Home இலங்கை திருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு

திருநெல்வேலி பொதுச் சந்தை நாளை முதல் வழமைக்கு

by admin

திருநெல்வேலி பொதுச்சந்தை வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு இன்று நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டது. நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்குச்சட்டம் நடைமுறைப்படுத்தப்பட்டதன் காரணமாக கடந்த மார்ச் மாதம் 24ஆம் திகதிக்கு பின்னர் யாழ்ப்பாணத்தில் உள்ள பொதுச் சந்தைகள் அனைத்தும் மூடப்பட்டன.

இந்த நிலையில் நாளை திங்கட்கிழமை யாழ்ப்பாணம் மாவட்டத்தில் உள்ள அனைத்து பொதுச் சந்தைகளும் மீள திறப்பதற்கு யாழ்ப்பாணம் மாவட்டச் செயலரினால் அனுமதியளிக்கப்பட்டது.யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச்சந்தை நாளை திங்கட்கிழமை மக்கள் பாவனைக்காக திறந்து விடப்படவுள்ளது. இன்றைய தினம் நல்லூர் பிரதேச சபையினரால் திருநெல்வேலி சந்தையில் வியாபார நடவடிக்கையில் ஈடுபட்டு வரும் வியாபாரிகளுக்கான இட ஒதுக்கீடு வழங்கும் பணி முன்னேடுக்கப்பட்டது.

யாழ்ப்பாணம் திருநெல்வேலி பொதுச் சந்தையில் 245 க்கும் மேற்பட்ட மரக்கறி வியாபாரிகள் வியாபார நடவடிக்கையை மேற்கொண்டு வருகின்றனர்.

கொரோனா தாக்கத்தின் காரணமாக சமூக இடைவெளியை பேணவேண்டிய நிலை காணப்படுகின்றமையினால் பொதுச் சந்தைகளில் வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுவோர் மற்றும் பொதுச் சந்தைக்கு வரும் பொது மக்களுக்கிடையில் சமூக இடைவெளி மற்றும் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற வேண்டிய நிலையில் இடஒதுக்கீடுகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்ற கூடியவாறு முன்னெடுக்கப்பட்டது.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் தவிசாளர் தியாகமூர்த்தி தெரிவித்ததாவது;

யாழ்ப்பாணம் மாவட்டச் செயலாளரின் அறிவுறுத்தலுக்கமைய நாளை மறுதினம் திங்கட்கிழமை திருநெல்வேலி பொதுச்சந்தை அதிகாலை 5 மணி முதல் மக்கள் பயன்பாட்டுக்காக மீள்த் திறக்கப்படவுள்ளது.

குறித்த சந்தையில் வியாபார நடவடிக்கைகளை மேற்கொள்ளும் வியாபாரிகளுக்கு சுகாதார நடைமுறைகளை பின்பற்றும் வகையில் இட ஒதுக்கீடுகள் எம்மால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இன்றைய இட ஒதுக்கீட்டின் போது சில முரண்பாடுகள் சந்தை வியாபாரிகளுக்கும் எமக்கு இடையில் ஏற்பட்டது. சந்தை வியாபாரத்தில் ஈடுபடும் வியாபாரிகள் சிலர் குறித்த பகுதியில் இரண்டு, மூன்று இடங்களில் ஒருவர் இதுவரை காலமும் வியாபாரத்தில் ஈடுபட்டவந்ததாகவும் அதனை தமக்கு தற்போதைய சூழ்நிலையிலும் வழங்குமாறு கேட்டுக் கொண்டதால் அந்த முரண்பாடு ஏற்பட்டது. எனினும் அனைவரையும் சமாதானம் செய்து இட ஒதுக்கீட்டை மேற்கொண்டுள்ளோம்.

காவல்துறையினர் மற்றும் இராணுவத்தினர் வருகை தந்து சமூக இடைவெளி பின்பற்றல் போன்ற நடவடிக்கைகளை ஆராய்ந்து சென்றுள்ளார்கள். எனினும் நாளை திங்கட்கிழமை அதிகாலை 5 மணி முதல் மாலை 6 மணி வரை திருநெல்வேலி பொதுச்சந்தை சந்தை நடடிக்கை வழமைபோல் இடம்பெறுவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் நல்லூர் பிரதேச சபையினரால் முன்னெடுக்கப்பட்டுள்ளது .– என்றார். #திருநெல்வேலி  #பொதுச்சந்தை #கொரோனா  #ஊரடங்குச்சட்டம்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More