Home இலங்கை விடுதலைப் புலிகள் தொடர்பான ஏ.எம்.சுமந்திரனின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை

விடுதலைப் புலிகள் தொடர்பான ஏ.எம்.சுமந்திரனின் கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை

by admin
தமிழீழ விடுதலைப் புலிகளின் போராளிகள் மீது ஏ.எம்.சுமந்திரன் அக்கறை கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள கருத்துக்கள் அனைத்தும் பொய்யானவை. அவருடைய கட்சிக்காரரே மறுதலிக்கும் அளவிற்கு கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாதென முன்னாள் ஈ.பி.ஆர்.எல்.எப். கட்சியின் தலைவரும், தமிழ் மக்கள் தேசிய கூட்டணியின் பாராளுமன்ற வேட்பாளருமான    சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று நண்பகல் ஊடகவியலாளர்களை சந்தித்து கருத்து வெளியிடும் போதே அவ்வாறு தெரிவித்தார்.
கடந்த சில வாரங்களுக்கு முன்பாக ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை, ஆயுதப் போராட்டத்தை நடத்திய தமிழீழ விடுதலைப் புலிகளை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சாரப்பட பல்வேறுபட்ட கருத்துக்கள் ஏ.எம்.சுமந்திரனால் கூறப்பட்டது.
அவருடை கருத்திற்கு அவர் அங்கம் வகிக்கும் தமிழரசு கட்சியின் அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் கண்டனம் தெரிவித்து பல அறிக்கைகளை வெளியிட்டிருந்தனர். அத்துடன், ஏ.எம்.சுமந்திரன் தொடர்பாக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தலைமைப்பீடத்தில் அழுத்தங்களை கொடுத்திருந்தார்கள்.
தமிழரசு கட்சி மாட்டுமல்லாமல் தமிழ் தேசிய கூட்டமைப்பின் அங்கம் வகிக்கின்ற ரெலோ கட்சியின் தலைவர் செல்வம் அடைக்கலநாதனும் கடும் கண்டனங்களை தெரிவித்து, ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலியுறுத்தியிருந்தார்.
இந்த விவகாரங்களுக்கு பின்னர் யாழ்ப்பாணம் வந்த ஏ.எம்.சுமந்திரன் பத்திரிகையாளர் சந்திப்பு ஒன்றை நடத்தியிருந்தார். அந்த சந்திப்பில் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளிகளை கட்சியில் இணைத்து கொள்வது தொடர்பாக அழுத்தங்களை தான் கொடுத்ததாக தெரிவித்திருந்தார்.
 தான் ஒருவன்தான் மட்டும்தான் முன்னாள் போராளிகளை இணைக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்தாகவும் அவர் குறிப்பிட்டிருந்தார். இந்த விடயம் தொடர்பாக தமிழரசு கட்சியின் கொழும்பு கிளையில் செயலாளராக உள்ள சட்டத்தரணி கே.வி.தவரசா என்பவர் முன்னாள் போராளிகளை இணைப்பதற்கு தான் கோரிக்கை விடுத்ததாக சுமந்திரன் கூறுவது முழுமையான பொய் என்று தெளிவுபட கூறியுள்ளார்.
முன்னாள் போராளிகளை கட்சியில் இணைப்பது என்பது பொதுவான கருத்தாக இருந்தும், ஏ.எம்.சுமந்திரன் தான் மட்டும்தான் அந்த கோரிக்கையை முன்வைத்ததாக சொல்வது முற்றிலும் பொய்யான தகவல் என்றும் கே.வி.தவராசா தனது கருத்தில் உறுதிபட தெரிவித்துள்ளார். அதிலும் இவ்விடயத்துடன் தொடர்பற்றவர் போல ஏ.எம்.சுமந்திரன் இருந்திருந்ததையும் அவர் நினைவு கூர்ந்துள்ளார்.
போராளிகளை இணைப்பது, இணைக்காமல் விடுவது தொடர்பில் தமிழரசு கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜாவும் கூட வவுனியாவில் நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் தங்களுடன் ஜனநாயக போராளிகள் கட்சியினர் பேசியதாகவும், அவர்களை இணைப்பது தொடர்பில் தமிழரசு கட்சியிலும், கூட்டமைப்பின் பங்காளி கட்சிகளுடனும் பேசி அதற்கான முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்திருந்தார்.
தேர்தல் நெருங்கும் சமயத்தில் போராளிகள் தொடர்பாகவும், அவர்களை கூட்டமைப்பில் இணைத்துக் கொள்வது தொடர்பாகவும், கட்சியின் தலைவரும், கூட்டமைப்பின் பேச்சாளரும் ஒவ்வொரு கருத்துக்களை கூறிவருவதை காணக்கூடியதாக உள்ளது.
தேர்தலுக்காக நாங்கள் எல்லோரும் போராளிகளுக்காக செயற்படுகின்றோம் என்ற தொனியில் கருத்துக்களை வெளியிடுபதையும் எங்களால் காணக்கூடியதாக உள்ளது. உண்மையாகவும் நேர்மையாகவும் போராளிகளை அரசியலில் இணைத்துக் கொள்ளுகின்றார்களா? இல்லாவிட்டால் தேர்தலுக்காக போராளிகளில் கரிசனை உள்ளது போன்று காட்ட முயற்சிக்கிக்கின்றார்களா? என்பது முக்கியமான கேள்வியாக தற்போது எழுந்துள்ளது.
ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று சொன்னவர்கள், ஆயுதம் தூக்கி போராடிய போராளிகளை எவ்வாறு கட்சியில் ஏற்றுக் கொள்வார்கள் என்பது ஒரு முரண்பாடானதும், எள்ளி நகையாடக்கூடியதுமான கருத்துக்களாக உள்ளது.
சிங்கள ஊடகவியலாளரிடம் ஆயுதப் போராட்டத்தை ஏற்றுக் கொள்ளவில்லை என்று கூறிவிட்டு, இங்குவந்து போராளிகளை இணைக்கப் போவதாக முரண்பாடான கருத்தை கூறும் ஏ.எம்.சுமந்திரன். வடக்கு கிழக்கை பிரதிநிதித்துவப்படுத்துகின்றோம், ஆகவே தமிழ் மக்கள் எங்களுக்கு இம்முறையும் வாக்களிக்க வேண்டும், நாங்கள் வந்தால் தான் எல்லாவற்றையும் சாதிப்போம் என்று கூறுகின்றார் என சுரேஸ்பிறேமசந்திரன் தெரிவித்துள்ளார்.அரசியல் கைதிகள் விவகாரம்

அரசியல்  கைதிகள் விடுதலை, காணி விடுவிப்பு, அபிவிருத்தி தொடர்பான விடயங்களை ஏ.எம்.சுமந்திரன் இப்போது பேசியிருக்கிறார். கைதிகள் விடுவிப்பு தொடர்பில் நான் ஏ.எம்.சுமந்திரனிடம் ஒரு கேள்வியை கேட்க விரும்புகின்றேன்.
கைதிகள் சில பேர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலர் நீதிமன்றங்களில் பிரகாரம் விடுவிக்கப்பட்டுள்ளார்கள். சிலருக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. மேலும் சிலருடைய வழக்குகள் இன்னமும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.
ஆகவே அரசியல் கைதிகளில் யாராவது ஒருவரையாவது நாடாளுமன்றத்தின் ஊடாகவோ அல்லது ஜனாதிபதி, பிரதமர் ஊடாகவோ பேசி, அந்த பேச்சுவார்த்தையூடாக இத்தனை அரசியல் கைதிகளை விடுவிக்கின்றோம் என்ற முடிவுக்கு வந்த எந்த ஒரு அரசியல் கைதியாவது விடுவிக்கப்பட்டாரா?
சட்டத்தரணிகளின் முயற்சியின் ஊடாக சிலர் பிணையில் விடுவிக்கப்படுவதும், சிலர் குற்றவாளிகளாக காணப்பட்டதுதான் நடந்து முடிந்திருக்கின்றதே தவிர ஏ.எம்.சுமந்திரன் கூறுவது போல் தமிழ் தேசிய கூட்டமைப்பாலோ அல்லது அதனின் தலைமைத்துவத்தாலோ விடுவிக்கப்பட்டார்கள் என்ற விடயம் நடந்ததாக இல்லை.
அரசியல் கைதிகளுக்காக சில விடயங்களை சாதித்தோம் என்று ஏ.எம்.சுமந்திரன் ஊடங்களின் முன் நின்று பொய் கூறுவது ஏற்றுக் கொள்ளப்பட முடியாத விடயம். இதே போன்றுதான் காணி விடுவிப்பும்.
வடக்கு மாகாணத்தில் எத்தனை ஏக்கர் காணிகள் தமிழ் தேசிய கூட்டமைப்பின் முயற்சியால் விடுவிக்கப்பட்டது? என்பதை ஏ.எம்.சுமந்திரன் தெளிவுபடுத்த வேண்டும். இன்னும் ஆயிரக்கணக்காக ஏக்கர் காணிகள்; இராணுவத்தின் கட்டுப்பாட்டில்தான் உள்ளது. இதுதான் யதார்த்தம்.
அரசுடன் ஆதரவாக இருந்து செயற்பட்ட தமிழ் தேசிய கூட்டமைப்பு என்ன விடயங்களை சாதித்துள்ளீர்கள் என்பதை அவர்கள் கூற வேண்டும்.
புதிய அரசியல்சாசனத்தை கொண்டுவர முடியாமலும், அரசியல் கைதிகளை விடுவிக்க முடியாமலும், காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் எந்த தீர்வும் இல்லாத நிலையில், நிலங்களை முழுவமையாக விடுவிக்க வைக்காத நிலையில் அரசிடம் இருந்து சில கோடிகளை பெற்றுக் கொண்டு வீதிகளை போட்டோம், கிணறுகளை திருத்தினோம், கோவில்களை கட்டினோம் என்று சொல்வது கூட்டமைப்பால் முடியும்.
எத்தனை போருக்கு வேலைவாய்ப்பு கிடைத்தது. அரசுடன் இணைந்திருந்த 5 வருடத்தில் வேலைவாய்ப்புடன் கூடிய எந்த அபிவிருத்தி வடக்கில் செய்யப்பட்டது?
தேர்தலுக்காக முழுமையாக தமிழ் மக்களை ஏமாற்றக்கூடிய வகையில் அவருடைய கட்சியில் இக்கின்றவர்களால் கண்டிக்கக் கூடிய விதத்தில் தொடர்ந்தும் கூச்சம் இல்லாமல் பொய்பேசி வருவது நிச்சயமாக ஏற்றுக் கொள்ளப்படமுடியாத விடயம். இதனை தமிழ் மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.தமிழரசு கட்சிக்குள் தற்போது பல அணிகள் பிரிந்து நிற்கின்றது. புலிகளை எதிர்ப்பவர்களும், புலிகளை ஆதரிப்பவர்களுமான கூட்டுக்களும் அந்த கட்சிக்குள் உருவெடுத்துள்ளது. இது தமது தேர்தல் வெற்றிகளை உறுதிப்படுத்தவும், தமக்கான விருப்பு வாக்கினை பெற்றுக் கொள்வதற்குமான பிரிவுகளாகவே உள்ளது.
ஒருவரை ஒருவர் தோற்கடிக்க வேண்டும் என்ற முனைப்புக்களே தமிழரசு கட்சிக்குள் இப்போது முன்னெழுந்துள்ளது எனவும் சுரேஸ் பிறேமச்சந்திரன் தெரிவித்துள்ளார். #விடுதலைப்புலிகள்  #சுமந்திரன்  #பொய்யானவை #சுரேஸ்பிரேமச்சந்திரன்

Spread the love
 
 
      

Related News

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More