய தினம் வெள்ளிக்கிழமை காலை 8.45 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்திற்கு முன் அமைதியான முறையில் சமூக இடை வெளிகளை பேணி பல்வேறு வசனங்கள் எழுதப்பட்ட பதாதைகளை ஏந்தியவாறு கண்டன போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர்.
எனினும் சம்பவ இடத்திற்கு சென்ற மன்னார் காவல்நிலைய பொறுப்பதிகாரி நாட்டின் தற்போதைய சூழ் நிலையை கருத்தில் கொண்டு மக்கள் ஒன்று கூடி இவ்வாறான போராட்டத்தை முன்னெடுக்க முடியாது. எனவே இவ்விடத்தை விட்ட உடனடியாக செல்லுமாறு கோரிக்கை விடுத்தார்.
எனினும் அவர்கள் அவ்விடத்தில் இருந்து செல்லாத நிலையில்காவல்துறையினரின் உதவியுடன் போராட்டத்தில் ஈடுபட்ட ஆண்கள், பெண்கள், சிறுவர்கள் என சுமார் 16 பேர்கள் மன்னார் காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
பின்னர் அவர்களின் பிரச்சினைகள் தொடர்பில் கேட்டு அறிந்து கொண்டதோடு, இவ்வாறான போராட்டங்களை தற்போதைய சூழ் நிலையில் செய்ய முடியாது என எச்சரித்ததோடு, உங்களின் பிரச்சினை தொடர்பில் மன்னார் நீதிமன்றத்தின் உதவியை நாடுமாறு கோரி விடுவித்தனர். இந்த நிலையில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் காவல்நிலையத்தில் இருந்து வீடு திரும்பினர்.
இதன் போது போராட்டத்தில் ஈடுபட்ட உறவுகள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,,,,
மன்னார் அஞ்சல் அதிபராக கடமையாற்றிய சந்தியோகு ரெறன்சியா(வயது-25), வைத்தியசாலை பெண் பரிசாரகராக கடமையாற்றும்  லின்ரா கோபிநாதன்(வயது-42) இரண்டு பிள்ளைகளின் தாய் ஆகிய இரு சகோதரிகளும் கடந்த ஏப்பிரல் மாதம் 9 ஆம் திகதி மதியம் மன்னார் பரப்பான் கண்டல் வீதியூடாக மோட்டார் சைக்கிலில் பயணித்துக் கொண்டிருந்த போது குறித்த பகுதியில் விபத்து ஏற்பட்டது.
இரண்டு சகோதரிகளும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர். விபத்தை ஏற்படுத்தியவர் கைது செய்யப்பட்டு பின்னர் மன்னார் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்டு பிணையில் விடுவிக்கப்பட்டார். விபத்தில் உயிர் இழந்த சகோதரிகளின் சடலம் அடக்கம் செய்யப்படுவதற்கு முன்னரே விபத்தை ஏற்படுத்திய நபர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.
எனவே உறவுகளாகிய எமக்கு எதுவித உதவிகளும் தேவை இல்லை.உயிரிழந்த இரு சகோதரிகளுக்கும் உரிய நீதி கிடைக்க வேண்டும்.இப்படியான ஒரு சம்பவம் இனி இடம் பெறக்கூடாது.
பணம் இருந்தால் எதனையும் செய்ய முடியும் என்பதற்காக ஏழைகளுக்கு அநீதி இடம் பெறக்கூடாது.எனவே குறித்த இரு சகோதரிகளுக்கும் நீதி கிடைக்க வேண்டும் என்பதற்காகவே குறித்த சகோதரிகளின் குடும்ப உறவுகாளாகிய நாங்கள் அமைதியான முறையில் போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர். #மன்னார்  #போராட்டம் #சகோதரிகள்
 

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More